Saturday, July 18, 2009

கல்கியின் கருட சேவை

கல்கி அவதாரம்தான் இன்னும் எடுக்கவில்லையே, எப்படீங்க கல்கியின் கருட சேவைன்னு தலைப்பு தப்பா இருக்குதேன்னு யோசிக்கறிங்களா?

அடியேன் சொன்னதில்லீங்க இது ஆழ்வார்களின் கடைகுட்டி, பெருமாளிடமே அஷ்டாக்ஷ்ர மந்திரோபதேசம் பெற்று, அதிகமான திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செஞ்ச திருமங்கையாழ்வார் இப்பெருமாளை இப்படித்தாங்க மங்களாசாசனம் செய்திருக்கறாருங்க.

.....தடம்பருகுகருமுகிலைத் தஞ்சைக்கோயில் தவநெறிக்குஓர்பெருநெறியை,
 வையம்காக்கும் கடும்பரிமேல்கற்கியைநான் கண்டுகொண்டேன்
கடிபொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

இப்ப தெருஞ்சுதுங்களா எந்த திவ்ய தேசம்ன்னு, ஆமாங்க திருக்கடல்மல்லை ( மஹாபலிபுரம்) தாங்க இந்த திவ்ய தேசம்.

பெருமாள்: தல சயனப் பெருமாள் ( ஆதி சேஷன் இல்லாமல் தரையில் நான்கு திருக்கரங்களுடன், வலத் திருக்கரத்தை திருமார்பில் ஞான முத்திரையாக, கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன், ஒரு கரத்தை தலைக்கு வைத்துக் கொண்டு பெருமாள் சேவை சாதிக்கின்றார்)
தாயார் : பெருமாள் போலவே தாமரை இல்லாமல் நிலத்தில் அமர்ந்து சேவை சாதிக்கும் நில மங்கைத் தாயார்.
உற்சவர் : உலகுய்ய நின்றான், தலசயனத்துறைவார்.
தீர்த்தம் : புண்டரீக புஷ்கரிணி , கருடநதி
விமானம் : ஆனந்த விமானம்

கருட சேவைக்காக பத்தி உலாத்தலில் 
எழுந்தருளும் உலகுய்ய நின்றான்

திருமங்கை மன்னன் இத்தலசயனப்பெருமாளை நின்றவூர் நித்திலமாகவும் கண்டு சேவித்திருக்கின்றார்.

இனி இத்தலத்தின் மற்ற சிறப்புகளைக் காண்போமா?
திருக்கடல் மல்லை என்னும் இத்தலம் மாமல்லபுரம், மஹாபலிபுரம் என்றும் அழைக்கப்படுகின்றது. மஹாபலி சக்கரவர்த்தி வாமனனிடம் கேட்டுப்பெற்ற வரத்தின் மூலம் இந்த ஊரை ஆண்டு வந்ததால் மஹாபலிபுரம் என்று ஆயிற்று என்பர். நரசிம்மவர்ம பல்லவன் மாமல்லன் என்று அழைக்கப்பட்டான் அவன் ஆண்ட ஊரானதால் மாமல்லபுரம் என்றாயிற்று என்பர்.

தமருள்ளம் தஞ்சை தலையரங்கம்தண்கால் தமருள்ளந்தண்பொருப்புவேலை - 
தமருள்ளும் மாமல்லை கோவல் மதிக்குடந்தையென்பரே
ஏவல்லஎந்தைக்கிடம் - 

என்று பெருமாள் உரையும் இடங்களை பட்டியிலிட்ட முதல் ஆழ்வார்களில் ஒருவரான, கவுமோதகி என்னும் கதையின் அம்சமான பூதத்தாழ்வார் ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் குருக்கத்தி மலரில் திருவவதாரம் செய்த தலம்.

பெருமாள் 27 திவ்ய தேசத்தில் கிடந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். அவற்றில் ஆதிசேஷன் இல்லாமல் நிலத்தில் ஸ்தல சயனப் பெருமாளாக ( தரை கிடந்தான்) சேவை சாதிக்கும் தலம். மனித உருவில் வந்ததால் சங்கு சக்கரங்களும் இல்லை, ஸ்ரீதேவி , பூதேவியும் நாபியில் இருந்து பிரம்மனும் இல்லை. புண்டரீக முனிவர் சமர்பித்த ஆயிரம் இதழ் தாமரையில் திருவடிகளை வைத்த வண்ணம் சேவை சாதிக்கின்றார் பெருமாள்.

புண்டரீக முனிவருக்காக பாற்கடலில் இருந்து நிலமங்கையுடன் ஓடிவந்து தரிசனம் தந்த தலம்.

அயோத்தி, மதுரா, மாயாபுரி, காசி, காஞ்சி, அவந்திபுரி, துவாரகை என்னும் மோட்சத்தலங்களில் கிடைக்கும் புண்ணியத்தை விட பல ஆயிரம் மடங்கு புண்ணியம் கிடைக்கும் ஸ்தலம்.

மாசி மகத்தன்று (கும்ப மாதம் பௌர்ணமி) சூரிய உதய காலத்தில் தீர்த்த ஸ்நானம் செய்ய புண்ணியம் வழங்கும் ஸ்தலம்.

திருமங்கையாழ்வார் 26 பாசுரங்களாலும், பூதத்தாழ்வார் ஒரு பாசுரத்தாலும் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

பூதத்தாழ்வார் தாம் பாடிய இரண்டாந்திருவந்தாதியில் "அன்பே தகளியா" என்னும் பாசுரத்தில், நாரணற்கு ஞானத்தமிழ் புரிந்த நான் என்று பாடியிருப்பதால், இவரை "பெருந் தமிழன்" என்று அழைக்கின்றனர்.

உலகுய்ய நின்றானின் முன்னழகு
( படத்தை கிளிக்கி பெரிதாக்கி பார்க்கவும்)

ஸ்தல புராணம்: புண்டரீக முனிவர் ஒரு சமயம் பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமனுக்கு ஆயிரம் இதழ் கொண்ட ஒரு அற்புதத் தாமரை மலரை அர்ப்பணம் செய்ய அவா கொண்டார். அதற்காக கடலைக் கடப்பதற்காக கடல் நீரை தன் கைகளினாலேயே இறைத்து வற்றச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். கடலை கையால் இறைப்பது என்பது ஆகின்ற காரியமா? இல்லைதான் ஆனாலும் பெருமாளின் மேல் அதீத நம்பிக்கைக் கொண்ட புண்டரீக முனிவர் பெரும் நம்பிக்கையில் அப்பணியில் ஈடுபட்டார். தன் கருமத்திலேயே கண்ணாக ஈடுபட்டிருக்கும் புண்டரீக முனிவருக்கு அருள அந்த க்ஷீராப்தி நாதன் நிலமங்கைத் தாயாருடன் ஒரு வயோதிகர் உருவத்தில் வந்து என்னய்யா? கடல் தண்ணீரை கையால் இறைப்பது சாத்தியமா? என்று வினவினார். முனிவரும் சளைக்காமல் அகத்தியர் கடல் முழுவதையும் குடிக்கவில்லையா? என்று பதில் தர, முனிவரின் திட பக்திக்கு பிரசன்னமான பெருமாள் ஐயா நானும் உங்களுடன் இறைக்கிறேன் என்று கூறி சிறிது நேரம் இறைத்தபின், தான் களைத்து விட்டதாகவும் எனவே தனக்கு பசிப்பதாகவும் உணவு தருமாறு புண்டரீக முனிவரிடம் வேண்ட தமது பர்ணசாலைக்கு சென்று உணவு கொண்டுவந்து பார்த்த போது முதியவரைக் காணவில்லை. ஆனால் அவர் கண்டது பெருமாளை வலக் கரத்தை தலைக்கு வைத்துக் கொண்டு இருக்கரங்களால் தனது திருவடியே உய்யும் வழி என்று சுட்டிக்காட்டும் கோலத்தில் புண்டரீக முனிவரின் தாமரை மலரில் கால்களை வைத்த வண்ணம் ஸ்தல சயனப் பெருமாளாக சங்கு சக்ரதாரியாக, வைர கிரீடத்துடன், பீதாம்பரதாரியாய், ஸ்ரீவத்ஸம், வனமாலாதாரியாய் சேவை சாதித்துக் கொண்டிருந்தார். இன்றும் கை கூப்பிய நிலையில் பெருமாளை சேவிக்கும் புண்டரீக ரிஷியை கருவறையில் சேவிக்கலாம்.

உற்சவர் உலகுய்ய நின்றான் தமது திருக்கரத்தில் புண்டரீக மஹாரிஷி சமர்பித்த தாமரை மலரை ஏந்திய வண்ணம் சேவை சாதிக்கின்றார். அதாவது புண்டரீகரின் பக்தியை உலகத்தோர்க்கு உணர்த்தும் வண்ணம் பெருமாள் சேவை சாதிக்கின்றார்.

பெருமாள் தன் கரத்தினால் கடல் அலைகளை தொட்டு சாந்தி படுத்தியதால் இக்கடல் "அர்த்த சேது" என்று அழைக்கப்படுகின்றது. மாசி மகத்தன்று அதிகாலை சூரிய உதய காலத்தில் நீராட புண்ணியம். வருடத்தில் 365 நாட்களும் முன்னோருக்கு தர்ப்பணம் செய்யலாம்.

முதலில் கடற்கரையில் கோவில் இருந்திருக்க வேண்டும், 14ம் நூற்றாண்டில் விஜய நகர மன்னன் பராங்குசன் தற்போது ஊர் நடுவில் உள்ள இக்கோவிலை கட்டியுள்ளார்.

தலசயனத்துறைவாரின் பின்னழகு


கருட வாகனத்தில் பெருமாள்

தாயார் நிலமங்கைத்தாயாருக்கு துளசி அர்ச்சனை செய்ய கணவன் மனைவியிடையே ஒற்றுமை வளரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தாயார் சந்நி்தி முகப்பில் நெய்யால் மெழுகி சக்கரையினால் கோலமிடுகின்றனர்.

வலவெந்தை ஞானப்பிரான்

ஏனத்தினுருவாகி நிலமங்கையெழில் கொண்டான்
வானத்திலவர் முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள
கானத்தின் கடல்மல்லை தலசயனத்து உறைகின்ற
ஞானத்தினொளியுருவை நினைவார் என் நாயகரே

என்று நிலமங்கைத்தாயாரையும், பெருமாள் ஞானப்பிரானாக விளங்கும் பாங்கையும் மங்களாசாசனம் செய்கின்றார் ஆலி நாடன். இந்த மஹா வராகர் அகிலவல்லித் தாயாரை வலத்தொடையில் தாங்கி சரம சுலோகத்தை உபதேசிக்கும் கோலத்தில் சேவை தனிக் குடவறைக் கோவிலில் வலவெந்தையாக சேவை சாதிக்கின்றார்.

செங்கோல் ஏந்தி எழிலாக
 புள்ளேறி ஊர்ந்து வரும் பெருமாள்


சித்திரை மாதம் விசாக நட்சத்திரத்தை தீர்த்த நாளாகக் கொண்டு பத்து நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. விசாகத்தன்று புண்டரீக புஷ்கரிணியில் தீர்த்தம் கொடுக்கின்றார் பெருமாள். இப்பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு கருட சேவை. வைகானச ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெறுவதால் ஐந்தாம் நாள் இரவு கருட சேவை. (வைகானச ஆகமக் கோவில்களில் மூன்றாம் நாள் அதிகாலை கருட சேவை நடைபெறும். காலை கருட சேவையில் கோபுர வாசல் தரிசனம் சிறப்பு. )

ஐப்பசியில் பூதத்தாழ்வார் பத்து நாள் அவதாரத்திருவிழா, திருத்தேரில் பூதத்தாழ்வார் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். 10ம் நாள் இவர் பெருமாளை மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகின்றது. மாத அவிட்ட நட்சத்தி்ரத்தன்று இவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகின்றது. கோவில் எதிரே இவர் பிறந்த நந்தவனம் உள்ளது.

அஞ்சிறைப் புள் தனிப்பாகன் மன்னும்
 கடல் மல்லை மாயவன் எழிற்கோலம்

கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிப் பேர் மல்லை என்று 
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே

காய்சினப்பறவையில் உலா வரும் காய்சின வேந்தன்

ஆதி வராகர் : இப்பகுதியை ஆண்ட ஹரிசேகர மன்னன், இடவெந்தைப்பிரானான, திருவிடந்தைப் பெருமாளை தினமும் சேவித்த பின் அடியவர்களுக்கு அன்னமிட்டு அதன் பின்னரே உணவு உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருந்தான். ஒரு நாள் மஹா விஷ்ணு பூமிதேவித் தாயாருடன் மனித ரூபத்தில் வந்து மன்னரிடம் உணவு கேட்டார். மன்னன் தான் வராகரைத் தரிசித்த பின் அன்னமிடுவதாக கூறியும் அவர்கள் கேட்காததால் அவர்களுக்கு அன்னம் படைத்தான். அதை உண்ட மஹாவிஷ்ணு வலது தொடையில் தாயாரை அமர்த்தி லக்ஷ்மிவராகராக சேவை சாதித்தார். அதைக் கண்டு மகிழ்ந்த மன்னன் வராகருக்கு தனிக்கோவில் அமைத்தான். ஸ்தல சயனப் பெருமாளுக்கும் முந்தைய மூர்த்தி என்பதால் இவர் ஆதி மூர்த்தி என்று அழைக்கப்படுகின்றார்.

கருட சேவை பின்னழகு
**********************

கடல் மல்லை இராஜ கோபுரம்


புலங்கொள் நிதிக்குவையோடு புழைக்கைம்மா களிற்றினமும் நலங்கொள்நவமணிக்குவையும் சுமந்து எங்கும் நான்றொசித்து கலங்களியங்கும் மல்லைக் கடல்மல்லைத்தலச்சயனம்
வலங்கொள்மனத்தாரவரை வலங்கொள் என்மடநெஞ்சே.



என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த கடல் மல்லைத் தலசயன ஆலயத்தின் இராஜ கோபுர வாசலில் உள்ள சில சிற்பங்கள்


எப்போதும் போல் புகைப்படங்கள் கொடுத்து உதவிய தனுஷ்கோடி அவர்களுக்கு நன்றி.

Saturday, July 11, 2009

நங்க நல்லூர் பஞ்ச கருடசேவை

தருமமிகு சென்னை என்று வள்ளலார் சுவாமிகளால் சிறப்பிக்கப் பெற்ற சென்னை மாநகரம் வளர வளர சுற்றுப்புற பகுதிகள் எல்லாம் கான்க்ரீட் காடுகளாக மாற ஆரம்பித்தன. இவ்வாறு உருவான பகுதிதான் நங்கநல்லூர் பகுதி. தமிழர்கள் எங்கு சென்றாலும் தங்கள் பாரம்பரியத்தை மறப்பதில்லை. அது போல தாங்கள் வழிபடும் தெய்வங்களையும் மறப்பதில்லை. அவர்கள் குடியேறும் இடங்களில் தங்கள் தங்கள் தெய்வத்திற்க்கு புதுப் புது கோவில்களை கட்டி வழிபடுகின்றனர். அவ்வாறு பழவந்தாங்கல் என்னும் புகை வண்டி நிலையத்தை சுற்றி நங்கநல்லூர் பகுதி வளர்ந்தது. அப்பகுதி வளர வளர பலப்பல திருக்கோவில்களும் அப்பகுதிகளில் வந்தன, 32 அடி விஸ்வரூப ஆஞ்சனேயர் ஆலயம் மிகவும் சிறப்பு பெற்றது. மேலும் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம், இராகவேந்திரர் அதிஷ்டானம், இராஜராஜேஸ்வரி ஆசிரமம் என்று பல்வேறு ஆன்மீக திருக்கோவில்கள் அமைக்கப்பட்டன. அது போலவே சுற்றியுள்ள மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், உள்ளகரம் ஆகிய பகுதிகளிலும் பல்வேறு ஆலயங்கள் அமைந்தன. இப்பகுதியில் உள்ள சில அன்பர்கள் இணைந்து நாங்கூரில் நடைபெறுவது

பஞ்ச கருட சேவை அறிவிப்புப் பலகை

பஞ்ச கருட சேவை என்றுதான் அறிவிப்பு வந்தது ஆனால் செல்லம்மாள் வித்யாலயா சென்ற போது ஒரு இன்ப அதிர்ச்சி ஆறு பெருமாள்கள் சேவை சாதித்தனர்.
ஓடாதவாளரியின் உருவாகி இரணியனை வாடாத வள்ளுகிரால் பிளந்தளந்த மால்

ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ பெருமாள்

நங்கநல்லூர்

கோடானு கோடி புண்ணீயம் செய்திருந்தால் மட்டுமே பெருமாளை பெரிய திருவடியாக் கருடனில் சேவிக்க முடியும் அதுவும் அவரே மனமுவந்து நம் அருகில் வந்து சேவை சாதிக்கின்றார் என்றார் எவ்வளவு பேறு பெற்றிருக்கின்றோம்.
*********
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே! 
நெடியானே! வேங்கடவா! நின்கோயிலின் வாசல்
அடியாரும்வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்து உன்பவளவாய் காண்பேனே.

ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள்

கீழ்கட்டளை

புள்ளை ஊர்வான் பெருமாள், அவருடைய கொடியும் புள்ளே. கருடன் வேத ஸ்வரூபன், கருடனில் பெருமாள் வலம்வருவதால் பெருமாள் வேதத்தின் உட்பொருளாக விளங்குகின்றார்.
************
என்னப்பனெனக்காயிருளாய் என்னைப்பெற்றவளாய் பொன்னப்பன்மணியப்பன்முத்தப்பன் என்னப்பனுமாய் மின்னப்பொன்மதிள்சூழ் திருவிண்ணகர்சேர்ந்தவப்பன் தன்னொப்பாரில்லப்பன் தந்தனன்தனதாள்நிழலே.

ஸ்ரீ ஒப்பிலியப்ப பெருமாள்

இராம் நகர் -மடிபாக்கம்

கருடனில் பெருமாள் வருவது மிக்க விசேஷம், அருள் பாலிப்பதில் ஒரு நொடி கூட தாமதிப்பதில்லை எனவேதான் எல்லா திவ்ய தேசங்களிலும் கருடன் நின்ற கோலத்தில் எப்போதும் புறப்படத் தயாரான நிலையில் சேவை சாதிக்கின்றார்.
***********

ஆடியாடி அகம்கரைந்து இசை
பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி எங்கும் 
நாடிநாடி நரசிங்கா! என்று 
வாடிவாடும் இவ்வாணுதலே.


ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ பெருமாள்
ஆதம்பாக்கம்

நதியில் விழுந்த கட்டை எதைப்பற்றியும் கவலைப் படாமல் கடலை அடைவதைப் போல காய்சினப் பறவை ஏறி அருள் பாலிக்கும் பெருமாளை பற்றினால் நாமும் முக்தி அடையலாம்.

**************

மன்னுபுகழ்க்கௌசலைதன் மணிவயிறுவாய்த்தவனே! தென்னிலங்கைக்கோன்முடிகள் சிந்திவித்தாய்! செம்பொன்சேர் கன்னிநன்மாமதிள்புடைசூழ் கணபுரத்தென்கருமணியே! என்னுடையவின்னமுதே! இராகவனே! தாலேலோ!


ஸ்ரீ கோதண்டராமர்,   மடிப்பாக்கம்
*************

முனிஇவ்வுலகேழும் இருள்மண்டியுண்ண முனிவரொடுதானவர்கள்திசைப்ப வந்து மன்னுகலைநால்வேதப்பொருளையெல்லாம் பரிமுகமாய் அருளியஎம்பரமன் காண்மின்


ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமாள்
நங்கநல்லூர்
************
ஒப்பிலியப்பன் - கோதண்டராமர்

கைம்மானமதயானை இடர்தீர்த்தகருமுகிலை 
கைம்மானமணியை அணிகொள்மரகதத்தை
எம்மானைஎம்பிரானைஈசனை என் மனத்துள்
அம்மானை அடியேன் அடைந்துய்ந்துபோனேனே.

லக்ஷ்மி ந்ருஸிம்ஹர், ஸ்ரீநிவாசர், ஒப்பிலியப்பர்

கவளமாகதத்தகரியுய்யப் பொய்கைக் கராம் கொளக் கலங்கி உள்நினைந்து துவள மேல்வந்துதோன்றி வன்முதலை துணிபடர்ச்சுடுபடைதுரந்தோன்

அன்றிமன்றொன்றிலம்நின்சரணேயென்று அகலிரும் பொய்கையின்வாய் நின்றுதன்நீள்கழலேத்திய ஆனையின்நெஞ்சிடர்தீர்த்தபிரான்

ஒப்பிலியப்பர், லக்ஷ்மி ந்ருஸிம்ஹர், கோதண்ட ராமர்,


ஆறு பெருமாள்களும் ஒன்றாக சேவை சாதிக்கும் அழகு
பலபலவேயாபரணம் பேரும் பலபலவே
பலபலவேசோதி வடிவு பண்பெண்ணில் பலபலகண்டுண்டு கேட்டுற்றுமோந்தின்பம் பலபலவேஞானமும் பாம்பணை மேலாற்கேயோ


எப்படி இருந்ததுங்க எங்க ஊர் பஞ்ச கருட சேவை???


அடுத்த பதிவில் இன்னோரு திவ்ய தேசத்தின் கருட சேவையை தரிசக்கலாம்.

Friday, May 8, 2009

வைத்தியர் கருட சேவை

திருஎவ்வுள் திவ்ய தேசம்
இராஜ கோபுரம்

இப்பதிவில் நாம் காணப்போகும் கருட சேவை திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாளுடையது ஆகும். இவர் சாலிஹோத்ர முனிவர் பர்ண சாலையில் தானே வந்து கிடந்த பெருமாள். மது கைடபர்களை அழித்து வேதியர்களை காப்பாற்றிய பெருமாள். வள்ளலாரின் தீராத வயிற்று வலியை தீர்த்து வைத்த வைத்திய வீரராகவப் பெருமாள். இக்கலியுகத்தில் சாலிஹோத்ர முனிவரின் தலைமேல் கையை வைத்த நிலையில் புஜங்க சயனத்தில் அற்புதமாக சேவை சாதிக்கும் பெருமாள். திருமழிசையாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த பெருமாள். இன்றும் தன்னை நம்பி வந்து சரணடைபவர்களின் பிறவி நோயை மட்டும் அல்லாது உடல் நோயையும் தீர்க்கும் பெருமாள்.


வீரராகவப்பெருமாள் உபய நாச்சிமார்களுடன்
இந்த வீக்ஷாரண்ய க்ஷேத்திரத்தில் பத்ரிகாசிரமத்திலிருந்து வந்த சாலிஹோத்ர முனிவர், ஹ்ருதபாப நாசினி குளக்கரையில் பர்ணசாலை அமைத்து ஸ்ரீமந்நாராயணை நினைத்து பரமபதம் வேண்டி தவம் செய்து வந்தார். சாலிஹோத்ரர் என்பது காரணப்பெயர்.  சாலி என்றால் நெல் அளக்கும் படி. இவரது பெற்றோர் சந்தான பாக்கியம் வேண்டி 28000 சாலி நெல் கொண்டு ஒரு வருடம் யாகம் செய்து, இவரை பிள்ளையாகப் பெற்றனர். எனவே இவருக்கு சாலிஹோத்திரர் என்று பெயரிட்டனர்.


 இவர் ஒரு வருடம் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து தான் வருடன் முழுவதும் சேகரித்த நெல்லைக் கொண்டு அமுது பண்ணி அதை தை அமாவாசையன்று பெருமாளுக்கு நிவேதனம் செய்தார். அப்போது ஒரு முதிய வேதியர் அங்கு வந்தார், தங்கள் பர்ணசாலைக்கு வந்த அதிதியை அன்புடன் வரவேற்று அவருக்கு பாத பூஜை செய்து அவருக்கு அன்னத்தின் ஒரு பகுதியை அளித்தார். அதை உண்ட முதியவர், இன்னும் பசியாக உள்ளது என்று மறு பகுதியையும் உண்டு விட்டு சென்றார். 
சாலிஹோத்திரர் பசியுடனே தவத்தை தொடர்ந்தார். 
அடுத்த வருடம் அதே நாள் அதே முதியவர் வந்தார், இப்போதும் அவரை உபசரித்த சாலிஹோத்ர முனிவர் அவருக்கு அன்னத்தைப் படைத்தார். அனைத்து அன்னத்தையும் உண்ட முதியவர் உண்டு முடித்த பின் படுக்க எவ்வுள்? என்று வினவினார். அதாவது எங்கே படுத்து சிறிது சிரமப்பரிகாரம் செய்து கொள்ளலாம் என்றார். முனிவரும் தனது பர்ண சாலை குடிசையைக் காட்ட அதில் சென்று படுத்துக் கொண்டார் அந்த முதியவர். மாலை நேரம் ஆகியும் அவர் வெளியே வராததைக் கண்ட முனிவர் சன்னலின் வழியே உள்ளே நோக்க அப்படியே ஆனந்தத்தில் கூத்தாட ஆரம்பித்து விட்டார். உள்ளே பெருமாள் தனது பாம்பணையில் ஒய்யாரமாக சயனித்து பீதம்பரதாரியாய், சங்கு சக்கரம் ஏந்தி, மார்பில் ஸ்ரீவஸ்தம், கௌஸ்துபம் மின்ன, வனமாலை, துளசிமாலை அசைந்தாட பிரசன்ன வதனத்துடன் ஒய்யாரமாக சேவை சாதித்து கொண்டிருந்தார். திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாளே, நஞ்சரவில் துயில் கொண்ட நாதனே, படுத்த பைந்நாகணைப் துயிலமர்ந்த வேந்தே, அரவினணை மேலானே , அனந்த சயனனே, பையரவினணைப் பாற்கடலுள் பள்ளி கொண்ட பரம மூர்த்தியே இங்கு அடியேன் பொருட்டு தானே வந்து சேவை சாதித்தீரே என்று அவரை பலவாறு போற்றிய சாலிஹோத்ர முனிவரைப் பார்த்து என்ன வரம் வேண்டும் என்று பெருமாள் வினவ, ஐயனே எமக்கு சேவை சாதித்த கோலத்திலேயே இங்கு தாங்கள் இருந்து பக்தர்களின் குறை தீர்க்க வேண்டும் என்று வேண்ட பெருமாளும் அவ்வாறே நாம் எல்லோரும் உய்ய இன்றும் அதே கிடந்த கோலத்தில் புஜங்க சயனத்தில் இன்றும் சேவை சாதித்துக்கொண்டிருக்கிறார் வைத்திய வீரராகவராக.
பெருமாள் கேட்ட எவ்வுள் என்ன என்று யோசித்தீர்களா? எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக இருப்பவர் பெருமாள். ஆகவே உன் இதயத்தின் உள்ளேயா அல்லது இந்த வீட்டின் உள்ளேயா? என்று பெருமாள் கேட்டார் என்று பரனூர் மகாத்மா அவர்கள் எவ்வுள் என்பதற்கு அருமையான விளக்கம் தருவார்.
ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் திருஎவ்வுள்

பாலனாகிஞாலமேழுமுண்டு பண்டு ஆலிலைமேல்
 சாலநாளும் பள்ளிகொள்ளும் தாமரைக்கண்ணன், எண்ணில் நீலமார்வண்டுண்டுவாழும் நெய்ந்தலந்தண் கழனி
 ஏலநாறும்பைம்புறவில் எவ்வுள் கிடந்தானே



-->
இத்தலத்தில் பெருமாளை வேண்டிக்கொண்டு உப்பும் மிளகும் சேர்த்து வேண்டிக்கொண்டும், ஹுருத பாப நாசினி தீர்த்தத்தில் வெல்லம் கரைத்து வழிபட்டும் நோய் தீர்ந்தவர்கள் பல்லாயிரம் பேர்.


ஸ்ரீ விஜயகோடி விமானம்
குளக்கரையிலிருந்து திருக்கோயில்
ஹ்ருதபாபநாசினி திருக்குளம்
-->

இத்தலத்தின் தீர்த்தம் ஹுருதபாப நாசனி என்று அழைக்கப்படுகின்றது. கங்கையினும் சிறந்த தீர்த்தம் இத்திருக்குளம். இக்குளத்தின் தண்ணீர் எவரது உடலில் படுகின்றதோ அவர்களின் பாபங்கள் எல்லாம் கரைந்து விடுகின்றன, மனக்குறைகள் எல்லாம் தீருகின்றன. அமாவாசை தினங்களில் அதிலும் பெருமாள் இத்தலம் வந்து கிடந்த தை அமாவாசையன்று இத்தீர்த்ததில் நீராடி விஜய கோடி விமானத்தில் பள்ளி கொண்ட பெருமாளை சேவிக்க அனைத்து பாபங்களிலும் இருந்தும் விடுபடுவர் என்பது ஐதீகம். பக்தர்கள் தங்கள் சர்ம நோய் தீர பால், மற்றும் வெல்லத்தை கரைக்கின்றனர். வெல்லம் கரைவது போல் நோய் கரைவதாக ஐதீகம். வருடத்தில் இரண்டு முறை இத்திருக்குளத்தில் தெப்போற்சவம் கண்டருளுகின்றார் வீரராகவப்பெருமாள். பிரம்மாண்டமாக இருந்த திருக்குளம் தற்போது தகுந்த பராமரிப்பு இல்லாமல் சுருங்கி விட்டது நீர் நீராழி மண்டபத்தை சுற்றி மட்டுமே சிறிது தண்ணீர் உள்ளது மற்ற இடம் நந்தவனமாகி விட்டது.

கன்றை நினைத்து ஓடி வரும் பசு போல அஞ்சிறைப் புள் ஏறி நாம் எல்லோரும் உய்ய ஓடி வரும் அச்சுதன் வீர ராகவப் பெருமாள்

. ....செங்கண் மாற்(கு) என்றும் படையாழி புள்ளூர்தி
பாம்பணையான் பாதம் அடையாழி நெஞ்சே! ...

-->
தை அமாவாசையை தீர்த்த நாளாகக் கொண்டு ஒரு பிரம்மோற்சவம், மற்றும் சித்ரா பௌர்ணமியை தீர்த்த நாளாகக் கொண்டு ஒரு பிரம்மோற்சவம் என வருடத்தில் இரு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. தினமும் காலையும் மாலையும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் சேவை சாதிக்கின்றார்.
--> தங்க கருட சேவை மூன்றாம் நாள் காலை நடைபெறுகின்றது.
இப்பதிவில் தாங்கள் காணும் கருட சேவைப் படங்கள் சித்திரை பிரம்மோற்சவத்தின் போது எடுக்கப்பட்டவை


வீரராகவர் பின்னழகு


தை மாதம் குளிர் காலம் என்பதால் கருட சேவை காலை 5:30 மணிக்கு கோபுர வாசல் தரிசனம். ஈகாடு செல்கின்றார் பெருமாள். ஈகாடு கனகவல்லித் தாயாரின் பிறந்த வீடு. மஹா லக்ஷ்மித் தாயார் தர்மசேனன் என்னும் மன்னன் மகளாக பிறந்து வசுமதி என்னும் திருநாமத்துடன் வளர்ந்து வந்தாள். தாயாரை ஆட்கொள்ள பெருமாள் ஒரு இராஜகுமாரனாக வந்து ஒளிந்திருந்த மது கைடபர்களை அழிக்க சுதர்சன சக்கரம் ஏவி அவர்களை அழித்து, பின் வசுமதியைக் கண்டு சொக்கி தர்மசேனனிடம் வசுமதியின் கரம் வேண்டினார். முதலில் வீரராகவரை சேவித்து வரும்படிக்கூற இரு மனம் ஒன்றினால் தெய்வம் அங்கே தோன்றுவார் என்று கூறிய இராஜ குமாரன், தான் வசுமதியை திருமணம் செய்து கொண்டு அங்கேயே இருந்து விட சம்மதிக்கின்றார். எனவே இருவர் திருமணமும் நடைபெறுகின்றது. அவர்கள் குல வழக்கப்படி புது மணமக்கள் வீரராகவப் பெருமாளை சேவிக்க சென்றனர் அப்போது அனைவரும் வியக்கும் வண்ணம் இருவரும் மறைந்தனர். அன்று தர்மசேனனுக்கு கொடுத்த வாக்கிற்காக பெருமாள் தை பிரம்மோற்சவத்தின் போது தனது மாமியார் அகமான ஈகாடு செல்கின்றார். சித்திரை பிரம்மோற்சவம் கோடைக்காலத்தில் நடைபெறுவதால் கோபுர வாசல் சேவை அதிகாலை நான்கு மணிக்கு நடைபெறுகின்றது. அஞ்சிறைப் புள் ஏறி அச்சுதன் Toll gate , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மண்டபம் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து திருவமுது கண்டருளி திருக்கோவிலுக்கு திரும்பி வருகின்றார்.



குழற்கோவலர் மடப்பாவையும் மண்மகளும் திருவும் நிழற்போல் வளர்கண்டு நிற்கும் கொல்? மீளும் கொல் ! அழற்போல் அரும் சக்கரத்தண்ணல் விண்ணோர் தொழக் கடவும் தழற்போல் சினந்த அப்புள்ளின் பின்போன தனி நெஞ்சம்.

குளிர்ந்த அழகிய திருத்துழாய் மாலை அணிந்தவனும், நெருப்பினைப் போல அழிக்கும் ஆற்றல் பெற்ற திருச்சக்கரத்தை ஏந்தியவனும், நித்திய சூரிகள் தொழுது வணங்கும்படியாக தீப்போலும் சினமிக்க கருடாழ்வானை வாகனமாகக் கொண்டு விளங்கும்படியனவனுமான எம்பெருமான் அக்கருடப் பறவை ஏறிச்செல்லும் போது என் தனியான மனதானது அக்கருட வாகன எம்பெருமான் மீது சென்று விட்டது. குழலூதும் ஆயர் குலத்தில் தோன்றிய நப்பின்னைப் பிராட்டி, பூமி பிராட்டியும், பெரிய பிராட்டியும் எப்போதும் நிழல் போல் பிரியாது விளங்கும் அவர்களைக் கண்டு எனது மனம் அவ்விடத்து விடாது நிற்குமோ? அல்லது என்னிடம் திரும்பி வருமோ?


-->
என்னங்க உங்க மனத்தையும் கொள்ளை அடிச்சுட்டு போயிட்டாரா? காய்சினப் பறவை ஏறி பறந்து வரும் காய்சின வேந்தர் வைத்திய வீரராகவர்.


பின்னழகு மூன்றாம் நாள் மாலை ஹனுமந்த வாகனத்தில் சேவை சாதிக்கின்றார் பெருமாள்.