Saturday, October 31, 2015

கருட யாத்திரை - 13

திருநாங்கூர் ஏகாதச கருட சேவை


குமுதவல்லி நாச்சியார் திருமங்கையாழ்வார்

இந்த சிறப்பு கருட யாத்திரையின் நிறைவு நாளன்று அதி காலை மயிலாடுதுறையில்  திருஇந்தளூரில் பரிமளரங்கநாதரை சேவித்தோம். பின்னர் திருநாங்கூர் திவ்ய தேசங்கள் அனைத்தையும் திருவாலி-திருநகரி திவ்ய தேசத்தையும் சேவித்தோம். பின்னர் சென்னை திரும்பினோம். திருமணிமாடக்கோவிலில் அமர்ந்த கோல  கருடனையும் சேவித்தோம். திருநாங்கூர் பதினோறு கருடசேவையைப் பற்றி இப்பதிவில் காணலாம். 

பாற்கடலிலே திருமகளும், நிலமகளும், நீளா தேவியும், நித்திய சூரிகளும் புடை சூழ பரவாசு தேவனாக மாயத் துயில் கொண்டுள்ள அந்த மாமாயன், வைகுண்டத்திலே வியூக நிலையிலே அமர்ந்த கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். அவரே தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காக்க அவதாரங்கள் எடுத்து விபவ ரூபமாக அருள் வழங்கினார், அந்த பரம் பொருளே அந்தர்யாமியாக எல்லா ஜீவ ராசிகளிலும் விளங்குகின்றார். நாம் எல்லோரும் உய்யும் பொருட்டு , ஒரு பெயரும், ஒரு உருவமும் இல்லாத அந்த பரம் பொருள் அர்ச்சாவதாரமாக பூவுலகிலே பல் வேறு தலங்களிலே எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். இந்த ஐந்து நிலைகளுக்கும் உரியவன் அவன் ஒருவனே.



அத்தகைய திருக்கோவில்களில், மயர்வற மதி நலம் பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றவை திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இந்த திவ்ய தேசங்களுள் வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் தஞ்சை தரணியிலே 40 திவ்ய தேசங்கள் உள்ளன, அவற்றுள் சீர்காழியிலிருந்து 8கி.மீ தூரத்தில் அமைந்துள்ள திருநாங்கூர்  திருத்தலத்தை சுற்றி பதினோரு திவ்ய தேசங்கள் உள்ளன. இவை திருநாங்கூர் திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. சோழநாட்டுத் திருப்பதிகளில் நடு நாயகமாக இந்த திருநாங்கூர் திவ்ய தேசங்கள் விளங்குகின்றன. இந்த திவ்ய தேசங்களின் தனி சிறப்பு என்னவென்றால் வைணவ சம்பிரதாயத்தில் முக்கிய கருதப்படும் மூன்று சுலோகங்களும் எம்பெருமானாலேயே இத்திவ்ய தேசங்களில் உபதேசிக்கப்பட்டன. முதலாவதான "ஒம் நமோ நாராயணா"  என்னும் நலம் தரும் அஷ்டாத்திர மந்திரத்தை ஆழ்வார்களில் கடைக்குட்டியான திருமங்கை ஆழ்வாருக்கு திருமணி மாடக் கோவில் நாராயணப் பெருமாளால் உபதேசிக்கப்பட்டது.

இரண்டாவதான "ஸ்ரீமத் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே ஸ்ரீமதே நாராயணாய நமஹ" என்ற த்வைய மந்திரத்தை ஸ்வேத ராஜனுக்கு திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் உபதேசித்தார்.

கீதையிலே  "ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
 அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷ யிஷ்யாமி  மாசுச: "
என்னையே தஞ்சம் சரணமடைந்து விடு நான் உன்னை எல்லா பாவங்களிலிருந்து மோட்சத்தை அளிப்பேன் என்று கீதோபதேசத்தின் போது கூறிய சரம சுலோகத்தை பார்த்தன் பள்ளியிலே கண்ணன் அர்ஜுனனுக்கு மீண்டும் உபதேசித்தார்.

வைகுந்தப்பெருமாள்

இந்த திவ்ய தேசங்களின் மற்றொரு சிறப்பு, பிரளய காலத்திலும் அழியாமல் இருந்தது. பாலச வனத்தில் வடக்கே மண்ணியாற்றையும், தெற்கே திருவரங்கக் காவிரியாற்றையும் கிழக்கே பூம்புகார் கடலையும், மேற்கே தரங்கம்பாடியையும் எல்லையாகக் கொண்ட இந்த நாகபுரி ஷேத்ரம் என்னும் திருநாங்கூரைச் சுற்றிய இந்தப் பகுதி மட்டும் பிரளய காலத்தும் அழியாமல் இருந்தது.

இப்பகுதியில் வைணவ மற்றும் சைவ சமயங்களின் ஏகாதச திருக்கோவில்கள் உள்ளன. இவ்வாறு சைவம் மற்றும் வைணவத்தின் பதினொரு கோவில்கள் உள்ளதற்கான ஐதீகம் என்னவென்றால், மஹா பிரளயத்திற்கு பிறகு தட்சன் ஒரு யாகம் நடத்தினான் அதில் கலந்து கொள்ள சிவபெருமானுக்கு ஆணவத்தால் அவன் அழைப்பிதழ் அனுப்பவில்லை. தட்சன் மகளான தாட்சாயணியும் அங்கு சென்று அவமானப்பட்டு, பின் சிவலோகம் செல்ல விருப்பமில்லாமல் பலசவனம் வந்து, மதங்க மகரிஷியின் மகளாக பூங்கோதை என்ற திருநாமத்துடன் வளர்ந்து வரும் காலத்தில், சிவபெருமானும் மண்ணியாற்றங்கரையில் வந்து க்ஷிணாமூர்த்தியாக யோகத்திலாழ்ந்தார். மஹா விஷ்ணுவும் வைகுந்தத்தை விடுத்து பூலோகம் வந்தார். சிவனும், விஷ்ணுவும் இல்லாததால் அசுரர்களிடமிருந்து தங்களை காப்பாற்றுவாரில்லாமல் கவலையடைந்த தேவர்கள் மதங்க முனிவரிடம் வந்து வேண்ட, மதங்க முனிவரின் பிரார்த்தனைக்கிரங்கி பத்ரிகாசரமத்திலிருந்த பெருமாள், நான்கு வேதங்களே நான்கு குதிரைகளாகவும், சந்திர, சூரியர்களையே தேர்க்காலாகவும் கொண்ட திவ்ய திருத்தேரிலே நாங்கூரில் உள்ள இந்திர புஷ்கரணியிலே சேவை சாதித்தார். ஞான திருஷ்டியால் பூங்கோதைதான் பார்வதி என்பதை அறிந்த மஹா விஷ்ணு, யோகத்திலிருந்த சிவபெருமானுக்கு அதை உணர்த்தி அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார். பின்னர் சிவபெருமான் பதினோரு ருத்ர வடிவம் எடுத்தும், மஹா விஷ்ணுவும் அதே போல் பதினோரு அர்ச்சாவதாரங்கள் எடுத்து இருவரும் இனைந்து அசுரர்களை அழித்து தேவர்களைக் காத்தனர்.  பின் அதே ரூபத்தில் இருவரும் பதினோரு திருக்கோவில்களில் அமர்ந்தருளினர் என்பது ஒரு ஐதீகம். எனவே தான் திருநாங்கூரைச் சுற்றி பதினோரு சைவ மற்றும் வைணவ திருக்கோவில்கள் அமைந்துள்ளன.


இவ்வாறு பத்ரிநாராயணர் சிவபெருமானின் இங்கு  வந்த  போது கருடன் மேல் வராமல் தேரில் வந்ததால், கருடன் சுவாமியை சுமக்க வாய்ப்புத் தரும்படி வேண்டினார். இதனை உணர்த்தும் விதமாக சுவாமியின் திருப்பாதத்திற்கு நேராக இருக்க வேண்டிய கருடன்  இங்கு கொடிமரத்திற்கு அருகில் அமர்ந்த கோலத்தில் சுவாமியின் பாதத்திற்கு கீழே உள்ளார். கருடனின் வேண்டுகோளுக்கு இரங்கி பெருமாள் 11 மூர்த்திகளாக இருந்து  தை அமாவாசைக்கு மறுநாள் கருடசேவை சாதிப்பதாக ஐதீகம்

அன்ன வாகனத்தில் ஆழ்வார் 

இந்த நாங்கூரைச் சுற்றி ஏகாதச சைவ மற்றும் வைணவ திருத்தலங்கள் இருப்பதற்கான மற்றொரு ஐதீகமானது, ஒரு சமயம் ஆணவம் கொண்ட பிரம்மாவின் ஒரு தலையை சிவன் கொய்ததால் அவரை பிரமஹத்தி தோஷம் பற்றியது. அந்த தோஷத்தைப் போக்க சிவ பெருமான் ஏகாதச ருத்ர அவதாரங்கள் எடுத்து ஏகாதச ருத்ர அசுவமேத யாகம் செய்தார், யாகத்தின் இறுதியில் பெருமாள் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் சேவை சாதித்து சிவபெருமானுக்கு அபய பிரதானம் அளித்து சாபம் நீங்க அருள் செய்தார். இந்த திவ்ய தேசங்களில் வந்து வணங்குவோர்களுக்கும் அதே போல கருணை புரிய வேண்டும் என்ற சிவ பெருமானின் வேண்டுகோளுக்கிணங்கி ஏகாதச திவ்ய தேசங்களில் அர்ச்சாவதார மூர்த்தியாக கோவில் கொண்டருளினார் பெருமாள். சிவ பெருமானும் எகாதச தலங்களில் கோவில் கொண்டருளினார்.

அண்ணன் பெருமாள்


இந்த பதினோறு திவ்ய தேசங்களையும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார் என்பது தனி சிறப்பு. தமது பெரிய திருமொழியில் திருநாங்கூர் திருப்பதிகள் என்றே பரகாலர் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். 

திருநறையூர் (நாச்சியார் கோவில்) பெருமாளால் வைணவராக சமஸ்ராணம் செய்யப் பெற்ற, திருமங்கை மன்னன், பரகாலன், நீலன், ஆலிநாடன், கலிகன்றி, மங்கையர் கோன், மங்கை வேந்தன், கலியன் என்றெல்லாம் அழைக்கப்படும் திருமங்கை ஆழ்வார் இந்த திவ்ய தேசங்களில் திருக்குறையலூரிலேதான் அவதரித்தார். மணக் கோலத்தில் பெரிய பிராட்டியாரோடு வந்த பெருமாளால் திருமணங்கொல்லையில் அஷ்டாக்ஷர  மந்திரோபதேசமும் பெற்றார், இந்த பதினோரு திவ்ய தேசங்களையும் இவர் மட்டுமே மங்களாசாசனமும் செய்துள்ளார். திருமங்கையாழ்வாரோடு பெரிதும் தொடர்புடையவை இத்திவ்ய தேசங்கள். 



இத்தகைய சிறப்புகளைக் கொண்ட திருநாங்கூர் திவ்ய தேசங்களாவன:

1. திருமணி மாடக் கோவில்,  2. திருவைகுந்த விண்ணகரம், 3. திரு அரிமேய விண்ணகரம், 4. திருத்தேவனார் தொகை,  5. திருவண் புருடோத்தமம், 6. திருச்செம்பொன் செய்கோவில், 7. திருத்தெற்றியம்பலம், 8. திருமணிக்கூடம், 9. திருக்காவளம்பாடி, 10. திருவெள்ளக்குளம்(அண்ணன் கோவில்) இத்தலத்திலே தான் திருமங்கை ஆழ்வாரின் தர்ம பத்தினி குமுத வல்லி நாச்சியார் கண்டெடுக்கப்பட்டார், 11. திருப்பார்த்தன் பள்ளி.

இவ்வாறு பொன்னி நதி பாய்ந்து வளம் சிறக்கும் திருநாங்கூர்ப்பதிகளை மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வரும், இந்த திவ்ய தேசப் பெருமாள் அனைனவரும் கலந்து கொள்ளும் மிக சிறப்பு வாய்ந்த ஏகாதச கருட சேவை திருவிழா வெகு சிறப்பாக ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு மறு நாள் நடைபெறுகின்றது. "கண்ணனை கடல் கடைந்தமுதங்கொண்ட  அண்ணலை அச்சுதனை அனந்தனை  மாலை பெருமாளை பெரிய திருவடியாம் கருட வாகனத்தில் சேவித்தால் மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்", இங்கு பதினோரு பெருமாள்களையும் ஒரே நேரத்தில் கருட வாகனத்தில்  சேவிக்கும் அற்புதமான வாய்ப்பு கிடைக்கின்றது.


இத்திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக தை அமாவாசையன்று திருமங்கையாழ்வாருக்கு "மஞ்சள் குளி திருவிழா"  நடைபெறுகின்றது. திருவரங்கத்தில் திருமங்கையாழ்வார் தங்கியிருந்த போது அரங்கநாதர் முன் திருநெடுந்தாண்டகம் சேவித்தார், அதனால் மிகவும் பிரசன்னமான பெருமாள் ஆழ்வாரை ஏதாவது வரம் வேண்டுமாறு கூற, அவரும் புரட்டாசி மாதம் நடைபெறுகின்ற அத்யயன உற்சவத்தின் போது வேதங்களுடன், நம்மாழ்வாரின் திருவாய்மொழியும் சாற்றுமுறை செய்ய அருள் புரிய வேண்டும் என்று வேண்ட பெருமாளும் அவ்வண்ணமே அருளிச் செய்தார். அன்று முதல் நாலாயிர திவ்விய பிரபந்தமும் அத்யயன உற்சவத்தின் போது சாற்றுமுறை செய்யப்படலாயிற்று. ஆழ்வாரின் இந்த பக்திக்காக, பெருமாள் ஆழ்வாரை சிறப்பிக்க வேண்டி தனக்கு நடை பெறும் மஞ்சள் குளி இனி அவருக்கும் நடைபெற வேண்டும் என்று அருள் பாலித்தார்.

திருமங்கை ஆழ்வாருக்கு ஒவ்வொரு வருடமும் வட காவேரியாம் கொள்ளிடக் கரையில் மஞ்சள் குளி நடைப்பெற்றது, முதல் குளியலை நம்பெருமாளே, தானே தன் கையால் நடத்தி வைத்தார். ஆழ்வாரின் அந்திம காலத்திற்குப் பிறகு அவரது சகோதரியின் கணவர், திருவரங்கத்தை விடுத்து ஆழ்வாரின் அவதாரத் தலமான திருக்குறையலூர் வந்து தங்கினார். ஆழ்வாரின் மூர்த்திக்கு நாங்கூரை ஒட்டி ஓடும் மணிகர்ணிகை ஆற்றங்கரையில் அவர் மஞ்சள் குளியல் உற்சவத்தை 8ம் நூற்றாண்டிலே தொடங்கினார் அன்று முதல் இன்று வரை அது தொடர்கிறது. 


தை அமாவாசையன்று அதிகாலை 3 மணிக்கு திருவாலி திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார், தன் தர்ம பத்தினி குமுத வல்லி நாச்சியாருடன் , அவர் ஆராதித்த உபய நாச்சியார்களுடன்  சிந்தனைக்கினியான் பெருமாளும், பல்லக்கில் புறப்பாடு கண்டருளி வயல் வழியில் இறங்கி பயிரை மிதித்துக்கொண்டு முதலில் திருக்குறையலூர் ஸ்ரீ உக்ர நரசிம்மப் பெருமாள் கோவிலை அடைந்து அவரை மங்களாசாசனம் செய்கின்றார். அடுத்து ஸ்ரீ வீர நரசிம்மப் பெருமாள் கோவிலை அடைந்து அவரை மங்களாசாசனம் செய்கின்றார் பரகாலர். திருநாங்கூரில் உள்ள  திருக்காவளாம்பாடி ஸ்ரீ கோபாலனை , "காவளம்பாடி மேய கண்ணனே! களை கண் நீயே" என்று சேவிக்கின்றார்  கலிகன்றி.

உச்சிக் காலத்திற்கு முன் மணிகர்ணிகை ஆற்றை அடைகிறார். பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் இடுப்பளவு தண்­ணிரில் ஆழ்வாரின் பெரிய திருமொழியில் இருந்து ஆழ்வாரின் ஆச்சாரியரான திருநறையூர் நம்பியையும், திருவரங்கத்து அழகிய மணவாளானையும் மங்களாசாசனம் செய்து ஆழ்வார் பாடிய பாசுரங்களை சேவிக்கின்றனர். இவ்விரு திவ்ய தேசங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மாலை மற்றும் பீதாம்பரங்களினால் பரிவட்டம் கட்டபெற்று ஆழ்வாருக்கு மரியாதை செய்யப்படுகின்றது.


பின் மஞ்சள் குளியல் மண்டபத்தில் எழுந்தருளும் ஆழ்வாருக்கு சஹஸ்ர தாரா மஞ்சள் குளி என்னும் திருமஞ்சனம் நடை பெறுகின்றது. சஹஸ்ர தாரை தட்டில் ஆழ்வார் ஆராதித்த சிந்தனைக்கு இனியான் என்னும் பெருமாளின் திருமூர்த்ததிற்க்கு செய்யப்படும் மஞ்சள் நீர் முதலில் பெருமாளுக்கு திருமஞ்சனம் ஆகி பின் ஆழ்வாருக்கும் திருமஞ்சனம் ஆகின்றது. பின் திருப்பாவை சாற்று மறை நடைபெறுகின்றது.

மாலையில் அலங்கரிக்கப்பட்ட அருள்மாரி  திருமணிமாடக்கோவில் ஸ்ரீ நாராயணப் பெருமாளை "மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே" என்று மங்களாசாசனம் செய்கின்றார்.  திருமணிமாடக் கோவிலில் ஆழ்வார் ஆஸ்தானம் பின், நல்ல வெந்தழல் மூன்று நால் வேதம் ஐவேள்வியோடு ஆறங்கம் வல்ல அந்தணர் வாழும் திருவண்புருடோத்தமத்தில் ஸ்ரீ புருஷோத்தமனை மங்களாசாசனம் செய்கின்றார் மான வேற் கலியன்.  திருவைகுந்த விண்ணகரத்தில் ஸ்ரீ வைகுந்த நாதனை நாங்கூர் "வைகுந்த விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே" என்று மங்களாசாசனம் செய்கிறார் வாள் கலியன். திருசெம்பொன்செய் கோவிலில் அல்லி மாமலராளுடன் ஸ்ரீ செம்பொன் செய் அரங்கரை "நாங்கை நன்னடுவுள் செம்பொன் செய் கோயிலினுள்ளே கடல்நிறவண்ணன் தனனை நான் அடியேன் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே" என்று மங்களாசாசனம் செய்கிறார் நம் கலியன். ஒரு கிளி மற்றொரு கிளிக்குக் கல்வி கற்பித்ததை  திருத்தெற்றியம்பலத்தில் ஸ்ரீ பள்ளி கொண்ட பெருமாளை  "திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே" என்று வணங்குகிறார் குமுதவல்லி மணாளர். பின்னர் அரிமேய விண்ணகரத்தில் குடங்களை எடுத்தேற விட்டு கூத்தாடிய கோவை " அண்டமுறும் அலைகடலினொலி திகழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே" என்று அனுபவிக்கின்றார் ஆழ்வார். அரங்கனே நடத்தி வைத்த மஞ்சள் குளி, மணிகர்ணிகையாற்றில் கண்ட ஆழ்வாரும் குமுதவல்லி நாச்சியாரும், சிந்தனைக்கினியானும் திருமணிமாடக் கூடத்தில் ஆஸ்தானத்தில் இரவில் எழுந்தருளுகின்றனர். இங்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறுகின்றது.


பதினோரு கருடசேவையன்று காலை முதலில் ஆழ்வார் முன் திருப்பாவை சாற்றுமுறை செய்யப்படுகின்றது. கருடசேவைக்காக மற்ற பத்து திவ்ய தேசத்து பெருமாள்களும் பல்லக்கில் திருமணிமாடக்கூடத்திற்கு எழுந்தருளுகின்றனர். ஒவ்வொரு பெருமாளுக்கும் ஒவ்வொரு வித அலங்காரம். தன் அன்பனைக் காண அற்புத அலங்காரத்தில் வருகின்றனர் பெருமாள்கள் அனைவரும். அவர்கள் வந்த அழகு இவ்வாறு இருந்தது.

திருமணிமாடக் கூட கோவில் மற்றும் புஷ்கரிணிக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள  பிரம்மாண்ட  பந்தலுக்கு வேடார் திருவேங்கடம் மேய விளக்கான  திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் பட்டுப் பீதாம்பரங்கள் தொங்க எழிலாக பல்லக்கில் வந்தார். திருசெம்பொன்செய்  கோயிலினுள்ளே அல்லிமாமலராள் தன்னொடும் அஞ்சனக்குன்றம் நின்ற தொப்ப  ஹேமரங்கர் திருமேனி முழுவது செம்பொன்னாக மின்ன வந்தார் .

மின்னனைய நுண்மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன் முடியொருபதும் தோளிருபதும் போயுதிர தன்னகரிற் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த  திருவைகுந்த விண்ணகரத்து வைகுண்ட நாதர் ஆதி சேஷன் குடை பிடிக்க அழகாக பல்லக்கில் அமர்ந்து வந்தார்.

அங்கையால் அடி மூன்று நீரேற்று அயன் அலர் கொடு தொழுதேத்த கங்கை போதரக்கால் நிமிர்த்தருளிய  திருவண்புருடோத்தமத்து புருடோத்தமர் செங்கோல் தாங்கி அன்ன நடையிட்டு செழுமையாக வந்தார்.

கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை காமருசீர் முகில் வண்ணன், காலிகள் முன் காப்பான் குன்றதனால் மழை தடுத்த திருஅரிமேய விண்ணகத்து குடமாடு கூத்தர்  எழிலாக கூத்தாடி வந்தார்.


இவ்வாறு மெல்ல மெல்ல எல்லா திவ்ய தேசத்துப் பெருமாள்களும் எழுந்தருளுகின்றனர் பந்தலுக்கு முதலில் சிறிதாக இருந்த பக்தர் கூட்டம் பெரிதாகிக் கொண்டே போகின்றது, ஒவ்வொரு பெருமாளாக வர வர மலர்களை நாடி வண்டுகள் செல்வது போல பக்தர்களின் கூட்டம் அப்பெருமாளை சேவிக்க நகர்ந்து செல்கின்றனர். புகைப்படம் எடுப்பவர் சிலர், வீடியோப் படம் எடுப்பவர் சிலர், பாசுரம் சேவிப்போர் சிலர், பெருமாளை கண்ணாரக் கண்டு சேவிப்போர் பலர் என்று தமிழகத்தின் அனைத்து பிரதேசங்களிலிருந்து வந்த பக்தர்கள் பந்தலில் குழுமுகின்றனர். சுமார் பன்னிரண்டு மணியளவில் அனைத்து பெருமாள்களும் வந்து சேர அவர்களை மங்களாசாசனம் செய்ய மணவாள  மாமுனிகளுடன் திருமங்கையாழ்வார்  எழுந்தருளுகின்றார்.

மங்களாசாசனம் துவங்குகின்றது ஒவ்வொரு பெருமாளாக ஆழ்வாருக்கு சேவை சாதிக்கும் போது அந்தப் பெருமாளை ஆழ்வார் மங்களாசாசனம் செய்கிறார் அந்த திவ்ய தேசத்து பாசுரத்தின் முதல் பாடலை பக்தர்கள் அனைவரும் சேவிக்கின்றனர். பின் ஆழ்வார் பெருமாளை வலம் வருகின்றார், ஆழ்வாருக்கு அந்தந்த திவ்ய தேசங்களிலிருந்து வந்த பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செய்யப்படுகின்றது. பதினோரு திவ்ய தேசப் பெருமாள்களின் மங்களாசாசனம் நிறைவுற்றதும் மணவாள மாமுனிகள்  எழுந்தருளுகின்றார்.   அவர் தம் ஆச்சார்யராம் திருமங்கையாழ்வாரை தாம் திருமங்கையாழ்வாரின் வடிவழகிலீடுபட்டு அருளிய வடிவழகு சூர்ணிகையும் மற்றும்

வேலணைத்தமார்பும், விளங்கு திருவெட்டெழுத்தை
மாலுரைக்கத்தாழ்த்த வலச்செவியும்,
தாளிணைத் தண்டையும், தார்க்கலையன் நன்முகமும்
கண்டு களிக்குமென்கண்

என்று மற்ற தனியன்களாலும் மங்களாசாசனம் செய்கின்றார். அப்போது பகதர்களும் அந்த தனியன்களை உடன்  சேவிக்கின்றனர். பின் அனைத்து பெருமாள்களும் மணிமாடக்கோவிலின் உள்ளே எழுந்தருளுகின்றனர்.



மாலை 4 மணி அளவில் பதினொரு திவ்ய தேசத்து எம்பெருமான்களுக்கும் திருமங்கை ஆழ்வாருக்கும் ஏக காலத்தில் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. திருமங்கையாழ்வாரின் சிறப்பு ததியாரதனை (அன்ன தானம்) என்பதால் அனைத்து திவ்ய தேசங்களிலும் ததியாராதானை சிறப்பாக நடைபெறுகின்றது. கருட சேவைக்கு செல்பவர்கள் உணவைப் பற்றி கவலைப்படத்தேவையில்லை.

மாலை 6 மணியளவில் திருமஞ்சனம் முடிந்து பெருமாள்கள் அனைவரும் கருட வாகனத்திலும் ஆழ்வார் அன்ன  வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர். பின்னர் அலங்காரம் துவங்குகின்றது. மாலைகள் வர ஆரம்பிக்கின்றன. மாலைகள் மேல் மாலைகள் அமர்கின்றன, நடு நடுவே பட்டு பீதாம்பரங்கள் வருகின்றன அவையும் பெருமாள்களுக்கு சார்த்தப்படுகின்றன. பதினொரு கருட சேவையைக் காண வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது , கூட்டம் அலை மோதுகின்றது என்றுதான் சொல்ல வேண்டும். அலை அலையாக பக்தர்கள் ஒவ்வொரு பெருமளாக சென்று சேவித்து புறப்பாட்டிற்காக காத்து நிற்கின்றனர்.


அன்று நள்ளிரவு மணவாள மாமுனிகள் முன் செல்ல, அன்ன  வாகனத்தில் திருமங்கையாழ்வாரும் குமுத வல்லித் தாயாரும் தொடர, ஏகாதச பெருமாள்களும் எம்பெருமானை எப்போதும், எல்லா காலத்திலும் தாங்கும் பேறு பெற்ற பெரிய திருவடியாம், வேத சொரூபன் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிக்க திருவீதிப் புறப்பாடு நடைபெறுகின்றது. பதினோரு பெருமாள்களும் தெய்வப்புள்ளேறி ஒரே சமயத்தில் திருநாங்கூரின் நான்கு மாட வீதிகளையும் சுற்றி வரும் அந்த அழகைக் காண கண் கோடி வேண்டும். பூர்வ ஜன்ம புண்ணியத்தால் மட்டுமே அந்த தெய்வீக அழகைக் காணும் பேறு நமக்கு கிட்டும். புறப்பாடு நிறைவு பெற அதிகாலை ஆகி விடும்.

மறு நாள் காலை ஆழ்வாருக்கு திருமஞ்சனம் திருப்பாவை சாற்றுமுறை நடைபெறுகின்றது. மாலை திருநாங்கூரிலிருந்து புறப்பட்டு, திருவெள்ளக்குளத்து ஸ்ரீ அண்ணன் பெருமாளை இடர் களைய சரணம் புகுகிறார், பிறகு வரிவண்டு தேதென என்று இசைபாடும் அழகை திருத்தேவனார் தொகையில் ஸ்ரீ மாதவனை அனுபவித்து மங்களாசாசனம் செய்கிறார் நீலன். பிறகு திருவாலி எழுந்தருளி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை மங்களாசாசனம் செய்கின்றார் ஆழ்வார். திருநகரியை அடையும் போது பெரிய திருவடியில் வயலாலி மணவாளன் ராஜ கோபுரத்தின் முன்னே ஆழ்வாரை எதிர் கொள்ள காத்திருக்கின்றார். பின் ஆழ்வார் அங்கு அடைந்தவுடன் , பெருமாளும் ஆழ்வாரும் திருக்கோவிலில் செல்வதுடன் திருனாங்கூர் பதினோரு கருட சேவை இனிதே நிறைவு பெறுகின்றது. அப்போது

கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே
பற்றா வண் தடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீர் வயல் சூழ் வயலாலி அம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேன். ( பெ.தி 8-9-8)


பொருள்கற்றுணர்ந்த விவேகிகள் இதன் தொடர்பே நமக்கு வேண்டாம் என்று வெறுத்து ஒழிக்கும்படியான சம்சாரமாகிய பெருங்கடலையே இனிமையாகப் பற்றி இங்கு அடியேன் வந்து பல பிறப்பும் பிறந்தேன். இப்படி பிறந்து வருமளவில், வற்றாத நீர்வளமுடைய வயல்களால் சூழப்பட்ட வயலாளி என்று திருநாமம் பெற்ற திருவாலியில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானைப் பெற்றேன். அவரைப் பெற்றதால் மறுபிறவி இல்லாமை பெற்றேன்என்ற பாசுர சாற்று மறையுடன் இந்த தெய்வீக விழா இனிதே நிறைவடைகின்றது

இப்பதிவுடன் அடியோங்களது கருட யாத்திரை நிறைவு பெற்றது. இது வரை வந்து சேவித்த அன்பர்கள் அனைவருக்கும் வைநதேயன் மற்றும் பெருமாளின் பூரண ஆசிகள் கிட்ட வேண்டுகின்றேன்.