Monday, December 30, 2013

திருவரகுணமங்கை(நத்தம்) எம் இடர் கடிவான் கருடசேவை

ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -7

விஜயாசனர் 

ஸ்ரீவைகுண்டம் தலத்திற்கு கிழக்கே சுமார் மூன்று கி.மீ தூரத்தில் திருவரகுண மங்கை தலம் அமைந்துள்ளது. நத்தம் என்ற பெயரே வழங்கப்படுகின்றது. குக்கிராமம்தான் ஆனால் பேருந்து வசதி உள்ளது. ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திவ்ய தேசங்களுள் 82வது தலம். நவதிருப்பதிகளில் இரண்டாவது திருப்பதி. நவகிரகத்தில் இது சந்திரன் ஸ்தலமாகும்.

மூலவர் : விஜயாசன பெருமாள் (வெற்றிருக்கைப் பெருமாள்), ஆதிசேஷன் குடை பிடிக்க அமர்ந்த திருக்கோலம், கிழக்குப் பார்த்த திருமுக மண்டலம்.
உற்சவர்: எம் இடர் கடிவான்.
தாயார் : வரகுணவல்லி, வரகுண மங்கை( தனி சன்னதி இல்லை)
விமானம்: விஜய கோடி விமானம்.
தீர்த்தம் : அக்னி தீர்த்தம், தேவ புஷ்கரணி.
பிரத்யட்சம் : அக்னி, உரோமச முனிவர், சத்தியவான்.
ஆகமம் : பஞ்சராத்ரம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம் : நம்மாழ்வார். 
கிரகம்: சந்திர ஸ்தலம்.



கோபுர வாசல் சேவை ( கற்பூர ஆரத்தியுடன்)

செம்படவன் முக்தி பெற்றது: இந்த வரகுணமங்கை தலத்தில் ’ரோமசர்’ என்னும் முனிவர் தவம் செய்து வந்தார். அவருக்கு சத்தியவான் என்பவன் சீடனாயிருந்தான். அவன் ஒரு சமயம் அகநாச தீர்த்தத்தில் நீராடி திரும்புகையில், அந்த குளத்தில் ஒரு செம்படவன் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ஒரு நாகம் அவனைத் தீண்ட அவன் மரணமடைந்தான். நாகமும் மறைந்தது.  தேவலோகத்திலிருந்து கந்தவர்கள் கொண்டு வந்த விமானத்திலேற்றி சுவர்க்கம் அடைந்தான். அவனது சரீரத்தையும் பக்ஷிகள் புசித்தன.







ஆடும்புட்கொடி அம்மான் எம் இடர் கடிவான் 

இதைக் கண்ட சத்தியவான், தனது குருவான ரோமசரிடம் சென்று சுவாமி! மகாபாவியான இந்த வலைஞனுக்கு என்ன புண்ணியத்தால் சொர்க்கம் கிட்டியது என்று வினவினான். அதற்கு ரோமசர், சத்தியவானே இந்த செம்படவன் கொடுந்தொழில் புரிந்த பாவியென்றாலும் "இந்த வரகுணமங்கை தலத்தில் உயிரை விட்டதால் அவன் நற்கதியடைந்தான்" என்று கூறினார். இவன் முற்பிறவியில் விதர்ப்பதேசத்து அரசன் மகன். முன் செய்த வினைப் பயனால் அவன் தீயவர்களுடன் நட்புக்கொண்டு தீயவழியில் வாழ்ந்தால் இப்பிறப்பு ஏற்பட்டது. ஒரு புண்ணிய விசேஷத்தால் வரகுணமங்கையில் வந்து பிறந்தான், அதனால் நற்கதியடைந்தான் என்றார்.


வரகுண மங்கை எம் இடர் கடிவான் கருட சேவை 

வேதவித் விண்ணுலகெய்தியது: மீண்டும் ரோமசர் தொடர்கிறார். என் பிரிய சிஷ்யனே! முன்னொரு காலத்தில் ரேவா நதிக்கரையில் புண்ணியகோசம் என்ற அக்ரஹாரத்தில் வேதவித் என்னும் அந்தணன் இருந்தான். அவன் மாத,பிதா, குரு மூவரையும் வழிபட்டு அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளை செய்து திருமாலை நோக்கி ஆஸனதை என்னும் மந்திரம் ஜெபித்து தவமிருக்க பெருமாளும் கிழ உருவத்தில் தோன்றி வரகுண மங்கை தலத்திற்கு சென்று  தவம் செய் என்று கூறினார். அவரும் அதுபோலவே இங்கு வந்து தவம் செய்து  திருமாலின் அருள் பெற்று பரமபதம் அடைந்தார். எனவே இத்தலம் "மோக்ஷபுரி" என்றும் அழைக்கப்படுகின்றது.  



இராமாயணத்தில் சீதா தேவியை இராமன் தீக்குளிக்க கூறிய போது அவள் தர்மத்தின் வழியில் நின்றதால் அக்னியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  பிரமனின் கர்வத்தை அழித்த ரோமசமுனிவருக்கும், சத்தியத்தால் எமனிடமிருந்து தன்  கணவனின் உயிர் மீட்ட பஞ்ச கன்னிகளில் ஒருத்தியான சாவித்திரிக்கும், அதர்மத்தையும் அக்கிரமத்தையும் சுட்டு பொசுக்கும் அக்னி தேவனுக்கும் காட்சியளித்த தலம். இம்மூவருக்கும் சத்தியத்திற்கு ஜெயம் அளிப்பவராக, "சத்திய நாராயணராக", ஆதி சேஷன் குடை பிடிக்க தர்மமே  வெல்லும்  என்பதை விளக்கும் வகையில் தர்மத்தின் மேல் அமர்ந்து விஜயாசனராக உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கின்றார். ஒரே பிரகாரத்துடன் அமைந்துள்ளது இந்த தலம்.       


Sunday, December 29, 2013

ஸ்ரீவைகுண்டம் கள்ளர் பிரான் கருட சேவை


ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -6




இத்தலம் திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 28 கி.மீ தொலைவிலும்ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ  தொலைவிலும் தாமிரபரணியாற்றின் வடகரையில் உள்ளது.

மூலவர் : வைகுந்த நாதன், நின்ற திருக்கோலம், கிழக்குப் பார்த்த திருமுக மண்டலம்.
உற்சவர்: கள்ளர் பிரான் (சோர நாதர்)
தாயார் : வைகுந்த வல்லி, கள்ளர்பிரான் நாச்சியார்( தாயார்களுக்கு தனித்தனி சன்னதி)
விமானம்: சந்திர விமானம்
தீர்த்தம் : தாமிரபரணி,பிருகு தீர்த்தம், கலச தீர்த்தம்
தல விருட்சம்: பவள மல்லி  
பிரத்யட்சம் : பிரம்மா, இந்திரன் , பிருகு  சக்ரவர்த்தி
ஆகமம் : பஞ்சராத்ரம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம் : நம்மாழ்வார் 
கிரகம்: சூரியஸ்தலம்



பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 81 வது திவ்ய தேசம். நவதிருப்பதிகளில் முதலாவதாகவும்நவகிரக ஸ்தலங்களில் சூரிய ஸ்தலமாகவும் இந்த ஸ்ரீ கள்ளபிரான் திருக்கோயில் அமைந்துள்ளதுஸ்ரீ கள்ளபிரான் சுவாமி சந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்நான்கு புஜங்களுடன், கையில் தண்டத்துடன்ஆதி சேஷனைக் குடையாகக்  மார்பில் மஹா லக்ஷ்மியுடன்  நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்பிரகாரத்தில் வைகுந்தவல்லித் தாயார் சன்னதி உள்ளதுமேலும் நரசிம்மர் சன்னிதிகோதண்ட ராமர் சன்னிதியும் உள்ளன. சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில்பௌர்ணமி நாளன்றுசூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் படும்படிஇதற்கு ஏற்றாற் போல் சுவாமி சன்னதி எதிரிலுள்ள கொடி மரம்மேரு வடிவ  பலிபீடம் தென்புறம் விலகியிருக்கிறது.  இத்தலம் சூரிய தோஷ பரிகார ஸ்தலம் ஆகும். ஆதித்ய ஹ்ருதயம் சேவிக்க அருமையான பலன் உண்டு. 



கள்ளர்பிரான் கருடசேவை

இரண்டு திருவாசிகளும் மற்றும் கருடாழ்வாருக்கும் முழுதும் மலர் மாலை அலங்காரமும் இங்கு மட்டுமே சேவிக்க கிட்டியது. ஒவ்வொரு பெருமாளுக்கும் ஒரு சிறப்பு அலங்காரம்  காணக்கண் கோடி வேண்டும். 


தல வரலாறு: முன்பு ஒரு சமயம் சத்யலோகத்தில் பிரளயம் ஏற்பட்டது. அப்போது அயன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். அதையறிந்த கோமுகசுரன், அவரிடமிருந்து வேதங்களை அபகரித்து சென்றான். துயில் நீங்கி எழுந்த பிரம்மன் அதற்காக வருந்தி, அதனை அவனிடமிருந்து மீட்கும் பொருட்டு மஹாவிஷ்ணுவைக் குறித்து தவம் செய்ய எண்ணி,  தன் கையிலிருந்த தண்டத்தை ஒரு பிரம்மாச்சாரியாக மாற்றி ”பூவுலகில் தாமிரபரணி நதிக்கரையில்   தவம் புரிய ஒரு இடத்தை பார்த்து வா” என்று அனுப்பினார். அவனும் நதியின் இரு கரையிலும் பார்த்து விட்டு இறுதியாக திருக்கோளுருக்கு அருகில் உள்ள ஜயந்திபுரிக்கு வந்தான். அங்கு ஒரு மோகினியைக் கண்டு மோகித்து அவளுடன் காலம் கழித்து நான்முகன் கட்டளையை மறந்தான்.

இதையறிந்த சதுர்முகன் தன் கையிலிருந்த  கெண்டியை ஓர் பெண்ணாக்கி “ பெண்ணே! தவம் இயற்ற தாமிரபரணி நதிக்கரையில் ஒரு நல்ல இடம் பார்த்து வா” என்று அனுப்பினார்.  அவளும் வெகு நாள் பூவுலகில் சுற்றி  சோலைகள் நிறைந்த இந்த பரமபாவனமான இடமே தவத்திற்குரியது என்று பிரம்மனிடம் தெரிவித்தாள்.  பிரம்மனும் இங்குவந்து கடும் தவம் செய்ய, திருமால் அதற்கு இரங்கி சதுர்முகனுக்கு நேரில் காட்சி கொடுத்து, கோமுகாசுரனை முடித்து அவனிடமிருந்த வேதங்களை மீட்டு பிரம்மனிடம் அளித்தார்.
பிரமனும் “அகல் விசும்பும் நிலனும் இருளார் வினைகெட செங்கோல் நடாத்துவீர்” எப்படி வைகுந்தத்திலிருந்து இங்கு எழுந்தருளி சேவை சாதித்தீரோ அவ்வண்ணமே இங்கு எப்பொழுதும் சேவை சாதித்து அடியார்களின் “செடியாய வல்வினைகளை தீர்த்து அருள் புரிய   வேண்டும்”  இத்திருப்பதியும் ஸ்ரீ வைகுண்டம் என்ற திருநாமத்துடன் விளங்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய, பெருமாளும் அவ்வாறே இங்கு கோயில் கொண்டார். பிரமனும் தனது கெண்டியால் தாமிரபரணி தீர்த்தத்தை எடுத்து  பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்ததாலும், நதிக்கரையில் கலசத்தை ஸ்தாபித்ததாலும், இத்தீர்த்தம் “ கலச தீர்த்தம்” என்று வழங்கப்படுகின்றது. பிரமன் வைகுண்ட நாதருக்கு சைத்ர உற்சவம் நடத்தி பின் சத்திய லோகம் சென்றார்.


காய்சின பறவையில் கள்ளர்பிரான் 


வைகுந்தநாதன் சோரநாதன் ஆன வரலாறு: இத்தலத்தில் காலதூஷகன் என்ற கள்வன் ஒருவன் இருந்தான். அவன் திருடச்செல்லும் போது வைகுந்த நாதரிடம், தேவா! நான் எவ்விடத்தில் திருடச்சென்றாலும்  ஒருவரும் அறியாவண்ணம் திருடிவர வேண்டும். அவ்வாறு திருடிய பணத்தில் பாதியை உமக்கு காணிக்கையாகத் தருவேன் என்று வணங்கிச் செல்வான். குறுகிய காலத்தில் ஏராளமான செல்வத்தை கொள்ளை அடித்தான், தான் கூறியது போலவே அதில் பாதியை பெருமாளுக்கு காணிக்கையாக்கி வந்தான்.

ஒரு நாள் அரசன் அரண்மனையில் திருடும் போது அவனது சில சகாக்கள் அரச சேவகர்களிடம் மாட்டிக்கொண்டனர். அவர்கள் அரச தண்டனைக்கு பயந்து காலதூஷகனை காட்டிக்கொடுத்து விடுவதாக கூற அவனும் பகவானை சரணடைந்து  துதி செய்ய, கருணைக் கடலான கார்முகில் வண்ணரும் வயது முதிர்ந்த வேடத்தில் வந்து அப்பா நீ அஞ்ச வேண்டாம் தஞ்சமென்றவரை ஆதரிப்பது என் கடமை என்றார்.    

பிறகு பகவான் கால்தூஷகனாக வடிவெடுத்து அரண்மனைக்கு செல்ல வழியில் திருடர்கள் இவரை நோக்கி இவனே எங்கள் தலைவன் என்று கூற சேவகர்கள் அவரை அரண்மனைக்கு  அழைத்து சென்று அரசன் முன்னர் நிறுத்தினர். மன்னனும் நீ யார்? நீ இருப்பது எவ்விடம்? எதற்காக அரண்மனையில் புகுந்து கொள்ளையடித்தாய்? என்று வினவினான். அது கண்ட வைகுந்தநாதனாக இருந்து சோரநாதனான, காலதூஷகனான பெருமாள் அரசே! என் பெயர் கள்ளர் பிரான், ஸ்ரீவைகுண்டம் எனது இருப்பிடம், என் பிழைப்புக்காக உன் பணம் முழுவதையும் திருடினேன். உன் குற்றத்தை நீ தெரிந்து கொள்ளவில்லை பணத்திற்கு பங்காளிகள் நால்வர். அவர்கள் தர்மம், அக்னி, திருடன், ராஜா. இவற்றில் முந்தியது தருமம், தருமம் செய்யப்படாத செல்வம் கள்வனாகிய  என்னால் அபகரிக்கப்பட்டது. எனவே இனி தர்மம் செய்வாய் என்றார்.



அது கேட்ட அரசனும் சிங்காதனத்திலிருந்து எழுந்து  நமக்கு நற்புத்தி புகட்டியவர் பகவானே என்று தீர்மானித்து வைகுந்த நாதா! கள்ளர் பிரானே! இன்று முதல் தாங்கள்  சோரநாதன் (கள்ளர் பிரான்) என்ற திருநாமத்துடன் எழுந்தருளியிருத்தல் வேண்டும் என்று விண்ணப்பித்தான். அது முதல் உற்சவர் கள்ளர்பிரான் என்று வழிபடப்படுகின்றார். 





பால் திருமஞ்சனம்:
தென்னகத்தில் குறிப்பாக மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் பால்பாண்டி என்ற பெயரை மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டும் வழக்கம் உள்ளது. இது இத்தலத்து பெருமாளின் பெயராகும். பூவுலகில் ஸ்ரீவைகுண்டபதி பிரமன் தவத்திற்கு மகிழ்ந்து அர்ச்சா மூர்த்தியாக எழுந்தருளிய பிறகு அந்த சிறிய சன்னதியும்  மூர்த்தியும் பூமியில் புதையுண்டன.  பின்னர் பாண்டிய மன்னர் காலத்தில்,  இங்கு மேய்ச்சலுக்கு வந்த அரண்மனை பசு, தொடர்ச்சியாக இங்கிருந்த புற்றில் பால் சுரந்தது. இதையறிந்து வந்த பாண்டிய மன்னன், அவ்விடத்தில் சுவாமி சிலை இருந்ததைக் கண்டு  வெகு ஆனந்தம் கொண்டு ஆச்சரியமான பெரிய கோயில் எழுப்பினான். அன்றிலிருந்து தினமும் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து பூஜித்தான். இதனடிப்படையில் தற்போதும் தினமும் காலையில் இவருக்கு பால் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது. பாண்டியன் பால் அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்தமையால் இந்த சுவாமிக்கும் "பால்பாண்டி' என்ற பெயர் ஏற்பட்டது.

நம்மாழ்வார் பெருமாளை இரு பாடல்களால் வைப்புத்தலமாக  மங்களாசாசனம் செய்துள்ளார். அவையாவன

புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று
தெளிந்தவென்சிந்தையகங்கழியாதே என்னையாள்வாய்! எனக்கருளி
நளிர்ந்தசீருலகமூன்றுடன்வியப்ப நாங்கள்கூத்தாடிநின்றார்ப்ப
பளிங்குநீர்முகிலின்பவளம்போல்கனிவாய் சிவப்ப நீகாண வாராயே

ஆச்சாரியாரின் அழகிய விளக்கம்: நம்மாழ்வார் தனது பாசசுரத்தில் "புளிங்குடி கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்தில் நின்று" என்று மங்களாசாசனம் செய்துள்ளார். "பசியாக இருக்கும் ஒருவர்  சமையல் முடியும்வரையில் படுத்திருந்து காத்திருப்பார். பசி கூடும்போது, ஆர்வத்தில் எழுந்து அமர்ந்து கொள்வார். சமையல் முடிய இன்னும் தாம்தமானால் பொறுமையிழந்து எழுந்து நிற்பார். இதைப்போலவே நம்மாழ்வாருக்கு அருளவந்த பெருமாள், அவர் பக்தியில் உயர்நிலை அதையும் வரையில் முதலில் புளியங்குடியில் கிடந்தும் (பள்ளி கொண்ட கோலம்), பின் வரகுணமங்கையில் அமர்ந்தும், இந்த ஸ்ரீவைகுண்டத்தில் நின்றும் சேவை சாதிக்கின்றார்" என்று வைணவ ஆச்சாரியாரான அழகிய மணவாளப்பெருமான், நம்மாழ்வாரின் இந்த பாசுரத்திற்கு  வியாக்கியானம் செய்துள்ளார்.     

எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம் இணைஅடி தொழுது எழுந்து இறைஞ்சி
தங்கள் அன்பு ஆர தமது சொல் வலத்தால் தலை தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப்புளிங்குடியாய்! திருவைகுந்துள்ளாய்! தேவா!
இங்கண் மா ஞாலத்து இதனுளும் ஒரு நாள் இருந்திடாய்- வீற்று இடம் கொண்டே.(3575)

எங்கள் முன்னால் கண்ணுக்குத் தெரியும்படி உலகத்தவர் அனைவரும் உன் இணையார் திருவடிகளைத் தொழுதபடியும் பின் எழுந்தபடியும் வணங்கி உன்னைத் துதிக்கிறார்கள். அவர்கள் மிகுந்த பக்தியுடன் தத்தம் வார்த்தைகளால் உன்னைப் போற்றி வழிபடுகிறார்கள். இப்படிப்பட்ட மேன்மையுடைய நீ, சந்திரனைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ள மாடங்கள் நிறைந்த திருப்புளிங்குடியில் பள்ளி கொண்டுள்ளாய். நீயே ஸ்ரீவைகுண்டத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றாய். நீயே ஸ்ரீவைகுண்டத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றாய். தேவனே!  அகன்ற இந்த உலகத்தில், பரமபதத்தைப் போலவே இத்திருப்புளிங்குடியிலும் ஒரு நாள் வீற்றிருந்த திருக்கோலத்தில் எங்களுக்குக் காட்சி தர வேண்டும். 

மதுரகவியாழ்வார் 

நம்மாழ்வார் மங்களாசாசனம்: சித்திரை பெருந்திருவிழாவின் போது நம்மாழ்வார், பொலிந்து நின்ற பெருமாளுடன் ஸ்ரீவைகுண்டம் எழுந்தருளுவார். பெருமாளை மங்களாசாசனம் செய்தபின் அன்ன வாகனத்தில் எழுந்தருளும் சடகோபருக்கு கள்ளபிரான், பொலிந்து நின்ற பிரான், வரகுண மங்கை எம் இடர் கடிவான், திருப்புளிங்குடி காய்சினவேந்தன் ஆகிய நான்கு பெருமாள்களும் கருட வாகனத்தில் சேவை சாதிக்கின்றனர்.  



108 திவ்ய தேச சேவை: 
தை மாதம் முதல் நாள் அன்று கள்ளபிரானை 108 போர்வைகளால் போர்த்தி கொடி மரத்தை சுற்றி வந்த பின் பூஜை செய்து ஒவ்வொரு போர்வையாக களைகின்றனர். அன்றைய தினம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108  திவ்யதேசத்து எம்பெருமான்களாக கள்ளபிரான் சேவை சாதிப்பதாக ஐதீகம்.



ஆச்சரியப்பட வைக்கும் சிற்பங்கள்: பாண்டி நாட்டு திருக்கோயில்களின் சிறப்ப்பம்சமே உலகமே வியந்து போற்றும் சிற்பங்கள் ஆகும். இந்த ஸ்ரீவைகுண்டம் கோவிலும் அதற்கு விதிவிலக்கல்ல. 9 நிலைகளும் 110  அடி உயரமும் கொண்டுள்ள இராஜ கோபுரத்தில் அற்புதமான பல சுதை சிற்பங்கள் உள்ளன. இக்கோவிலின் திருவேங்கடமுடையான் சன்னதியில் நாயக்கர் காலத்தை சார்ந்த அற்புதமான கற்சிற்பங்கள் உள்ளன. அவை அனைவரது கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.  குறிப்பாக ஆதிசேஷனை குடையாகக் கொண்டு அமர்ந்த கோலத்தில் உபய நாச்சியார்களுடன் காட்சி தரும் வைகுண்ட பெருமாள் சிற்பம், மூன்று உலகங்களும் தன்னுள் அடக்கம் என்று உணர்த்தும்  அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த பெருமாள் சிற்பம், அன்பிற்கும்  உண்டோ அடைக்கும் தாழ்  என்பதை உணர்த்தும் இராமர், அனுமன் சிற்பம்,




 கணவனின் காலில் இருந்து முள்ளுடன் சேர்த்து வலியையும் எடுக்கும் மனைவி, யாழியின் வாலுக்குள்ளே ஆஞ்சநேயர், பலவித கோலங்களில் வானரங்கள் என ஆயிரம் கதை சொல்லும் சிற்பங்கள் அனைத்தும் தத்ரூபம்.  இனி வரும் பதிவில் திருப்புளிங்குடி காய்சின வேந்தரின் கருடசேவையைக் காணலாம் அன்பர்களே. 


Friday, December 27, 2013

திருக்குருகூர் பொலிந்து நின்ற பிரான் கருட சேவை


ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -5



முதலாவதாக நம்மாழ்வாருக்கு கருடசேவை சாதிப்பவர் குன்றம் போல் மணி மாடம் நீடு  திருக்குருகூரின் பொலிந்து நின்ற பெருமான் ஆவார். இத்தலம் நம்மாழ்வார் கோயில் கொண்டுள்ளதால்  ஆழ்வார்  திருநகரி என்றும் அழைக்கப்படுகின்றது.

ஓடியோடி பலபிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம்
பாடியாடிப் பணிந்து பலபடிகளால் வழியேறிக் கண்டீர்
கூடிவானவரேத்த நின்ற திருக்குருகூருதனுள்
ஆடுபுட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே

என்று நம்மாழ்வார் பாடியபடி  பிரளய காலத்தில் வெள்ளத்தால் அழிந்த உலகம் மீண்டும் தோன்றும் போது முதலில் தோன்றிய தலம் ஆகையால்  ஆதிபுரி என்றும். சங்கு வலம் வந்து பேறு எய்திய தலம் ஆகையால் குருகூர் என்றும் அழைக்கப்படுகின்றது.

ஹம்ச வாகனத்தில் நம்மாழ்வார்  

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் தண்பொருநல் எனப்படும் தாமிரபரணியாற்றின் தென் கரையில், வண்டலம்பும் சோலைகளையுடையதும், குன்றம் போல் மணி மாட மாளிகைகள் சூழ்ந்திருப்பதும், சிரங்களால் அமரர் வந்து வணங்கும் இந்த க்ஷேத்திரம் அமைந்துள்ளது.

சுவாமி நம்மாழ்வார், ஸ்ரீ இராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகிய முப்பெரும் ஆச்சார்யர்களால் சிறப்புப்பெற்ற தலம் என்பதால் இதனை முப்புரியூட்டிய திவ்யதேசம் என்றும், அகரம்(ஆழ்வார்), உகரம்(உடையவர்), மகரம்(மணவாள மாமுனிகள்) என்ற அ,உ,மகாரங்களான திவ்ய தேசம் என்றும் கூறுவர்.

 பரங்கி நாற்காலியில் மதுரகவியாழ்வார்


மூலவர் : ஆதிநாதர், நின்ற திருக்கோலம், கிழக்குப் பார்த்த திருமுக மண்டலம்.
உற்சவர்: பொலிந்து நின்ற பிரான்
தாயார் : ஆதிநாத வல்லி, குருகூர் வல்லி( தாயார்களுக்கு தனித்தனி சன்னதி)
விமானம்: கோவிந்த விமானம்
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், திருசங்கண்ணி துறை
தலவிருட்சம்: புளியமரம்
பிரத்யட்சம் : பிரம்மா, நம்மாழ்வார், மதுரகவி
ஆகமம் : பஞ்சராத்ரம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம் : நம்மாழ்வார் 11 பாசுரங்கள்.
கிரகம்: குருஸ்தலம்

தலவரலாறு: இவ்வுலகம் அழிந்து இரண்டு பரார்த்த கால அளவு வரை, உலகத்தில் உயிரினங்கள் தான் ஒருவனாகவே இருந்தார். பிறகு இந்த உலகை படைத்தார். அப்போது இக்குருகாக்ஷேத்திரத்தை தன் தீராத விளையாட்டுக்கு ஏற்ற இடமாக ஏற்படுத்திக் கொண்ட பின் நான்முகனைப் படைத்தார். பின்னர் நான்முகன் படைப்புத்தொழிலை துவங்கும் முன் அவர் நாராயணரை நோக்கி தவம் செய்தார். பிரம்மனின் தவத்திற்கு மெச்சி அவருக்கு பிரத்யட்சமான பெருமாள் அவரை நோக்கி உன்னுடைய தவத்தால் திருப்தியடைந்தேன், உனக்கு நான் என்றென்றும் துணையாக இருந்து நீ செய்யும் படைப்புத் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பேன் என உறுதியளித்து ஒரு இரகசியத்தையும் நான்முகனுக்கு  கூறுகின்றார். அண்டத்தை படைத்த பின்பு, அண்டத்தில் அடங்கிய பூமியில் உள்ள மலய மலையிலிருந்து தோன்றும் தாமிரபரணி என்னும் நதி தெற்கு லவண சமுத்திரத்தில் சேருகின்றது. அந்த நதியின் தென்கரையிலே கடலுக்கு ஒரு யோசனை தூரம் மேற்கே உள்ள தலம் மனோகரமாய் இருப்பதால் இதில் நான் வாசம் செய்கின்றேன். நீ இப்போது கண்ட எனது திருமேனியோடும் திருமகளோடும் கூடி நித்தம் விளையாடிக் கொண்டிருக்கிறேன். ஹரி க்ஷேத்திரங்களில் நான் முதன் முதலில் அவதரித்ததால் இது "ஆதி க்ஷேத்திரம்" என்றழைக்கப்படும். பிரம்மாவும் தாங்கள் குருவாக இருந்து இந்த தலத்தைக் காட்டியதால் குருகூர் என்றும் வழங்கப்பட வேண்டும் என்று வேண்ட அவ்வாறே வரம் அளித்தார்.

பின் நாராயணர் பிரம்மனிடம் குருகாக்ஷேத்திரம் சென்று ஆதிநாதனை வழிபட உன்னுடைய வேண்டுதல்கள் முழுவதும் பலிக்கும். சில வருடங்களுக்குப்பின்  இப்போது கண்ட திருமேனியை அனைவரும் கண்ணிலே காணும் படியாக அந்த ஷேத்திரத்தில் காண்பிக்கப் போகின்றேன். பூமிக்கு அழிவு உண்டாகும் காலத்தில் கூட இந்த குருகாஷேத்திரம் அழியாது.  இருபத்தெட்டாவது கலியுகத்திலே “சடகோபர்” என்னும் திருநாமம் கொண்டு யோகியாய் அவதரிக்கப் போகிறேன். அப்போது வடமொழி வேதங்களை தமிழ் மறைகளாக்கப் போகிறேன். அத்தமிழ் மறைகளாலேயே கலியுகத்தில் வெகு ஜனங்கள் முக்தியடையப் போகிறார்கள் என்று பிரம்மனிடம் கூறிவிட்டு நாராயணன் அந்தர்தியானமானார். 


பஞ்ச மஹா க்ஷேத்திரம்:
இந்த க்ஷேத்திரம் இதர புண்ணிய ஸ்தலங்களைக் காட்டிலும் சிறந்தது. இந்த க்ஷேத்திரத்தை நினைத்த மாத்திரத்திலேயே சகல பாவங்களும் அழிந்து விடும். இந்த தலம் பஞ்ச மஹா க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகின்றது. 1) ஆதி க்ஷேத்திரம், 2) வராஹ க்ஷேத்திரம், 3) சேஷ க்ஷேத்திரம், 4) தீர்த்த க்ஷேத்திரம், 5) தாந்த க்ஷேத்திரம்  என ஐந்து பெயர்கள் உண்டு.  

1) ஆதி க்ஷேத்திரம்:  பூமியிலுள்ள ஹரி க்ஷேத்திரங்களில் மஹா விஷ்ணு முதன் முதலாக வாசம் செய்த காரணத்தால் இது ஆதி ஷேத்திரம் என அழைக்கப்படுகின்றது. பெருமாளும் ஆதிநாதன் என்றழைக்கப்படுகின்றார். இதனையே நம்மாழ்வாரும்

ஒன்றுந் தேவுமுலகு முயிருமுற்றும் யாதுமில்லா
அன்றுநான் முகன்றன்னோடு தேவருலகோடுயிர் படைத்தான்
குன்றம்போல் மணிமாட நீடு திருக்கூரதனுள்
நின்ற ஆதிப்பிரானுரையுமூர்.   என்று திருக்குருகூரின் பெருமையைப் பாடுகின்றார்.

2) வராஹ க்ஷேத்திரம்: ஊழிக்காலத்தில் வெள்ளத்தால் மூழ்கி பாசி படிந்து கிடந்த பூமிப்பிராட்டியை மீட்டு எடுப்பதற்காக ஆதிப்பிரானானவர், நீருக்கும், சேற்றிற்கும் அஞ்சாத வராஹ ரூபம் கொண்ட, கொம்பினால் சேற்றைக் கிண்டி எடுத்து பூமிப்பிராட்டியைமீட்டு மடியில் வைத்து இளைப்பாற்றி ஞான உபதேசம் செய்த காரணத்தினால் ஞானபிரான் என வழங்கப்பட்டார். இன்றும் அதே கோலத்தில் ஆதிநாதருக்கு வலப்பக்கத்தில்  தனி சன்னதியில் சேவை சாதிக்கின்றார்.   

பூமிப்பிராட்டியாருக்கு உபதேசித்த ஞான உபதேசமானது சீரிய பொருள் அமைந்ததாகும். என்னையே திடமான கதியாகக் கொண்டு சரணடைந்தவன் மரண காலத்தில் நினைவிழந்து கட்டையைப் போலவும், கல்லைப் போலவும்  கிடக்கும் போது அவன், என்னை நினையா விட்டாலும், நான் அவனை நினைத்து எல்லாவற்றிலும் உயர்ந்த கதியை அடைவிப்பேன் என்பதாகும்.

3) சேஷ க்ஷேத்திரம்: திருவனந்தாழ்வானாகிய ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன் உறங்காப்புளியாக வாழும் தலமாகையாலும், திருப்புளியாகிய அதனடியில் ஆதிபிரான் ஸ்ரீ நம்மாழ்வாராகப் பிறந்து கோயில் கொண்ட தலமாகையால் இது சேஷ க்ஷேத்திரம் ஆகியது.

4) தீர்த்த க்ஷேத்திரம்: தன்பொருநை எனபப்டும் தாமிரபரணி ஆறும், அதிலுள்ள திருச்சங்காணித் துறையும் தீர்த்தங்களாகவும் விளங்குவதால் இது தீர்த்த ஷேத்திரம் எனப்படுகின்றது.

5) தாந்த க்ஷேத்திரம்: தாந்தன் எனும் இழிபிறப்பினன் திருமாலினுடைய  அன்பினால் தேவரும் தொழும்படியாக உயர்ந்த ஊர் ஆகையால் இது தாந்த ஷேத்திரம் என அழைக்கப்படுகின்றது.

ஆடுபுட்கொடி ஆதி மூர்த்தி


நம்மாழ்வாரின் பாசுரங்கள் மாலையாக்கப்பட்டு பெருமாளை அலங்கரிப்பதைக் காணுங்கள். இரண்டு திருவாசிகள் மற்றும் கருடாழ்வாருக்கும் முழுவதும் மலர் அலங்காரம் முதல் தடவையாக அடியேன் தரிசனம் செய்தேன். பெருமாளின் சிறிய திருவாசியில் தசாவதாரத்தை கவனித்தீர்களா அன்பர்களே. இப்படங்கள் எல்லாம் கோபுர வாசல் சேவையின் போது  தூரத்தில் இருந்து எடுத்தவையாதனால் அவ்வளவு  சரியாக வரவில்லை மன்னிக்கவும். 

வேடனுன் யானையும் முக்தி அடைந்த வரலாறு: முன்பொரு காலத்தில் சில மகரிஷிகள் ஸ்தல யாத்திரை செய்யும்போது  வகுளம், சண்பகம்  முதலிய மரங்களும், தாமிரபரணி நதி கரையோரம் அமைந்ததுமான இந்த ஆதி க்ஷேத்திரத்தை அடைந்து நதியில் குளித்து பெருமாளை வணங்கி இரவில் அங்கே தங்கினர் காலையில் அவர்களுக்கு எதிரே ஒரு வேடனுன் ஒரு மத யானையும் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். இறிதியில் இருவரும் மாண்டனர். ஆதிக்ஷேத்திரத்தில் மாண்டததனால் விஷ்ணு தூதர்கள் இருவரையும் அழகிய விமானதிலேற்றி விஷ்ணு லோகத்திற்கு அழைத்து சென்றனர். மகாபாவிகளான யானையையும், வேடனையும் நரகத்திற்கு அழைத்துச் செல்ல வந்த எமதூதர்கள், விஷ்ணு தூதர்களை எதிர்க்க சக்தியில்லாமல் திரும்பி சென்றனர். இவ்வாறு மகாபாவிகளுக்கும், ஐந்தறிவு கொண்ட விலங்கிற்கும் இந்த க்ஷேத்திரத்தில் முக்தி கிட்டியது. 

தாந்தன் வரலாறு:
சாளக்கிராமத்தில் ஒரு அந்தணச்சிறுவன் வேதம் படிக்கும் போது  அதை சரியாக படிக்காமல் போனதால் அவனுடைய குரு அவனை இழி குலத்தில் பிறக்க சபித்தார். அவனும் படிப்பை நிறுத்திவிட்டு திருமால் ஸ்தலங்களில் ஆலய துப்புரவு பணியில் ஈடுபட்டு தன் காலத்தை கடத்தினான். மறு பிறவியில் அவன் தாந்தன் என்னும்  பெயரில் கீழ் குலத்தில் பிறந்து ஒழுக்கத்தில் சிறந்தவனாக விளங்கினார். பின்னர் குருகூர் வந்து திருச்சங்கண்ணி துறைக்கு வந்து ஆதிநாதனை வழிபட்டு வந்தான்.

ஒரு சமயம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும்  போர் நடந்த போது இந்திரனின் பலம் குறைந்தது. நான்முகனின் ஆலோசனைப்படி இந்திரன்  மற்ற தேவர்களுடன்  ஆதிக்ஷேத்திரத்திற்கு வந்து சேர்ந்தான். மஹா விஷ்ணுவை பூஜிப்பதற்காக இந்திரனும் தேவ கன்னியரும் மலர் பறிக்க சென்றனர். தாந்தனும் அங்கு  பூப்பறித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து அவனை சூத்ரன், சூத்ரன் என்று இகழ்ந்தார்கள், மனதில் கோபம் இல்லாமல் தாந்தன் ஆதிநாதனை ஆராதிக்க சென்றான். அங்கும் இந்திராதி தேவர்கள் தாந்தனை சூத்ரன் என்று பழிக்க  அவர்களது கண் குருடாகியது. அவர்களை பெருமாளை சரணடைய, அசரீரியாக நீங்கள் விஷ்ணு பக்தனான தாந்தனை ஜாதி துவேஷம் கொண்டு அவமதித்ததால் இவ்வாறு நேர்ந்தது, அவனிடம் மன்னிப்பு கேளுங்கள் என்றார்.  


இந்திரனும் தாந்தனிடம் ”நீ எங்களை மன்னித்தால்தான் திருவுக்கும் திருவாகிய செல்வன் எங்களுக்கு அனுக்கிரகம் செய்வான்”  என கூறி தாங்கள் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவிக்க, தாந்தனும் கேசவனை வணங்க அவர் அருளால் இந்திராதி தேவர்களுக்கு கண் தெரிந்தது. ஆகவே பெருமாள் பொலிந்து நின்ற பிரான் எனப்படுகின்றார். பின்னர் ஆதிநாதர் தாந்தனுக்கு வைகுண்டப்பதவியும் அளித்தார். ஆதிநாதர் கோவிலில் அர்த்த மண்டப முதற்படிக்கட்டில் தாந்தன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.  



சங்கு பூஜித்து முக்தி பெற்ற க்ஷேத்திரம்:
குருகு என்ற தமிழ் சொல்லுக்கு நாரை, கோழி, குருகத்தி மலர் முதலான பல பொருள் இருப்பதுடன் சங்கு என்ற பெருமையும் உண்டு. குருகு(சங்கு) பேறு பெற்ற தலமாதலால் இப்பகுதி குருகூர் ஆனது. குருகன் என்னும் அரசன்  இப்பகுதியை ஆண்டதால் அவன் நினைவாக குருகூர் ஆனது என்பர்.  முன்பொரு காலத்தில் ஜம்பு நதிக்கரையில் சங்கன் என்னும் ஒரு முனிவர் இந்திரப்பதவி வேண்டி கடுந்தவம் செய்தார். அவன் முற்பிறவியில் கிராதன் என்னும் மஹாபாவியாக இருந்தவன் ஆயினும் அவன் ஒரு ‘னாள் வேட்டையாடி விட்டு வந்த போது தாந்தன் படுத்து தூங்கிய ஆலமராத்தினடியில் தூங்கியதால் மறு பிறவியில் அவனை பிராமண குலத்தில் பிறக்கச் செய்தது. அவன் விஷ்ணுவையும் மற்ற தெய்வங்களையும் சமமாக பாவித்ததால் நாரதர் அவனுக்கு  நீ, தெற்கு லவணக் கடலில் சங்காக பிறக்கக் கடவாய் என்று சாபம் அளித்தார்.

சங்கமுனி சாப விமோசனம் வேண்டி வணங்க, நாரதரும் கவலைப் படாதே  நீ கிராத ஜன்மத்தில் செய்த பாவமும், இந்த ஜென்மத்தில் செய்யும் பாவங்களும் அழிந்து போகும், இந்திரப் பதவியை விரும்பாதே, மோட்சத்தில் மனதை வைத்து தென்திசையில் தாமிரபரணி நதிக்கரையில் ஆதிக்ஷேத்திரத்தில் பகலில் பகவானை சேவித்தும் இரவில் கடலில் காலத்தைக் கழித்துக்கொண்டிரு, இவ்வாறு ஆயிரம் வருட காலம் கழிந்த பின் தேவபிரான், ஸ்ரீதேவி, பூமிதேவி, நீலாதேவி சமேதராய் உன் முன்னே தோன்றுவார் உன் வேண்டுதலின் பேரில் ஒருவர் கன்ணுக்கும் புலப்படாத அவனது திருமேனியை அனைவருக்குக் காட்டப்போகிறான். அவருக்கு ஆதிநாதர் என்று திருநாமம். நீ தாமிரபரணியில் நீராடுவதால் அந்நதி தீர்தத்திற்குபெயர் வரப்போகின்றது என்று அருளினார் நாரதர்.

சங்கமுனியும் நாரதரின் சாபத்தினால் வங்கக்கடலிலே வலம்புரிச்சங்காக  ஜென்மம் எடுத்தான். பூர்வஜென்ம வாசத்தால், நாரதரை மனதில் நினைத்துக்கொண்டு குருகாக்ஷேத்திரத்தையும், நதியையும் அடைந்தான். நாரதர் தோன்றி அவனை ஆசீர்வதித்து சென்றார். சங்கராஜனும் நாரதர் கூறியபடி தன் சங்கு பரிவாரங்களுடன் பகலில் க்ஷேத்திரத்திலும் இரவில் கடலிலும் வசித்து வரலானான். இப்படியாக ஆயிரம் ஆண்டுகள் விரதம் முடியும் நாளும் வந்தது. சித்திரை மாத உத்திர நட்சத்திரத்தில் எப்போதும் போல் சங்கராஜன் காலையில் எழுந்து  பகவானை அர்ச்சிக்க ஆதிக்ஷேத்திரத்திற்கு  ஓடி வந்து பூஜையை முடித்து மெதுவாக பிரதட்சிணம் செய்ய ஆரம்பித்தான். ஸ்ரீபூமிநீளாநாயகன் கருடனில் ஆரோகணித்து வந்து சங்கனுக்கும் மற்ற சங்குகளுக்கும் பரம்பதம் அளித்தார்.

பின் ஆதிநாதன் கருடவாகனத்தை விட்டு இறங்கி கிழக்கு முகமாக  ஒரு முகூர்த்த நேரம் நின்றார். தேவர்களும், ரிஷிகளும், கந்தவர்களும் ஆதிநாதனை வாழ்த்தி துதித்தனர்.

பின்னர் ஆதிநாதன் நான்முகனை நோக்கி இந்த க்ஷேத்திரத்தில் ஒரு தடவை செய்த புண்ணியம், பாவத்தை அழிக்கும் விஷயத்தில் ஆயிரம் மடங்காகும். இத்க்ஷேத்திரத்தில் இறந்த பாவிகளும் முக்தியடைவார்கள். தாந்தன், கிராதன், யானை, சங்கன் அவனுடன் சேர்ந்த சங்குகள்   முதலானோர்  இங்கே முக்தியடைந்திருக்கிறார்கள் எனவே முக்தியடைய விரும்பும் சந்நியாசிகள் இங்கு வந்திருக்கிறார்கள்.  நான் இங்கிருந்தபடியே  எல்லா ஸ்தலங்களிலும் விளையாடிக்கொண்டிருப்பேன்.  நான்முகனே! நீ என்னையும், சதுர்பாகுவான கருடனையும், தென்பக்கமாக பூதேவியை மடியிலே வைத்துக்கொண்டிருக்கும் வராஹ ரூபியையும் அர்ச்சாரூபமாக செய்து அர்சித்து வா என்று அருளினார்.

இந்திரன் கிழத்தனம் நீங்கியது:  முன்பு இந்திரன் தன் மமதையினாலும், மதுபான மயக்க்கத்தினாலும் தனது மனைவியுடன் விளையாடிக் கொண்டிருந்த போது அப்போது அங்கு வந்த  அவனது பெற்றோர்களான காசிப முனிவரும் அதிதி தேவியையும்  உபசரிக்காமலிருக்க காசிபர் கோபம் கொண்டு, நீ செல்வத்தையெல்லாம் இழந்து உனது இளமையையும் இழக்கக் கடவாய் என்று சாபம் அளித்தார். சாபம் பெற்ற இந்திரன் தன்க்கு சாப விமோசனம் தருமாறு வேண்ட காசிபர் மனமிரங்கி , நீ தாமிரபரணி தீரம் சென்று ஆதிநாதனை பணிந்து தவம் செய்தால் பெருமாள் உனக்கு அருள் புரிவார் என்றார். இந்திரனும் அவ்வாறே ஆதிக்ஷேத்திரம் வந்து வராஹ தீர்த்தத்தில் நீராடி ஆதி வராஹனையும், ஆதி நாதனையும் வழிபட பகவான் தோன்றி அவனுக்கு  சாப விமோசனம் அளித்தார்.

பகவான் இந்திரனைப் பார்த்து “நான் உனக்கு நாதன்” என்றபடியாலும், ஆதியில் தோன்றிய ஸ்தலத்தில் வாசம் செய்யும் இறைவன் ஆனபடியாலும் ஆதிநாதன் என்றார்.


          .         பொலிந்து நின்ற பிரான் கருடசேவை 

கருடன்: இத்திருக்கோயிலில் கருடன் அமைப்பு சற்று வித்தியாசமாக உள்ளது. கருட பகவான் எல்லா கோயில்களிலும் கை கூப்பி வணங்கிய நிலையில் அமைந்திருப்பார். இத்திருக்கோயில் மட்டும் கைகளில் அபஹஸ்தமும், நாகரும், சங்கு சக்கரத்துடனும் சதுர் புஜ கருடனாக காணப்படுகிறார்.

உறங்காப்புளி என்னும் திருப்புளி மர வரலாறு :   திருமால்  ஸ்ரீஇராமராக அவதாரம் செய்து   இலங்கை சென்று இராவணனை வென்று சீதாப் பிராட்டியை சிறை மீட்டு  அயோத்தியின் அரசு பொறுப்பேற்று, நீதி தவறாமல் பதினோராயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.

பின்னர் அவர் வைகுண்டம் செல்வதற்கு முன் தனிமையில்  யமதர்மராஜருடன் அளவளாவிக் கொண்டிருந்த  போது தங்களது பேச்சுக்கு இடையூறு ஏற்படாமலிருக்க யாரையும் உள்ளே விடவேண்டாம் எனது இலக்குவனுக்கு ஸ்ரீராமர் ஆணையிட்டார்.

அப்போது துர்வாசமுனி  வர முனிவரின் கோபத்திற்கு பயந்து இராமரின் ஆணையை மீறி அவரை  அரண்மணைக்குள்ளே அனுமதிக்க அதனால் கோபம் கொண்ட இராமர் அவரைத் தேட, இலக்குவன்  சரயு நதிக்கரையில் நிற்பதைக் கண்டு, “ இதற்கு முன் தந்தையையும், தர்மத்தையும் நிந்தித்தாய், தற்போது எனது ஆணையை மீறிவிட்டு என்முன் அசையாமல் நிற்கிறாய். ஆதலால் நீ ஒரு அசையாப் பொருளாக ஆகக் கடவாய்” என சாபமிட்டார்.

சாபத்தை கேட்ட இலக்குவனும் இடியோசை கேட்ட நாகம் போல் பதைதிபதைத்து பகவானின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினான். ஸ்ரீராமனும் மனமிரங்கி ”லக்ஷ்மணா எனது சாபம் பலித்தே தீரும். இந்த அவதாரத்தில் நான் நிரபராதியும் கர்ப்பிணியுமான சீதையை  காட்டிற்க்கு அனுப்பிய வினை என்னை விடாது அதற்காக அசையாப் பொருளாக உள்ள உன்னருகில் நான் ஓர் பிரம்மச்சாரியாய் ஐம்புலன்களையும் வென்று ஞானமுத்திரை தரித்து "சடகோபன்” என்ற திருநாமம் பூண்டு வாசஞ்செய்யப்போகிறேன்.

இங்கிருந்து நீ புறப்பட்டு சென்று  தண்பொருநை ஆற்றின் தென் கரையிலுள்ள வராஹ க்ஷேத்தித்ரதை அடைந்து அங்கு ஒரு புளியமரமாக மாறப்போகிறாய். கலியில் காசிப முனிவர் காரி என்ற பெயருடன் பிறப்பார். அவரது மனைவி  உடையநங்கையாக தேவமாதா பிறப்பார். அவர்களுக்கு நானே குழந்தையாகப் பிறந்து 12ம் நாள் புளியமரமான உனது பொந்தில் புகுந்து கலியுக ஆரம்பத்தில் நாட்டு நலனுக்கு வடமொழி வேதங்களை தமிழ் மாலைகளாகச் செய்யப் போகின்றேன் என்று கூறினார்.

பிறகு இராமர் தனது கணையாழியை கொடுத்து அது  நழுவும் இடத்தில் நீ ஓர் புளியமரமாக மாறுவாய் என்று கூறினார்.  இலக்குவன் கணையாழியுடன் உலகை வலம் வரும் போது இந்த ஆதி க்ஷேத்திரத்தில் கணையாழி நழுவி விழ அங்கேயே உறங்காப்புளியாக மாறிவிட்டார்.

இத்திருக்கோவிலின் திருப்புளி ஸ்ரீலக்ஷ்மணனின் அம்சமாக உள்ளது. 14 வருடம் வனவாசத்திலிருந்த ஸ்ரீராமரை ஊன் உறக்கமின்றி நொடிப் பொழுதும் கண் துஞ்சாமல் காத்த இளைய பெருமாளின் அம்சமாக விளங்கும் இப்புளியமரத்தின் இலைகளும் ஒரு போதும் உறங்குவதில்லை. இப்புளியமரம் பூக்கும், காய்க்கும், ஆனால் ஒரு போதும் பழுத்தது கிடையாது.
இத்திருப்புளிய மரத்தின் மரசுற்று சுவரில் நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த 36  திவ்ய தேச பெருமாள்களின் திருஉருவங்களும் பொறிக்கப்படுள்ளது. அதனை தரிசிப்பதின் மூலம் நாம் 36  திவ்ய தேச பெருமாள்களையும் ஒரு சேர ஒரே இடத்தில் சேவிக்கும் அரிய வாய்ப்பும் பலனும் நமக்கு கிடைக்கின்றது.    


சடகோபர் 

ஸ்ரீநம்மாழ்வார்  வரலாறு: 

பாண்டிய நாட்டில், தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள தற்போது ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்படும் திருக்குருகூரிலே வேளாள மரபில் திருமாலுக்கே தொண்டு பூண்டொழுகும் குலத்தில் திருவழுதி வளநாடர் என்னும் பரமபாகவதரின் வழித்தோன்றலாக வந்த காரியார்  உடைய நங்கை தம்பதிகளுக்கு  திருமகவாக  கலியுகத்தில்  பிரமாதி வருஷம், வைகாசி திங்கள், விசாக நட்சத்திரம்  சுக்ல பட்சம் சதுர்த்தசியுடன்   கூடிய நன்னாளில் திருஅவதாரம் செய்தார் ஆழ்வார். திருக்குறுங்குடி நம்பியே நம்மாழ்வாராக  அவதாரம் செய்ததாக ஐதீகம்.

திருமாலது அம்சமும் அவரது கௌஸ்துபத்தின் அம்சமும், விஷ்வஷேனரது அம்சமும் பொருந்திய ஆவார், பிறந்த குழந்தையைப் போலல்லாது உலக இயற்கைக்கு மாறாக அழுதல், பாலுண்ணல் முதலிய செயல்கள் இல்லாமல் இருந்தார். கருப்பையில் அறியாமை தீண்டாத கருவை சடமென்ற வாயு தீண்டி அறியாமைக்குள்ளாக்கி அழுதல், அரற்றுதல் முதலிய செய்கைகளை தூண்டுகின்றது என்பர்.  இவ்வாறு இயற்கைக்கு மாறாக இருந்ததால் “மாறன்” என்றும், சடம் என்ற வாயுவை ஹும் என்று ஒறுத்ததால் ஆழ்வார்சடகோபர்என்னும் திருநாமம் பெற்றார்.

காரியாரும் உடையநங்கையும் குழந்தை  பிறந்த 12ம் நாள்  திருக்குருகூரில் உள்ள பொலிந்து நின்ற  ஆதிபிரான் சன்னதிக்கு அவரை எடுத்து சென்று சேவிக்கப் பண்ணி, ஆதிசேஷனின் அம்சமான திருப்புளியின் ஒரு பொந்தில்  ஞான முத்திரையுடன் அமர்ந்து பதினான்கு ஆண்டுகள் தவமியற்றினார்.

இதற்கிடையில் திருக்குருகூருக்கு தென்கிழக்கேயுள்ள திருக்கோளூரில், வன்குருகூர் நம்பி பிறப்பதற்கு முன்பே அந்தணர் குலத்தில் மதுரகவியாழ்வார் தோன்றி மறைவல்லவராய், திருமாலை தொழுது வரும் வேளையில்  ஒரு நாள் அவரது வயலில்  ஒரி கிழப்பசு மேய்ந்தது அதைக்கண்டு அவர் கையில் ஒரு கம்புடன் அதை துரதிய பசு அந்த பசு கீழே விழுந்து இறந்தது. உடனே அந்த பாவத்திற்கு பிராயசித்தமாக வடநாட்டு தலங்களுக்கு தீர்த்த யாத்திரை மேற்கொண்டார்.  வடக்கே காசியில் தவமிருந்த போது  ஒரு நாள் தெற்கே ஒரு பேரொளியைக் கண்டார்.

அதை நோக்கி நடந்து வந்தார். பல நாட்கள் சென்றது அவர் செம்பொன் மாடதிருக்குருகூர் வந்ததைந்தவுடன் ஒளி மறைந்து விட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு ஊரை அடைந்த மதுரகவியாழ்வார் ஜோதியாக வந்து தம்மை அங்கு அழைத்து வந்தது திருப்புளிய மரத்து ஆழ்வார்தான் என்பதை உணர்ந்தார்.   பதினாறு ஆண்டுகளாக ஏதும் பேசாமல், நகராமல், உறங்காப்புளியில் ஞான முத்திரையுடன்  மோன தவம் செய்த மாறனிடம், கேட்ட புதிர் என்னவென்றால்,

செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்,
எதைத் தின்று? எங்கே கிடக்கும்?

இக்கேள்வியைக் கேட்டவுடன், ஞானக் கொழுந்தான நம்மாழ்வார், முதன் முறையாகத் தன் திருவாய் திறந்து, விடை பகன்றார்.

அவருரைத்த பதிலாவது,

அத்தைத் தின்று; அங்கே கிடக்கும்.

அதாவது, செத்தது என்பது நம் உடல்; சிறியது என்பது உயிர். உயிரானது உடலினுள் இருக்கும் பொழுது அதற்கென்று தனியான இன்பம், துன்பம் எதுவும் கிடையாது. உடல் நொந்தால், உயிரும் நோகும்; உடல் இன்புற்றால், உயிரும் அப்படியே இன்புறும். அதனால், உயிரானது உடலின் இன்ப, துன்பங்களைத் தின்று, அங்கேயே இருக்கும்.

என்று, அந்த உயிர் உண்மையை(தன்னிலை அறிதல்) உணர்கிறதோ, அன்று அது இறைவனைப் பற்றிய எண்ணங்களையே உணவாக உண்டு, அவரது திருவடி நிழலிலே நீங்கா நிலைத்துவிடும்.

நம்மாழ்வார்தான் இருந்த இடத்தை விட்டு எங்கேயுமே போனதில்லையே. பின்னர் எப்படி பாசுரங்கள எல்லாம் பாடினாரு? பாசுரக்கள், எம்பெருமானின் 108 திவ்ய தேசங்கள பத்தினதாச்சே!

எம்பிரானின் அவதாரம் தானே நம்மாழ்வார், அவருக்கே அவர் இருக்கின்ற இடங்கள் எல்லாம் தெரியாதா, என்ன? நம்மாழ்வார், திருவாய் திறந்து பாசுரங்களை எல்லாம் பாடத்துவங்கின போது, மகாவிஷ்ணு, அன்னை லெட்சுமி தேவியுடன், தன் கருட வாகனத்தில் சேவை சாதித்தார். அது மட்டுமல்லாமல், திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தும் அவர் மனக்கண்ணில் தோன்றின. அவைகளை மங்களாசாசனம் செய்தார் நம்மாழ்வார்.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 1000 க்கும் மேற்பட்ட (1102) பாடல்கள் நம்மாழ்வாரால் பாடப்பெற்றவை ஆகும். அவரது திருமொழிகள் மொத்தம் 4 ஆகும். அவை,

திருவிருத்தம் - இது 100 பாசுரங்களைக் கொண்டுள்ளது. இந்நூலில், அவர் ரிக் வேதத்தினுடைய சாராம்சங்களை அமைத்துள்ளார்.

திருவாசிரியம் - இந்நூல் மிகக் குறைவான பாடலைக் கொண்டுள்ளது. அதாவது 7 பாடல்கள் உள்ளன. இதில் யசூர் வேதத்தின் அம்சங்களைக் கொடுத்தருளியிருக்கிறார்.

பெரிய திருவந்தாதி - இதில் 87 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களில் அதர்வண வேதத்தின் கருத்துகளை ருசிக்கலாம்.

விருத்தம், ஆசிரியம், அந்தாதி ஆகிய மூன்றும், ஒரு வகையான செய்யுள் ஆகும். அவை இறைவனின் பெயரில் பாடப்பெற்றவையால், அவற்றிற்கு திரு என்னும் அடைமொழி சேர்த்து திருவிருத்தம், திருவாசிரியம், திருவந்தாதி என்று அழைக்கப்படுகின்றன.

திருவாய்மொழி - இதில் 1102 பாடல்கள் உள்ளன. இவற்றில் சாம வேதத்தின் சங்கதிகளை சுவைக்கலாம்.

இவ்வாறு, ரிக், யஜூர், சாம, அதர்வண என்னும் 4 வேதத்தினையும், தமிழில் படைத்து, தமிழ் மக்களும் வேதத்தின் அர்த்தங்களைப் புரிந்து அதன் பலனை அடைய அருளிச்செய்ததினால், நம்மாழ்வார, 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று அழைக்கப்படுகின்றார். இவரது பாடல்கள் அனைத்திலும் வேதத்தின் சாரம் செறிந்து இருப்பதை, அவரது பாடல்களை உளமார ஓதும் வேளையில் உணரலாம். இவர், இறைவனை தலைவனாகவும், தன்னை தலைவியாகவும் பாவித்து பாசுரங்கள் பாடினார்.

மதுரகவியாழ்வார் 

மதுரகவியாழ்வாருக்குப் பிறகு நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள் வழக்கொழிந்தன. பிற்காலத்தில் வைணவ சமயத்திற்கு புத்துயிர் ஏற்படுத்துவதற்காக சிதம்பரத்திற்கு அருகில் உள்ள வீரநாராயணபுரம் என்னும் காட்டுமன்னார் கோயிலில் அவதரித்த ஆச்சாரியார் நாதமுனிகள் அழிந்துவிட்ட நாலாயிரம் பாடல்களையும் தேதும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது திருக்குடந்தையில் பாடக்கேட்டு இப்பத்து பாடல்களுடன் கூடிய ஆயிரம் பாடல்களும் எங்குள்ளது என்று கேட்க அவர் தமக்கு  தெரியாது என்று கூற, நாதமுனிகள் திருக்கோளூர் வந்து மதுரகவியாழ்வார் வம்சாவழிகளிடம் கேட்க அவர்களும் தமக்கு தெரியாது ஆனால் கண்ணி நுன்சிறித்தாம்பு என்னும் பத்து பாடல் மட்டும்தான் தெரியும் என்று கூறினார்.

மேலும் இப்பாசுரத்தை புளிய மரத்தடியில் இருந்து ஒருமனதாக ஐம்புலன்களை அடக்கி பன்னிராயிரம் முறை மனதில் உருப்போட்டு ஜபித்தால் ஆழ்வார் தோன்றுவார் என அவர் கூறியதைக் கேட்டு நாதமுனிகளும்  திருக்குருகூர் க்ஷேத்திரம்வந்து  திருப்புளியமரத்தடியில் ஒரு மனத்துடன் இந்த பாசுரத்தை  பன்னீராயிரம் முறை ஜபிக்க ஆழ்வார் ஒரு முதியவராய் வந்து நாதமுனிகளிடம் இக்கலியில் ஆழ்வாராவது காட்சி  அளிப்பதாவது என்று இகழ்ந்தார். சிறிதும் மனம் சோர்வடையாத நாதமுனிகள் தன் எண்ணம் ஈடேறாமல் போவதில்லை என்று பதில் சொல்ல,  நாத முனிகளின் உறுதியைக் கண்டு ஆழ்வார் சேவை சாதித்து ஏழு திரையிட்டு ஆயிரம் மட்டுமல்ல நாலாயிரமும் பெற்றுக் கொள்க என்று சொன்னார். அவ்வாறு நாதமுனிகளும் நாலாயிரத்தையும் பெற்று அவற்றுக்கு பண் அமைத்து பாடி தனது ஊர் சென்று சேர்ந்தார். நாதமுனிகளின் நற்பெரும் தொண்டினாலேயே நாலாயிரம் திவ்ய ப்ரபந்தம் நாடெங்கும் பரவித் தழைத்தது. நலமுற வளர்ந்தது. 

தாமிரபரணி ஆற்றங்கரையில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் மூன்று பிரகாரங்களுடன் கோயில் அமைந்துள்ளது. பிரகாரத்தில் ராமர், வேணுகோபாலன், கருடன், திருப்புளியாழ்வார், நரசிம்மர், வராகப்பெருமாள், திருவேங்கடமுடையான், நாத முனிகள் ஆகியோருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக ஐதீகம். ஸ்ரீரங்கத்தை போலவே அரையர் சேவை நடக்கிறது. இங்கு திருமஞ்சனத்தின் போது பிரபந்தங்களை தாளம் போட்டுக்கொண்டே சொல்லும் பழக்கம் உள்ளது. பெருமாள் பிரம்மச்சரிய யோகத்தில் இருப்பதாகவும் ஐதீகம். இருந்தும் லட்சுமி பெருமாளை அடைய இங்கு தவமிருந்ததால், பிரம்மச்சாரியாக இருந்த பெருமாள் லட்சுமியை மகிழ மாலையாக தன் கழுத்தில் அணிந்துகொண்டதாக புராணம். பாண்டி நாட்டு நவதிருப்பதிகளுள் இத்தலம் குருவுக்குரிய தலமாகவும், ஒன்பதாவது தலமாகவும் அமைந்துள்ளது. வைணவர்கள் திருவரங்கத்தை பரமபதத்தின் வாசல் எனவும், ஆழ்வார் திருநகரியை பரமபதத்தின் எல்லை எனவும் கூறுவார்கள்.

இதுவோ திருநகரி ஈதோ பொருநை 
இதுவோ பரமபதத்(து) எல்லை - இதுவோதான் 
வேதம் பகர்ந்திட்ட மெய்ப்பொருளின் உட்பொருளை 
ஓதும் சடகோபன் ஊர்
                 என்று உடையவர் மங்களாசாசனம் செய்துள்ளார்.


மூலவரின் சன்னதிக்கு எதிர்புறமுள்ள கருட மண்டபத்தை மணவாள மாமுனிகள் நிறுவினார். பெருமாளின் விமானத்தை விட நம்மாழ்வாரின் விமானம் சற்று பெரியது. மரத்தால் செய்யப்பட்டதைப்போலவே கல்லால் ஆன நாதஸ்வரம் ஒரு அடிநீளத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.




ஆதி நாதர் ஆலயம் கற்கட்டிடக் கலைக்கு ஒரு சிறந்த  எடுத்துக்காட்டு. ஆலயமும், திருமாமணி மண்டபமும், திருமஞ்சன மண்டபங்களும், கண்ணாடி மண்டபமும், வேலைத்திறன் பெற்றவை. மொட்டைக் கோபுரமும் அதன் உருவங்களும் புகழ்தக்க வேலைப்பாடுகள் நிறைந்தவை. மரசிற்ப வேலையை பொறுத்த மட்டில் ஆதிநாதர் ஆலயத்தின் முன்புறமுள்ள மூன்று மாடங்களுடைய கோபுரத்தின் மூன்று அடுக்குகளிலும் மரத்தூண், யாழி, சாளரம், சிங்கப்பொதிகை, உத்திரம், மேற்கட்டி விதானமெல்லாம்  மிகுந்த பெருமையும் உயர்வும் கொண்ட வேலைத்திறம் பெற்றவை. இது தவிர நம்மாழ்வார் சன்னதி சோபன மண்டபத்தில் வாயிற்படியில் யாழிப்படிகளும், அர்த்த மண்டபத்தின் யாணை படிகளும்  தூண்களில் உள்ள இராமர், இலக்குவன், அனுமன் சிற்பங்களும், நடன மங்கை சிற்பங்களும்  கொடுங்கையில் செதுக்கப் பட்டுள்ள குரங்குகளின் சிற்பங்களும் அருமை ஒரு குரங்குபாம்பின் வாலைப் பிடித்திழுக்க அதன் முகபாவமும் யாழியின் மேல் தாவும் குரங்கும் பல பறவைகளின் சிற்பங்களும் அருமை.  கர்ப்பகிரத்கதை சுற்றிலும் கேரளக் கோவில்கள் போல கை விளக்கேந்திய பெண்கள் சிற்பம் நிறைந்திருக்கின்றது.  மேற்கூரையில் உள்ள தண்ணீரில் மலர்ந்துள்ள ஒரு மலதாமரையும், ஐந்து தாமரை மொக்குகளும்  அவற்றில் தேன் அருந்தும்  தேனிக்களும் கூடிய சிற்பமும் மிகவும் அருமை.


அருமையான வேலைப்பாடுள்ள  தூண்கள் 

இத்திருக்கோயிலில் பல வண்ணங்களில் தீட்டப்பட்ட ஓவியங்களும் காணப்படுகின்றன. ஸ்ரீநம்மாழ்வார் சன்னதி உண்ணாழி பிரகாரத்தில் உள்ள சுவரில் 108 திவ்ய தேசத்து பெருமாள்களின் ஓவியங்களும் தீட்டப்படுள்ளன. பிரகார உட்பிரகாரத்தில்  சங்கமுனி முக்தி பெற்ற வரலாறு, பிரம்மா ஆதிநாதரை வழிபடும் காட்சி, பிரம்மோற்சவ காட்சிகளும், நம்மாழ்வார் பிறப்பும்,  கண்ணன் கழலினை பாசுரம் சங்கப்பலகை ஏறிய காட்சிகளும் தீட்டப்பட்டுள்ளன.


சிற்பம், ஓவியம் மட்டுமல்லாது இசையை எழுப்பும் ஒப்புவமை இல்லாத குழல் தூண்களும், கல் நாதஸ்வரமும், இசைத்தூண்களும் இவ்வாலயத்தில் உள்ளன. கண்ணாடிமண்டபத்தில் இரண்டு இசைத்தூண்கள் உள்ளன. இந்தத் தூண்களை மூங்கில் குச்சி கொண்டு அல்லது  சிறு கல் கொண்டு தட்டினால் இன்னொலிகள் எழுகின்றன.  சில தூண்களில் இரு துவாரங்கள் போடப்பட்டுள்ளன. இரு பக்கங்களிலும் இருவர் நின்று கொண்டு மாறி மாறி ஊதினால் ஒரு பக்கம் சங்கொலியும், மறு பக்கம் எக்காள ஒலியும் எழுகின்றது.  


போற்றி மற்றோர் தெய்வம்பேணப் புறத்திட்டு உம்மையின்னே
தேற்றிவைத்தது எல்லீரும் வீடுபெற்றால் உலகில்லை என்றே
சேற்றில் செந்நெல்  கமலமோங்கு  திருக்கூரதனுள்
ஆற்ற வல்லான் மாயம் கண்டீர் அது  அறிந்தறிந்தோடுமினே

 என்று நம்மாழ்வார் பாடிய ஆதிபிரான் பொலிந்து நின்ற பிரானின் கருட சேவையை சேவித்தோம் வரும் பதிவில் ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரானின் கருடசேவையைக் காணலாம்.