Monday, March 30, 2009

ஸ்ரீ ராமர் கருட சேவை

திருவல்லிக்கேணி இராம நவமி 



பெருமாள் நி்த்ய கருட சேவை சாதிக்கும் தலம் தான் திருவல்லிக்கேணி .

மீனமர் பொய்கைநாள் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த
கானமர்வேழம் கையெடுத்தலறக் கராஅதன் காலினைக் கதுவ 
ஆனையின் துயரம் தீரப்புள்ளூர்ந்து சென்றுநின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாடமாமயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே


என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த கஜேந்திர வரதராக நித்ய கருட ஸேவை சாதிக்கின்றார் பெருமாள். பெரிய திருவடியின் தோளிலே சங்கு சக்ரங்களுடன் பெருமாள் சேவை சாதிக்கும் அழகே அழகு. இத்தலத்தின் பார்த்தசாரதி மற்றும் தெள்ளிய சிங்கரின் தங்க கருட வாகன சேவையை முன்னர் கண்ட தாங்கள் இப்பதிவில் ஸ்ரீராமரின் கருட சேவையை காணுங்கள் அன்பர்களே.

பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவும் பகலும்துதி செய்யநின்ற இராவணாந்தகனை எம்மானை 
குரவமேகமழும் குளிர்பொழிலூடு குயிலொடு மயில்கள்நின்றால 
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணி கண்டேனே.

( ஆழ்வார் காலத்தில் திருவல்லிக்கேணி சூரியனின் கதிர்கள் வராத அடர்ந்த காடாக இருந்திருக்கின்றது இன்றோ காங்க்ரீட் காடாகிவிட்டதே)

ராமாய ராம பத்ராய ராம சந்த்ராய வேதஸே|
ரகுநாதாய நாதாய சீதாயா: பதயே நம: 
இராம நவமி மஹோஸ்தவத்தின் மூன்றாம் நாள் காலை 6 மணிக்கு கோபுர வாசல் தரிசனம் தந்து பெரிய வீதி புறப்பாடு கண்டருளுகின்றார் ஸ்ரீராமர். நான்காம் நாள் தவனோற்சவம், ஐந்தாம் நாள் நாச்சியார் திருக்கோலம்.



ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே !
சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராணனே !!


ஸ்ரீ இராமர் கருட சேவை பின்னழகு
அடுத்து நாம் காணப்போகும் ஸ்ரீராமர் கருட சேவை மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கருட ஸேவை ஆகும். தக்ஷிண பத்ராசலம் என்றழைக்கப்படும் இத்ததலத்தில் ஸ்ரீராமர் நஞ்சை அமுதாக்கிய பெருமாளாய் கருணைக் கடலாய் பட்டாபிஷேக கோலத்திலும், கோதண்ட ராமராகவும் இரு கோலத்தில் சேவை சாதிக்கின்றார். வருடத்தில் நான்கு நாட்கள் மும்மலம் நீக்கும் கருட சேவை இக்கோவிலில் நடைபெறுகின்றது. சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் மாலை கருட வாகனத்தில் ஸ்ரீ ராமர் சேவை சாதிக்கின்றார். ஆனி மாதத்தில் ஸ்வாதியன்று ஆனி கருடன், ஸ்ரீ நரசிம்மர் கருட வாகனத்தில் சேவை சாதிக்கின்றார் . ஆடி மாதம் பௌர்ணமியண்று கஜேந்திர மோக்ஷம், ஸ்ரீ ரங்கனாதர் கருட சேவை. மாசி மகத்தன்று ஸ்ரீ ராமர் கருட சேவை. இராம நவமியன்று காலை அலங்கார திருமஞ்சனம், மாலை பட்டாபிஷேக கோலத்தில் மாட வீதி புறப்பாடு.
மேலும் இத்திருக்கோவிலைப்பற்றி தெரிந்து கொள்ள கிளிக்குங்கள்
இனி கோதண்டராமரின் கருட சேவையை சேவியுங்கள்.