Sunday, December 7, 2008

அலர்மேல் மங்கை தாயார் கருட சேவை

அகலகில்லேன் இறையும் என்று திருமாலின் திருமார்பில் நித்ய வாசம் செய்யும் திருச்சானூர்  அலர்மேல் மங்கைத்தாயாருக்கு கார்த்திகை பஞ்சமி திதியை தீர்த்த நாளாகக் கொண்டு பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. அது போலவே   சென்னை திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்திலும் தாயாருக்கு பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

அப்பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் மாலை தாயார் கருட வாகன சேவை தந்தருளுகின்றார். அன்னையின் அருட்கோலத்தின் சில காட்சிகள்.

விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே சோதி மணி விளக்கே சீதேவி பொன்மணியே அந்தி விளக்கே அலங்கார நாயகியே காந்தி விளக்கே காமாக்ஷித் தாயாரே பசும்பொன் விளக்கு வைத்துப் பஞ்சுத் திரிப்போட்டுக் குளம் போல எண்ணெய் விட்டு கோலமுடன் ஏற்றி வைத்தேன் ஏற்றினேன் நெய் விளக்கு எந்தன் குடிவிளக்கு வைத்தேன் திருவிளக்கு மாளிகையும் தான் விளங்க மாளிகையில் சோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான் மாங்கல்யப் பிச்சை மடிப் பிச்சை தாரும் அம்மா சந்தான பிச்சையுடன் தனங்களும் தாரும் அம்மா பெட்டி நிறைய பூஷணங்கள் தாரும் அம்மா பட்டி நிறைய பால் பசுவை தாரும் அம்மா கொட்டகை நிறைய குதிரைகளைத் தாரும் அம்மா புகழுடம்பைத் தாரும் அம்மா பக்கத்தில் நில்லும் அம்மா அல்லும் புகழும் அண்டையிலே நில்லும் அம்மா.

கருட வாகனத்தில் அலர்மேல் மங்கைத் தாயார்


சேவித்து எழுந்திருந்தேன் தேவி வடிவம் கண்டேன்
வச்சிர கிரீடம் கண்டேன் வைடூரிய மேனி கண்டேன்
முத்துக்கொண்டை கண்டேன் முழுப்பச்சை மாலை கண்டேன்
உரிமுடி கண்டேன் தாழை மடல் சூடக்ண்டேன்

தாயாரின் அருட்கோல முன்னழகு்



பின்னழகு கண்டேன் பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவம் கண்டேன்
கமலத்திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலென்னக் கனையாழி மின்னக்கண்டேன்

தங்க ஒட்டியாணம் தகதகென ஜொலிக்கக் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன் காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிரக் கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்
அன்னையே அருந்துணையே அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மஹாபாக்கியம் தாரும் அம்மா
தாயாகும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்.



* * * * * * * *
சென்னை சௌகார்பேட்டை ஜெனரல் முத்தையா முதலி தெரு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் தாயாரின் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் போது தாயார் பெண் கருட வாகனத்தில் சேவை சாதிக்கின்றார் பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளன்று. அது போலவே பெண் சிறிய திருவடியில் எட்டாம் நாள் தாயார் சேவை சாதிக்கின்றார்.
பெண் கருட வாகனம்

இக்கோவிலைப்பற்றி படிக்க நேர்ந்தது, கருட சேவையன்று சென்று தரிச்சிக்கலாம் என்று அடியேன் நினைத்திருந்தேன், ஆனால் மழை காரணமாக செல்ல முடியவில்லை . இவ்வருடம் வெறும் பெண் கருட வாகனத்தை தரிசனம் செய்யலாம். சென்ற தாயார் கருட சேவையின் போது வட நாட்டில் மஹா லக்ஷ்மி தாயாருக்கு வாகனமாக கருதப்படுவது எது என்று கேட்டிருந்தேன், அதற்கான பதில் ஆந்தை, ஆமாம் நாம் அபசகுன பறவையாகக் கருதும் ஆந்தைதான் தாயாரின் வாகனமாக கருதபப்டுகின்றது. வங்காளத்தில் துர்கா பூஜையின் போது துர்க்கையம்மனுடன் மகள்களாக மஹாலக்ஷ்மியும், மஹா சரஸ்வதியும் எழுந்தருளும் போது ஆந்தை வாகனத்தை காணலாம்.