Monday, August 18, 2008

ஆடி கருடன் - கஜேந்திர மோக்ஷம்

குட்டத்து கோல் முதலை துஞ்சக் குறித்தெறிந்த
சக்கரத்தார் ஸ்ரீநிவாசர் (closeup)


முன் பதிவில் பார்த்தோம் ஆனியில் சுவாதியன்று பெரியாழ்வார் எம்பருமானுக்கு பல்லாண்டு பாடியதை குறிக்கும் வகையில் கருட சேவை நடைபெறுவதை, அது போல பூரண சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் கஜேந்திர மோக்ஷத்தை உணர்த்தும் வகையில் ஆடி பௌர்ணமியன்று விஷ்ணுவாலயங்களில் கருட சேவை நடைபெறுகின்றது. திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் கஜேந்திர மோக்ஷ கருட சேவையின் சில படங்கள் இப்பதிவில் கண்டு களியுங்கள்.


ஆனைக்காக பொலிந்த கருடன் மேல் வரும் கரியான்
எழிற்கோலம் காணக் கண் கோடி வேண்டும்

பூர்வாச்சாரியார்கள் கஜேந்திர மோக்ஷத்தைப் பற்றி கூறும் போது பெருமாளே தாங்கள் யாணையை முதலையிடமிருந்து காத்தது பெரிதல்ல ஆனால் வந்த வேகம்தான் அருமை என்று பூரண சரணாகதி செய்த க்ஷணமே நாம் அவனுடைய சொத்து என்று உணர்த்துகின்றனர்
.

ஆடும் பறவையில் எம்பெருமான் பின் கோலம்
ஓடும் புள்ளேறி
சூடும் தண் துழாய்
நீடு நின்று அவை
ஆடும் அம்மானே

பைங்கண் மால் யானை படுதுயரம் காத்தளித்த செங்கண் மால் திருவடிகளே சரணம்

படங்களுக்கு நன்றி - http://www.svdd.com/

கஜேந்திர மோட்சம் பதிவைப் படிக்க கிளிக்குக இங்கே

Saturday, August 2, 2008

கருட பஞ்சமி விரதம்

வினதை சிறுவன் மேல் பவனி வரும் மலையப்பசுவாமி


அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்று பாடியுள்ளார் ஔவையார். ஆம கிடைத்தற்கரியது மானிடப்பிறவி. நாம் முற்பிறவியில் செய்த புண்ணிய பாவங்களின் பயனாக இந்த கர்ம பூமியில் நமக்கு இறையருளால் மனிதப்பிறவி கிட்டுகின்றது. இவ்விதம் அமையும் பிறவியில் நமக்கு இறைவன் பால் ஆழ்ந்த பக்தியும் நம்பிக்கையும் தூய நெறியுடன் வாழவும் அவரது அருள் வேண்டும். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனை அல்லும் பகலும் அனவரதமும் இதயக் கமலத்தில் நிறுத்தி பூஜிக்கவும், அவருடைய திவ்விய தரிசனத்தை பெறவும் நாம் முற்பிறவியில் நற்காரியங்கள் செய்திருக்க வேண்டும். மேலும் மறுமையில் முக்தி நிலை அடையவும் தூய நெறியில் வாழ்வது அவசியம். நமது தர்ம நெறியின் ஒவ்வொரு விதிக்கும் விஞ்ஞான பூர்வமான ஓர் அர்த்தம் உண்டு. இறைவனுக்கு அருகில் செல்ல உள்ளம் பக்குவப்பட வேண்டும், உள்ளம் பக்குவப்பட உடல் பக்குவப்பட வேண்டும், உடல் பக்குவப்பட உணவும் அதை உண்ணும் முறையும் பக்குவப்பட வேண்டும் இவ்வாறு உணவு, உடல் உள்ளம் மூன்றும் பதப்பட உதவுவனவே விரதங்கள்.
பெருமாள் கோவில்களின் காவலனும் கருட பகவானே

பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கும் உகந்த விரதம் ஒன்று உண்டு. ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. தமிழ் நாட்டில் கருட பஞ்சமி விரதம் மிகவும் பரவலாக அனுஷ்டிக்கப்படுவதில்லை என்றாலும் கருட சேவையைப் பற்றி எழுதி வருவதால் இவ்விரதத்தைப் பற்றி படித்த சில தகவல்களை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கருட பஞ்சமியன்று கருட தரிசனம் பெறுங்கள்


இந்த வருடம் நாக சதுர்த்தி 05/08/08 அன்றும், கருட பஞ்சமி 06/08/08 அன்றும் கொண்டாடப்படுகின்றது.

 கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.


கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். அன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். இது என்ன கருட பஞ்சமியன்று ஆதிசேஷனுக்கு பூஜையா என்று வியக்கின்றீர்களா? வினதையின் மைந்தன் கருடனின் மாற்றாந்தாய் கத்ருவின் மைந்தர்கள்தானே நாகங்கள் அவர்கள் செய்த சூழ்ச்சியினால்தானே வினதை அடிமையாக நேர்ந்தது அன்னையின் அடிமைத்தளையை களைய கருடன் தேவ லோகம் சென்று அமிர்தம் கொண்டு வர நேர்ந்தது அப்போதுதான் பெருமாளுடன் கருடன் போரிடும் வாய்ப்பும் வந்தது பின் பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியமும் கிட்டியது எனவே கருட பஞ்சமியன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம். மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே. இனி கருட பஞ்சமி பற்றியும் நாக சதுர்த்தி பற்றியும் அடியேன் படித்த இரு ஐதீகங்கள் அவற்றை தாங்களும் படிக்க கிளிக்குக கீழே.









காசியில் பறக்காத கருடன்கள் காசியில் கருடன் பறப்பதில்லை பல்லி சொல்லுவதில்லை என்பது ஐதீகம். இது ஏன் அவ்வாறு என்று அறிந்து கொள்வோமா? ஸ்ரீ இராமர் இராவணனை கொன்றதால் அவரை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொள்கின்றது. அப்பாவம் நீங்க அவர் சிவ பூஜை செய்ய வேண்டியது அவசியமாகின்றது. இராமேஸ்வரம் அடைந்தவுடன் சிவலங்கத்தை கொண்டு வர அனுமனை முக்தி நகரமாம் காசிக்கு அனுப்புகின்றார். காசியை அடைந்த அனுமனுக்கு அங்குள்ள ஆயிரமாயிரம் சிவலிங்களுள் எது சுயம்பு லிங்கம் என்று தெரியாமல் குழம்பி நின்றார். பூஜைக்கு குறித்த நேரமும் நெருங்குவதால் காசியின் காவல் தெய்வம் கால பைரவரிடம் அனுமதி பெறாமலேயே சுயம்பு லிங்கம் உள்ள இடத்தின் மேல் கருடன் வட்டமிட்டு குறிப்பிட்டுக் காட்ட பல்லியும் நல்லுரை சொல்லி சுயம்பு லிங்கத்தை அடையாளம் காட்டுகின்றது.


அனுமன் அந்த சுயம்பு சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது பைரவர் அவரைக் கண்டு நிறுத்தினார். உண்மையை அனுமன் உணர்த்த, தேவர்களும் ஸ்ரீ இராமரின் சிவபூஜைக்குத்தான் அனுமன் சிவலிங்கத்தை எடுத்து செல்கின்றார் என்வே அவரை நிறுத்த வேண்டாக் என்று வேண்ட , அவரை சிவலிங்கத்துடன் செல்ல அனுமதித்த கால பைரவர் அனுமனுக்கு உதவிய பல்லிக்கும், கருடனுக்கும் சாபம் கொடுக்கின்றார். எனவே காசியில் பல்லி சொல்வதில்லை, கருடன் பறப்பதில்லை என்பது ஐதீகம். இவ்வாறு தாமதமானதால் சீதா தேவியார் மணலால் லிங்கம் அமைக்க இராமர் சிவபூஜை செய்ததும், பின்னர் அனுமன் வருத்தப்படக்கூடாது என்று அவர் காசியில் இருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கே இராமேஸ்வரத்தில் முதல் பூஜை என்று வரம் கொடுத்ததும் தாங்கள் அனைவரும் அறிந்ததே.

இந்த கருட பஞ்சமி நன்னாளில் கருட தரிசனம் கண்டு இன்புற்று வாழ பிரார்த்திக்கின்றேன்.