Friday, January 30, 2009

திருநாங்கூர் பதினொரு கருட சேவை- 4(2008)

திருநாங்கூர் பதினொரு கருட சேவை


மாலை 6 மணியளவில் திருமஞ்சனம் முடிந்து பெருமாள்கள் அனைவரும் கருட வாகனத்திலும் ஆழ்வார் ஹம்ஷ வாகனத்திலும் மணவாள மாமுனிகள் ஷேச வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர். பின்னர் அலங்காரம் துவங்குகின்றது. மாலைகள் வர ஆரம்பிக்கின்றன. மாலைகள் மேல் மாலைகள் அமர்கின்றன, நடு நடுவே பட்டு பீதாம்பரங்கள் வருகின்றன அவையும் பெருமாள்களுக்கு சார்த்தப்படுகின்றன. பதினொரு கருட சேவையைக் காண வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது , கூட்டம் அலை மோதுகின்றது என்றுதான் சொல்ல வேண்டும். அலை அலையாக பக்தர்கள் ஒவ்வொரு பெருமளாக சென்று சேவித்து புறப்பாட்டிற்க்காக காத்து நிற்கின்றனர். பெருமாளின் கருட சேவையை கண்டு களியுங்கள்.

மணவாள மாமுனிகள் சேஷ  வாகனத்தில் முன் செல்ல கருட சேவை புறப்பாடு துவங்குகின்றது.
சேஷ  வாகனத்தில் மணவாள மாமுனிகள்


அடுத்து குமுதவல்லி நாச்சியாருடன் தங்க ஹம்ஸ( அன்னம்) வாகனத்தில் திருமங்கை மன்னன் பின் செல்கின்றார்.

  ஹம்ச வாகனத்தில் குமுதவல்லி நாச்சியாருடன் ஆலிநாடன், கலிகன்றி, நம் கலியன் ,கொற்ற வேல் பரகாலன், மங்கையர் கோன்,அருள் மாரி, அரட்டமுக்கி, அடையார் சீயம், திருமங்கையாழ்வார்.

மென்மையான அன்னம் முன்னே செல்ல அதன் வேகத்திற்க்கு ஏற்றவாறு பின்னே காய்சினப்பறவையான வலிமை மிகுந்த கருடன் செல்லும் ஆச்சரியம்தான் என்னே.

அன்று நள்ளிரவு மணவாள மாமுனிகள் முன் செல்ல, ஹம்ச வாகனத்தில் திருமங்கையாழ்வாரும் குமுத வல்லித் தாயாரும் தொடர, ஏகாதச பெருமாள்களும் எம்பெருமானை எப்போதும், எல்லா காலத்திலும் தாங்கும் பேறு பெற்ற பெரிய திருவடியாம், வேத சொரூபன் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிக்க திருவீதிப் புறப்பாடு நடைபெறுகின்றது. பதினோரு பெருமாள்களும் தெய்வப்புள்ளேறி ஒரே சமயத்தில் திருநாங்கூரின் நான்கு மாட வீதிகளையும் சுற்றி வரும் அந்த அழகைக் காண கண் கோடி வேண்டும்.

பொன் பக்ஷிராஜனில் ஆரோகணித்து ஒய்யாரமாக ஊர்ந்து வரும் பாலகனாய் பார் முழுதும் உண்டு ஆலிலையில் பள்ளி கொண்ட பிரான் திருத்தேவனார்தொகை மாதவப்பெருமாள்


காகேந்திரனில் ஆனந்தமாய் கூத்தாடி வரும்
திருமடந்தை மண் மடந்தை இருபாலும் திகழ நாங்கை நடுவுள் நின்ற திருஅரிமேய விண்ணகரம் சதுர்புஜ கோபாலர்

ஊழி வெள்ளம் முன்னகட்டிலொடுக்கிய திருதெற்றியம்பலம் செங்கண் மால் பள்ளி கொண்ட பெருமாள் சுபர்ணன் மேல்

நந்தா விளக்கு, அளத்தற்கு அரியான் திருமணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள்
பெரிய திருவடியில்

பையுடை நாகபப்டை கொடியான் திருத்தேவனார்தொகை மாதவப்பெருமாள்
தங்கப் புள்ளேறி வரும் அழகு

வேடார் திருவேங்கடம் மேய விளக்கு திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் வினதை சிறுவன் தோளின் மேல்

யானையின் துயரம் தீர்த்த
திருக்காவளம்பாடி கோபாலர்
ஆடும் புள்ளேறி பவனி வரும் அருட்காட்சி

கருத்மான் மேல் பார்த்தன்பள்ளி செங்கண்மால் பார்த்தசாரதிப் பெருமாள்

யானையின் துயர் தீர ஆழி தொட்ட திருவண்புருடோத்தமம் புருஷோத்தமர்
புள்ளூர்தியில்

மலர்மகளோடு மண்மகளும் உடன் நிற்ப மணிமாட நாங்கை நின்ற தி்ருச்செம்பொன்கோயில் ஹேமரங்கர் வேத சொரூபனான கருடனில் உலா

நாகப்பகையானில் அடலாழிக்கையன் திருவைகுந்த விண்ணகரம் வைகுந்தப்பெருமாள்

தூம்புடைப் பனைக்கை வேழம் துயர் கெடுத்தருளிய திருமணிக்கூடம் வரதராஜப்பெருமாள்
புள்ளூர்தியில் எழிலாக
பூர்வ ஜன்ம புண்ணியத்தால் மட்டுமே அந்த தெய்வீக அழகைக் காணும் பேறு நமக்கு கிட்டும். புறப்பாடு நிறைவு பெற அதிகாலை ஆகி விடும்.
திருமங்கையாழ்வாரின் முக அழகு

அடுத்த நாள் காலை ஆழ்வாருக்கு திருமஞ்சனம் திருப்பாவை சாற்றுமறை நடைபெறுகின்றது. மாலை திருநாங்கூரிலிருந்து புறப்பட்டு, திருவெள்ளக்குளத்து ஸ்ரீ அண்ணன் பெருமாளை இடர் களைய சரணம் புகுகிறார், பிறகு வரிவண்டு தேதென என்று இசைபாடும் அழகை திருத்தேவனார் தொகையில் ஸ்ரீ மாதவனை அனுபவித்து மங்களாசாசனம் செய்கிறார் நீலன்.

பிறகு திருவாலி எழுந்தருளி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை மங்களாசாசனம் செய்கின்றார் ஆழ்வார். திருநகரியை அடையும் போது பெரிய திருவடியில் வயலாலி மணவாளன் ராஜ கோபுரத்தின் முன்னே ஆழ்வாரை எதிர் கொள்ள காத்திருக்கின்றார். பின் ஆழ்வார் அங்கு அடைந்தவுடன் , பெருமாளும் ஆழ்வாரும் திருக்கோவிலில் செல்வதுடன் திருநாங்கூர் பதினோரு கருட சேவை இனிதே நிறைவு பெறுகின்றது. அப்போது

கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே
பற்றா வண் தடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை வற்றா நீர் வயல் சூழ் வயலாலி அம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேன்.
என்ற பாசுரசாற்று மறையுடன் இந்த தெய்வீக விழா இனிதே நிறைவடைகின்றது.

பெருமாளை கருட வாகனத்தில் சேவை சாதிக்கக் காண்போருக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதிகம். ஆகவே நாம் அனைவரும் உய்ய பதினோரு திவ்ய பெருமாள்களும் தரும் கருட சேவையை காணவும், ஆழ்வாரை நெல் வயல்களின் நடுவே நெற்கதிர்களை சாய்த்து மிதித்துக் கொண்டு பக்தர்கள் ஏழப்பண்ணி கொண்டு செய்யும் அழகையும் கண்டு களிக்க எத்தனை கோடி தவம் செய்திருக்க வேண்டுமோ?

என்னங்க ஆழ்வார், பெருமாள்களின் அழகைக் கண்டு தங்களுக்கும் திருநாங்கூர் செல்ல வேண்டும் என்று ஆவல் எழுகின்றதா? 

வரும் ஒன்பது மற்று பத்தாம் தேதிக்கு பொறுத்திருங்கள்.
சென்று வந்து உலகளந்த ஊழி பிரானாம், உம்பர் தொழும் திருமாலின் அருள் பெற பிரார்த்திக்கின்றேன்.
* * * * * *
இப்பதிவை ஒட்டிய முந்தையப் பதிவுகள்
திருநாங்கூர் பதினொறு திவ்ய தேசங்களைப்பற்றி அறிய கிளிக்குக
திருமங்கையாழ்வார் மஞ்சக்குளி உற்சவம் பற்றி காண கிளிக்குக மஞ்சக்குளி
ஏகாதச பெருமாள்களின் மங்களசாசன வைபத்தைப்பற்றிக் காண கிளிக்குக மங்களாசாசனம்
* * * * * *
தை அமாவாசை அன்று (26-01-09) சூரிய கிரகணம் வந்ததால் இவ்வருட திருநாங்கூர் கருட சேவை பௌர்ணமியன்று ,அதாவது 09-02-09 ஆழ்வார் திருநகரியிலிருந்து புறப்பட்டு மஞ்சக்குளி கண்டு திருமணிமாடக்கோவில் அடைதல். 10-02-09 பகலில் மங்களாசாசனம் இரவு கருடசேவை. 11-02-09 ஆழ்வார் திருநகரி திரும்புதல்.
படங்கள் உதவி :
திரு. தனுஷ்கோடி அவர்கள்.
2008 கருட சேவையின் படங்கள்.

Thursday, January 29, 2009

திருநாங்கூர் பதினொரு கருட சேவை-3 (2008)

பதினொரு பெருமாள்களின் மங்களாசாசனம்

ஆழ்வார் ஆராதித்த சிந்தனைக்கினியான் உபய நாச்ச்சியார்களுடன்

அரங்கனே நடத்தி வைத்த மஞ்சள் குளி, மணிகர்ணிகையாற்றில் கண்ட ஆழ்வாரும் குமுதவல்லி நாச்சியாரும், சிந்தனைக்கினியானுடன் திருமணிமாடக் கூடத்தில் ஆஸ்தானத்தில் இரவில் எழுந்தருளுகின்றனர்.
கருடசேவையன்று காலை முதலில் ஆழ்வார் முன் திருப்பாவை சாற்றுமுறை . கருடசேவைக்காக மற்ற பத்து திவ்ய தேசத்து பெருமாள்களும் பல்லக்கில் திருமணிமாடக்கூடத்திற்க்கு எழுந்தருளுகின்றனர். ஒவ்வொரு பெருமாளுக்கும் ஒவ்வொரு வித அலங்காரம். தன் அன்பனைக் காண அற்புத அலங்காரத்தில் வருகின்றனர் பெருமாள்கள் அனைவரும். அவர்கள் வந்த அழகைக் காணுங்களேன்.


வேடார் திருவேங்கடம் மேய விளக்கான திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் பட்டுப் பீதாம்பரங்கள் தொங்க எழிலாக பல்லக்கில் வந்தார் திருமணிமாடக் கூட கோவில் மற்றும் புஷ்கரிணிக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பந்தலுக்கு.


திருசெம்பொன்செய் கோயிலினுள்ளே அல்லிமாமலராள் தன்னொடும் அஞ்சனக்குன்றம் நின்றதொப்ப ஹேமரங்கர் திருமேனி முழுவதும் செம்பொன்னாக மின்ன வந்தார் .

மின்னனைய நுண்மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன் முடியொருபதும் தோளிருபதும் போயுதிர தன்னகரிற் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த திருவைகுந்த விண்ணகரத்து வைகுண்ட நாதர் ஆதி சேஷன் குடை பிடிக்க அழகாக அமர்ந்து வந்தார் பல்லக்கில்


அங்கையால் அடி மூன்று நீரேற்று அயன் அலர் கொடு தொழுதேத்த கங்கை போதரக்கால் நிமிர்த்தருளிய திருவண்புருடோத்தமத்து புருடோத்தமர் அபய கரத்துடன் வந்தார் அன்ன நடையிட்டு.


கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை காமருசீர் முகில் வண்ணன், காலிகள் முன் காப்பான் குன்றதனால் மழை தடுத்த திருஅரிமேய விண்ணகத்து குடமாடு கூத்தர் கூத்தாடி வந்தார் எழிலாக.

கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிறடர்த்த காளை அண்டர் கோன் நாங்கை மன்னு மாயன் பார்த்தன் பள்ளி பார்த்த சாரதி பெருமாள் ஒயிலாக வந்தார் பல்லக்கில்.
மண்ணிடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான், முனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்த்ற்று வீழ சரம் வளைத்த திருகாவளம்பாடி கண்ணன் வந்தார் செண்டு கையில் ஏந்தி.
இந்திரனும், இமையவரும், முனிவர்களும் சதுர்முகனும், கதிரவனும், சந்திரனும் எந்தை என்று ஏத்தும் திருத்தேவனார் தொகை மாதவர் வந்தார் ஒய்யாரமாக கருட சேவைக்கு.
சிலம்பிடைச் சிறுபரல்போல் பெரிய மேரு திருக்குளம்பில் கண கணப்பத் திருவாகாரம் குலுங்க நிலமடந்தை தன்னை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்த திருதெற்றியம்பலம் ரங்கநாதர் வந்தார் எழிலாக.
இவ்வாறு மெல்ல மெல்ல எல்லா திவ்ய தேசத்துப் பெருமாள்களும் எழுந்தருளுகின்றனர் பந்தலுக்கு முதலில் சிறிதாக இருந்த மக்கள் கூட்டம் பெரிதாகிக் கொண்டே போகின்றது, ஒவ்வொரு பெருமாளாக வர வர மலர்களை நாடி வண்டுகள் செல்வது போல பக்தர்களின் கூட்டம் அப்பெருமாளை சேவிக்க நகர்ந்து செல்கின்றனர். புகைப்படம் எடுப்பவர் சிலர், வீடியோப் படம் எடுப்பவர் சிலர், பாசுரம் சேவிப்போர் சிலர், பெருமாளை கண்ணாரக் கண்டு சேவிப்போர் பல்ர் என்று தமிழகத்தின் அனைத்து பிரதேசங்களிலிருந்து வந்த பக்தர்கள் குழுமுகின்றனர் பந்தலில்.

சிந்தனைக்கினியானுடன் குமுதவல்லி சமேத திருமங்கையாழ்வார்

சுமார் பன்னிரண்டு மணியளவில் அனைத்து பெருமாள்களும் வந்து சேர அவர்களை மங்களாசாசனம் செய்ய எழுந்தருளுகின்றார் குமுதவல்லி மணாளர் மணவாள மாமுனிகளுடன்.


பின் மங்களாசாசனம் துவங்குகின்றது ஒவ்வொரு பெருமாளாக ஆழ்வாருக்கு சேவை சாதிக்கும் போது அந்தப் பெருமாளை ஆழ்வார் மங்களாசாசனம் செய்கிறார் அந்த திவ்ய தேசத்து பாசுரத்தின் முதல் பாடலை பக்தர்கள் அனைவரும் சேவிக்கின்றனர். பின் ஆழ்வார் பெருமாளை வலம் வருகின்றார், ஆழ்வாருக்கு அந்தந்த திவ்ய தேசங்களிலிருந்து வந்த பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செய்யப்படுகின்றது. பதினோரு திவ்ய தேசப் பெருமாள்களின் மங்களாசாசனம் நிறைவுற்றதும் மணவாள மாமுனிகள் எழுந்தருளுகின்றார்.

அவர் தம் ஆச்சார்யராம் திருமங்கையாழ்வாரை தாம் திருமங்கையாழ்வாரின் வடிவழகிலீடுபட்டு அருளிய வடிவழகு சூர்ணிகையும் மற்றும்
வேலணைத்தமார்பும், விளங்கு திருவெட்டெழுத்தை
மாலுரைக்கத்தாழ்த்த வலச்செவியும்,
தாளிணைத் தண்டையும், தார்க்கலையன் நன்முகமும்
கண்டு களிக்குமென்கண்
என்று மற்ற தனியன்களாலும் மங்களாசாசனம் செய்கின்றார். அப்போது பகதர்களும் அந்த தனியன்களை சேவிக்கின்றனர். பின் அனைத்து பெருமாள்களும் மணிமாடக்கோவிலின் உள்ளே எழுந்தருளுகின்றனர்.
மாலை 4 மணி அளவில் பதினொரு திவ்ய தேசத்து எம்பெருமான்களுக்கும் திருமங்கை ஆழ்வாருக்கும் ஏக காலத்தில் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. திருமங்கையாழ்வாரின் சிறப்பு ததியாரதனை ( அன்ன தானம்) என்பதால் அனைத்து திவ்ய தேசங்களிலும் ததியாராதானை சிறப்பாக நடைபெறுகின்றது. கருட சேவைக்கு செல்பவர்கள் உணவைப் பற்றி கவலைப்படத்தேவையில்லை. திருமஞ்சனம் முடிந்த பின் கருட சேவைக்கு முன் பெருமாள்களிம் அலங்காரக் கோலத்தைக் காணுங்கள்.

இரவு நடைபெறும் கருடசேவையை அடுத்த பதிவில் காணலாம்.
இப்பதிவை ஒட்டிய முந்தையப் பதிவுகள்
திருநாங்கூர் பதினொறு திவ்ய தேசங்களைப்பற்றி அறிய கிளிக்குக
திருமங்கையாழ்வார் மஞ்சக்குளி உற்சவம் பற்றி காண கிளிக்குக மஞ்சக்குளி
* * * * * *
தை அமாவாசை அன்று (26-01-09) சூரிய கிரகணம் வந்ததால் இவ்வருட திருநாங்கூர் கருட சேவை பௌர்ணமியன்று அதாவது 09-02-09 மற்றும் 10-02-09 அன்று நடைபெற உள்ளது
படங்கள் உதவி :
திரு. தனுஷ்கோடி அவர்கள்.
2008 கருட சேவையின் படங்கள்.

Wednesday, January 28, 2009

திருநாங்கூர் பதினொரு கருட சேவை- 2 (2008)


திருநாங்கூர் கருட சேவை உற்சவத்தின் முதல் நாள் நிகழ்ச்சியாக தை அமாவாசையன்று திருமங்கையாழ்வாருக்கு "மஞ்சள் குளி திருவிழா" நடைபெறுகின்றது. திருவரங்கத்தில் திருமங்கையாழ்வார் தங்கியிருந்த போது அரங்கநாதர் முன் திருநெடுந்தாண்டகம் சேவித்தார், அதனால் மிகவும் பிரசன்னமான பெருமாள் ஆழ்வாரை ஏதாவது வரம் வேண்டுமாறு கூற, அவரும் புரட்டாசி மாதம் நடைபெறுகின்ற அத்யயன உற்சவத்தின் போது வேதங்களுடன், நம்மாழ்வாரின் திருவாய்மொழியும் சாற்றுமுறை செய்ய அருள் புரிய வேண்டும் என்று வேண்ட பெருமாளும் அவ்வண்ணமே அருளிச் செய்தார். அன்று முதல் நாலாயிர திவ்விய பிரபந்தமும் அத்யயன உத்சவத்தின் போது சாற்றுமுறை செய்யப்படலாயிற்று. ஆழ்வாரின் இந்த பக்திக்காக, பெருமாள் ஆழ்வாரை சிறப்பிக்க வேண்டி தனக்கு நடை பெறும் மஞ்சள் குளி இனி அவருக்கும் நடைபெற வேண்டும் என்று அருள் பாலித்தார். திருமங்கை ஆழ்வாருக்கு ஒவ்வொரு வருடமும் வட காவேரியாம் கொள்ளிடக் கரையில் மஞ்சள் குளி நடைப்பெற்றது, முதல் குளியலை நம்பெருமாளே, தானே தன் கையால் நடத்தி வைத்தார்.
ஆழ்வாரின் அந்திம காலத்திற்குப் பிறகு அவரது சகோதரியின் கணவர், திருவரங்கத்தை விடுத்து ஆழ்வாரின் அவதாரத் தலமான திருக்குறையலூர் வந்து தங்கினார். ஆழ்வாரின் மூர்த்திக்கு நாங்கூரை ஒட்டி ஓடும் மணிகர்ணிகை ஆற்றங்கரையில் அவர் மஞ்சள் குளியல் உற்சவத்தை 8ம் நூற்றாண்டிலே தொடங்கினார் அன்று முதல் இன்று வரை அது தொடர்கிறது.
கருட சேவைக்கு திருவாலியிலிருந்து குமுதவல்லி நாச்சியாருடன் புறப்படும் திருமங்கையாழ்வார்
வயல்களில் பயிர்களை மிதித்துக் கொண்டு வரும் ஆழ்வார்
தை அமாவாசையன்று அதிகாலை 3 மணிக்கு திருவாலி திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார், தன் தர்ம பத்தினி குமுத வல்லி நாச்சியாருடன் , அவர் ஆராதித்த சிந்தனைக்கினியான் பெருமாள், உபய நாச்சியார்களுடன் பல்லக்கில் புறப்பாடு கண்டருளி வயல் வழியில் இறங்கி பயிரை மிதித்துக்கொண்டு முதலில் திருக்குறையலூர் ஸ்ரீ உக்ர நரசிம்மப் பெருமாள் கோவிலை அடைந்து அவரை மங்களாசாசனம் செய்கின்றார். அடுத்து ஸ்ரீ வீர நரசிம்மப் பெருமாள் கோவிலை அடைந்து அவரை மங்களாசாசனம் செய்கின்றார் பரகாலர்.
இராஜகோபாலன் , காவளம்பாடி
திருநாங்கூரில் உள்ள திருக்காவளாம்பாடி ஸ்ரீ கோபாலனை , "காவளம்பாடி மேய கண்ணனே! களை கண் நீயே" என்று சேவிக்கின்றார் கலிகன்றி.
வரதராஜப்பெருமாள்
பின் திருமணிக்கூடத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜப்பெருமாளை, "திருமகள் மருவும் நாங்கூர்த் திருமணிக் கூடத்தானே" என்று மங்களாசாசனம் செய்கின்றார் பரகாலன்.

பார்த்தசாரதி
அன்று நிறைவாக திருபார்த்தன் பள்ளி ஸ்ரீ பார்த்த சாரதியை பரகால நாயகியின் தாயாய் "பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே" என்று மங்களாசாசனம் செய்கின்றார் ஆலி நாடன்.
உச்சிக் காலத்திற்கு முன் மணிகர்ணிகை ஆற்றை அடைகிறார். பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் இடுப்பளவு தண்­ணிரில் ஆழ்வாரின் பெரிய திருமொழியில் இருந்து ஆழ்வாரின் ஆச்சாரியரான திரு நறையூர் நம்பியையும், திருவரங்கத்து அழகிய மணவாளானையும் மங்களா சாசனம் செய்து ஆழ்வார் பாடிய பாசுரங்களை சேவிக்கின்றனர். இவ்விரு திவ்ய தேசங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மாலை மற்றும் பீதாம்பரங்களினால் பரிவட்டத்தால் ஆழ்வாருக்கு மரியாதை செய்யப்படுகின்றது.
மஞ்சள் குளியலின் போது திருமங்கை ஆழ்வார் சிந்தனைக்கினியானுடன்
பின் மஞ்சள் குளியல் மண்டபத்தில் எழுந்தருளும் ஆழ்வாருக்கு சஹஸ்ர தாரா மஞ்சள் குளி என்னும் திருமஞ்சனம் நடை பெறுகின்றது. சஹஸ்ர தாரை தட்டில் ஆழ்வார் வழிபட்ட சிந்தனைக்கு இனியன் என்னும் பெருமாளின் திருமூர்த்ததிற்க்கு செய்யப்படும் மஞ்சள் நீர் முதலில் பெருமாளுக்கு திருமஞ்சனம் ஆகி பின் ஆழ்வாருக்கும் திருமஞ்சனம் ஆகின்றது. பின் திருப்பாவை சாற்று மறை நடைபெறுகின்றது.

மாலையில் அலங்கரிக்கப்பட்ட ஆழ்வார் திருமணிமாடக்கோவில் ஸ்ரீ நாராயணப் பெருமாளை"மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே" என்று மங்களாசாசனம் செய்கின்றார் அருள்மாரி.
திருமணிமாடக்கோவிலில் ஆழ்வார் ஆஸ்தானம்
பின், நல்ல "வெந்தழல் மூன்று நால் வேதம் ஐவேள்வியோடு ஆறங்கம் வல்ல அந்தணர் வாழும்" திருவண்புருடோத்தமத்தில் ஸ்ரீ புருஷோத்தமனை மங்களாசாசனம் செய்கின்றார் மான வேற் கலியன்.
புருஷோத்தமன்
திருவைகுந்த விண்ணகரத்தில் ஸ்ரீ வைகுந்த நாதனை நாங்கூர் "வைகுந்த விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே" என்று மங்களாசாசனம் செய்கிறார் வாள் கலியன்.
வைகுந்த நாதன்
திருசெம்பொன்செய் கோவிலில் அல்லி மாமலராளுடன் ஸ்ரீ செம்பொன் செய் அரங்கரை "நாங்கை நன்னடுவுள் செம்பொன் செய் கோயிலினுள்ளே கடல்நிறவண்ணன் தனனை நான் அடியேன் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே" என்று மங்களாசாசனம் செய்கிறார் நம் கலியன்.
செம்பொன் செய் அரங்கர்
ஒரு கிளி மற்றொரு கிளிக்குக் கல்வி கற்பித்ததை திருத்தெற்றியம்பலத்தில் ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாளை "திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே" என்று வணங்குகிறார் குமுதவல்லி மணாளர்.
பின்னர் அரிமேய விண்ணகரத்தில் குடங்களை எடுத்தேறவிட்டு கூத்தாடிய கோவை "அண்டமுறும் அலைகடலினொலி திகழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே" என்று அனுபவிக்கின்றார் ஆழ்வார்.

அன்றைய தினம் இறுதியாக திருமணிமாடக் கோவிலில் ஆஸ்தானம் கண்டருளுகிறார் ஆழ்வார். இங்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறுகின்றது.
************ தை அமாவாசை அன்று (26-01-09) சூரிய கிரகணம் வந்ததால் இவ்வருட திருநாங்கூர் கருட சேவை பௌர்ணமியன்று அதாவது 09-02-09 மற்றும் 10-02-09 அன்று நடைபெற உள்ளது. ******** இப்பதிவை ஒட்டிய முந்தையப் பதிவுகள் திருநாங்கூர் பதினொறு திவ்ய தேசங்களைப்பற்றி அறிய கிளிக்குக திருநாங்கூர்