Sunday, February 3, 2008

கருட சேவை - 6

திருமலை கருட சேவை
பாசுரங்களின் எண்ணிக்கப்படி திருவரங்கத்திற்கு அடுத்தபடி பாசுரங்கள் பாடப்பெற்ற திவ்ய தேசம் திருப்பதி - திருமலை. பெருமாள் கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய் செடியாய வல்விணைகள் தீர்க்கும் திருமாலாய் , நெடியானாய் வேங்கடவனாய் சேவை சாதிக்கும் தலம்.
மதுரகவியார், தொண்டரடிப்பொடியாழ்வார் தவிர மற்ற பத்து ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்த திவ்ய தேசம்
.
திருமலையின் ஏழு மலைகள் சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், அஞ்சனாசலம், ஸ்ரீ வேங்கடாசலம், ரிஷபாசலம், அனந்தாசலம் ஆகியவை ஆகும்.

ஆதி சேஷன் ரூபத்தில் இருப்பதால் - சேஷாசலம்.

வேதங்களால் நிறைந்திருப்பதால் - வேதாசலம்.

கருடனால் வைகுண்டத்திலிருந்து பூலோகத்திற்கு கொண்டு வரப்பட்டதால் - கருடாசலம்.

விருஷாபாசுரனை சம்ஹரித்து அவனுக்கு மோக்ஷம் கொடுத்ததால் - விருஷபாத்ரி.

திரேதா யுகத்தில் அஞ்சனா தேவி தவம் இருந்து அனுமனைப் பெற்றதால் -அஞ்சனாத்ரி.

துவாபர யுகத்தில் ஆதிசேஷனையும் வாயு பகவானையும் தூண்டி அனந்த பர்வதத்திஅயும் கொண்டு வந்ததினால் - அனந்தாத்ரி.

சர்வ பாவங்களும் தஹிக்கப்பட்ட புண்ணிய ஷேத்திரமானதால் - வேங்கடாத்ரி
.
இத்தலத்தில் கருடனுக்கு இன்னுமொரு சிறப்புமுண்டு. கோவிலின் அருகில் உள்ள கோனேரியை (திருக்குளத்தை), கருடன் தான் வைகுண்டத்து விரஜா நதியில் இருந்து உருவாக்கினான்! .

வேங்கடம் என்றால் இரண்டு அர்த்தங்கள் உண்டு அதாவது வேம்- அழிவில்லாத கடம் - ஐஸ்வர்யம் நீங்காத செல்வம் நிறைந்திருக்கும் தலம். வாஸ்து சாஸ்திரத்திற்கு ஒரு நல்ல உதாரணம் திருமலைக் கோவில்.

வேம்- பாவம் கடம்- எரித்தல் அதாவது நமது பாவங்களை எல்லாம் எரிக்கும் தலம் திருவேங்கடம்.

பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் மாலை கருட சேவையின் ஒரு தனி சிறப்பு கருட சேவையன்று மூலவர் வேங்கடேசருக்கு அணிவிக்கப்படும் மகர கண்டியும், லக்ஷ்மி ஹாரமும் கருட சேவையன்று மட்டும் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படுகின்றன. சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாளின் திருமாலையை அணிந்து கொண்டு சேவை சாதிக்கின்றார் பெருமாள் இன்று. கருடசேவைக்காகவே ஒரு மாலையை அணிந்து அனுப்புகின்றாள், கூடவே தான் தாங்கியிருந்த கிளியையும் அனுப்புகிறாள் கோதை நாச்சியார்.


சங்கமாகடல்கடைந்தான் தண்முகில்காள்! வேங்கடத்துச்
செங்கண்மால்சேவடிக்கீழ் அடிவீழ்ச்சிவிண்ணப்பம்
கொங்கைமேல்குங்குமத்தின் குழம்பழியப்புகுந்து ஒருநாள்
தங்குமேல் என்னாவிதங்குமென்றுரையீரே.

என்று அந்த குளிரருவி கோவிந்தனுக்காகவே கனவு கண்ட கோதை நாச்சியார் .

பிரம்மோற்சவம் தவிர பெருமாள் கருட சேவை தந்தருளும் நாள் தை மாத இரத சப்தமி நாள். அன்று அதிகாலை சூரியப் பிரபை வாகனத்தில் சேவை சாதிக்கும் பெருமாள் மாலை சந்திரப்பிரபை வாகனத்தில் சேவை சாதிக்கின்றார். மேலும் பெரிய திருவடியாம் கருடன், சிறிய திருவடியாம் அனுமனிலும் சேவை சாதிக்கின்றார் பெருமாள். ஒரு வருடம் இரத சப்தமியன்று பெருமாளின் கருட சேவையை தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது அதை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.


மலையப்ப சுவாமிக்கு கற்பூர ஹாரத்தி

மலையப்ப சுவாமியின் திருமுடிமுதல் திருவடிவரை அருமையாக சேவியுங்கள


சிறிய திருவடியில் மலையப்ப சுவாமி

திருமழிசைப் பிரானின் ஒரு பாசுரம்

புள்ளதாகிவேதநான்கும் ஓதினாய் அதன்றியும்
புள்ளின்வாய்ப்பிளந்து புட்கொடிப்பிடித்தபின்னரும்
புள்ளையூர்தியாதலால் அதென்கொல்? மின்கொள்நேமியாய்!
புள்ளின்மெய்ப்பகைக் கடல்கிடத்தல் காதலித்தே.

புள் என்றால் பறவை அதை திருமழிசைபிரான் எவ்வாறு எடுத்து ஆண்டிருக்கின்றார் பாருங்களேன்.

புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் - அன்னமாகி நான்கு வேதங்களும் ஓதிய பெருமாளே.

புள்ளின் வாய்ப் பிளந்து - கொக்காக வந்த பகாசுரனின் வாயைப் பிளந்த பெருமாளே.

புட்கொடி பிடித்த - கருடக் கொடியைக் கொண்ட பெருமாளே.

புள்ளையூர்தியாதலால் - வேத சொரூபியான கருடனில் உலா வரும் பெருமாளே.

புள்ளின்மெய்ப்பகை - கருடனின் பகைவனான பாம்பணையில் பாற்கடலில் மாய்த்துயில் கொண்ட பெருமாளே.

08-02-02 அன்று திருநாங்கூரிலே 11 ( ஏகாதச) கருட சேவை எனவே அடுத்த பதிவிலிருந்து திருநாங்கூர் கருட சேவை பற்றிய பதிவுகள் வந்து சேவியுங்கள்.

திருவேங்கடமுடையானின் திருப்பள்ளியெழுச்சியை பொருளுடன் படிக்க சொடுக்குக சுப்ரபாதம்

4 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அழகான பதிவு! அழகான படங்கள்!
நன்றி கைலாஷி ஐயா!

//திருமலையின் ஏழு மலைகள் சேஷாசலம், கருடாசலம், அஞ்சனாசலம், ஸ்ரீ வேங்கடாசலம், நாராயணாசலம், ரிஷபாசலம், அனந்தாசக்லம் ஆகியவை//

சில சமயங்களில் வேதாத்ரி என்றும் சொல்வதுண்டு!

//வேம்- பாவம் கடம்- எரித்தல் அதாவது நமது பாவங்களை எல்லாம் எரிக்கும் தலம் திருவேங்கடம்//

இது பற்றிய ஒரு பெரிய விவாதமே நடந்து ஓய்ந்தது! இங்கே!!
http://verygoodmorning.blogspot.com/2007/07/13.html

//பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் மாலை கருட சேவையின் ஒரு தனி சிறப்பு கருட சேவையன்று மூலவர் வேங்கடேசருக்கு அணிவிக்கப்படும் மகர கண்டியும், லக்ஷ்மு ஹாரமும் கருட சேவையன்று மட்டும் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்பதுகின்றன//

ஆமாம்! இரவு நேரக் கருட வாகனத்தில் நான்கு நான்கு அடுக்குகளால் ஆன புராதனமான மகர கண்டியைக் கண்குளிரக் காணலாம்!

//கருடசேவைக்காகவே ஒரு மாலையை அணிந்து அனுப்புகின்றாள்//

மாலையுடன், கிளியும் அனுப்புகிறாள் கோதை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஒரு வருடம் இரத சப்தமியன்று பெருமாளின் கருட சேவையை தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது அதை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்//

இந்த ஆண்டு ரத சப்தமி எப்போது கைலாஷி ஐயா?

Word verification optionஐ எடுத்து விடுங்களேன்!

S.Muruganandam said...

நன்றி கண்ணபிரான் அவர்களே. விவாதத்தை நானும் சென்று படிக்கிறேன்.

கிளியும் அனுப்புகிறாள் கோதை என்பதை சேர்த்துக் கொள்கிறேன் தகவல்களுக்கு நன்றி.

இந்த வருடம் இரத சபதமி 13-02-08 புதன் கிழமையன்று வருகின்றது.

S.Muruganandam said...

Word Verification optionஐ எடுத்து விட்டேன்.