Sunday, November 8, 2009

பெருமாளுடன் கருடாழ்வார் – பத்ரிநாத்

வேத ஸ்வரூபன் கருடன்

கருடன் வேத ஸ்வரூபன் என்று பார்த்தோமல்லவா? அது ஏன் என்று தற்போது முக்கூர் சுவாமியின் மட்டப்பல்லியில் மலர்ந்த மறை பொருள் என்ற புத்தகத்தில் படிக்க நேர்ந்தது அதை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஸூபர்ணோஸி கருத்மாந் த்ரிவ் ருத்தே சிரோ
காயத்ரம் சஷீஸ்ஸ்தோம ஆத்மா ஸாம தே
தநுர் ப்ரஹத்ரதந்தரே யஜ்ஞாயஜ்ஞியம்
புச்சம் - என்பது யஜுர் வேத வ்யாக்யானம்.

ஸ்ரீ வைநதேயனின் திருமேனியில் ஒவ்வொரு அவயமும் வேதத்தின் பகுதியாகவே உள்ளது. “ஸ்தோமம்” என்கிற சாமவேத பாகமே அவருக்கு ஆத்ம சொரூபம், “காயத்ரம்” என்கிற சாமம் அவருக்கு கண்ணாய் விளங்குகின்றது. “த்ரிவ்ருத்” என்கிற சாமம் அவருக்கு தலையாக இருக்கின்றது. யஜுர் வேதங்கள் அவருடைய பெயர்களாகின்றன. சந்தஸ்ஸுகள் அவருடைய திருக்கரங்கள். “த்ஷ்ண்யம்என்று சொல்லப்படும் வேள்வி மேடைகள் அவருடைய திருக்கால் பாதங்களாகின்றன. “வாமதேவ்யம்” என்கிற சாமம் அவருடைய திருமேனியாகவும், “ப்ருஹத்”, “ரதந்த்ரம்” என்னும் ஸாமங்கள் அவருக்குச் சிறகுகளாகின்றன. “யஜ்ஞாயஜ்ஞியம்” என்ற சாமம் அவருக்கு வாலாகின்றது. இப்படி வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனியி்ன் பகுதிகளாய் விளங்குவதால் கருடனை வேதஸ்வரூபன் என்கிறார்கள் மஹான்கள்.

 இப்படி வேத ஸ்வரூபனான கருடனில் பச்சைப்புயலென பெருமாள் வரும் போது அதைப் பார்த்து அதன் தாத்பர்யத்தை உணர்ந்து பூரண சரணாகதி அடைந்தால் மோக்ஷம் நிச்சயம். எனவே கருட சேவையைப் பார்த்தால் மறுபிறவி கிடையாது என்று கூறினார்கள் நம் முன்னோர்கள்.

மோட்சம் தரும் கருட சேவை - ஆதி கேசவர் பல்லக்கு சிற்பம்

சென்ற பதிவில் பெருமாள் நித்ய கருட சேவை சாதிக்கும் திருவல்லிக்கேணி ஷேத்திரம் பற்றிப்பார்த்தோம். இப்பதிவில் பெருமாளுடன் தோளோடு தோள் இனைந்து கருடன் சேவை சாதிக்கும் சில ஷேத்திரங்களைப் பற்றிப் பார்ப்போமா அன்பர்களே.
ஆதி சங்கரர் அமைத்த சிம்மத் துவாரம்

நாம் முதலில் பார்க்கப்போகின்ற ஸ்தலம் நமது பாரத தேசமெங்கும் உள்ள அனைத்து தலங்களிலும், நான்கு திசைகளிலும் உள்ள பரம பவித்ரமான ஸ்தலங்கள் “சார் தாம்” என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், தெற்கில் இராமேஸ்வரம், கிழக்கில் துவாரகை ஆகிய நான்கு தலங்களே இவை. இவற்றுள் பார்வதி தேவியை மகளாகப் பெற்ற பனி படர்ந்த இமயமலையில் அமைந்துள்ள பத்ரிநாத்தில் தான் பெருமாள் கருடனுன் நமக்கு சேவை சாதிக்கின்றார். இந்த பத்ரிநாதத்தின் சில பெருமைகளைப் பற்றிக் காண்போமா?

மஹாலக்ஷ்மித் தாயாருக்கு மிகவும் உகந்த தலம். பத்ரி எனப்படும் இலந்தை மரத்தினடியில் மஹாலக்ஷ்மித் தாயார் தவம் செய்ய அதற்கு பிரசன்னமாகி பெருமாள் அதே இலந்தை மரத்தடியில் சேவை சாதித்து நமக்கு முக்தி வழங்கும் முக்தி தாம். அஷ்டாத்திர மந்திரத்தை உபதேசம் செய்த தலம். பெருமாள் நர நாராயணகர்களாக அவதாரம் செய்து தவம் செய்து நாம் எல்லோரும் உய்ய நலம் தரும் தானே குருவாகவும், சீடனாகவும் ஒம் நமோ நாராயணா என்னும் திருமந்திரத்தை அருளிய தலம். அலக்நந்தா நதிக்கரையில் அமைந்துள்ள தலம். சங்கராச்சாரியருக்கு பெருமாள் நரசிங்கமூர்த்தியாக சேவை சாதித்த தலம்.

தந்தத்தை உடைத்து முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமான் மஹா பாரதம் எழுதிய தலம். இந்த பூவுலகில் பெருமாள் பிரத்யக்ஷமாக ஆச்சாரியனாக சேவை சாதிக்கும் தலம்.

புத்தர் காலத்தில் குளத்தில் வீசிய இந்த சாலக்கிராம மூர்த்தியை ஆதி சங்கரர் கண்டெடுத்து இக்கோவிலில் புனர் பிரதிஷ்டை செய்தார். பனிக் காலத்தில் ஆறு மாதங்கள் திருக்கோவில் மூடியிருக்கும், அப்போது உற்சவ மூர்த்தி ஜோஷிமட் நரசிம்மர் ஆலயத்தில் இருப்பார். அப்போது பத்ரி நாதரை நாரதர் பூஜை செய்வதாக ஐதீகம். திருக்கோவில் மூடும் போது ஏற்றப்பட்ட விளக்கு ஆறு மாதம் கழித்து மீண்டும் திறக்கும் போது அப்படியே அனையாமல் இருக்கும் அற்புதம் நடக்கும் தலம்.
இரண்டு அடி உயரத்தைக் கொண்ட – சாலக்கிராம மூர்த்தமான பத்ரி நாராயணர், ஜடா முடியோடு சதுர்புஜனாய், சங்கு சக்கரம் ஏந்தி மடியில் மற்ற இரு கரங்களை யோக முத்திரையுடன் வைத்து பத்மாசன கோலத்தில்- தியான ரூபத்தில் பிரதான சந்நிதியில் சேவை சாதிக்கின்றார். நாரத முனிவர் மண்டியிட்டு அமர்ந்துள்ள நிலையில் சேவை சாதிக்கின்றார். இடப் புறத்தில் , குபேரன், விநாயகரின் மூர்த்திகளைப் சேவிக்கலாம். அவரது வலப்புறத்தில் உத்தவர், நர, நாராயண முனிவர்களின் மூர்த்திகள், நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.

மகாவிஷ்ணுவின் வாகனமும் கொடியுமான கருடபகவன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். பெருமாளை வணங்கும் கோலத்தில் பெருமாளுடன் கர்ப்பகிரகத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பது ஒரு தனிச்சிறப்பாகும். வெள்ளிக் கவசம் சார்த்தியுள்ளனர். காலையில் பெருமாளுக்கு திருமஞ்சனம் ஆகும்போகு இவர்க்கும் திருமஞ்சனமாகி தங்க கிரீடத்துடன் அலங்காரம் சிறப்பாக நடைபெறுகின்றது.


தாயாரின் பெயர் அரவிந்தவல்லி தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றாள். ஆதி சங்கரருக்கும் தனி சன்னதி உள்ளது. தீர்த்தம் வெந்நீர் குண்டமான தப்தகுண்டம் அதன் கரையிலும் கருடாழ்வார் சேவை சாதிக்கின்றார். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3113 அடி உயரத்தில் அமைந்துள்ளது இத்தலம். நர நாராயண மலை சிகரங்களுக்கிடையில் அமைந்துள்ளது , பிண்ணனியில் நீலகண்ட சிகரத்தை தரிசனம் செய்யலாம்.

பத்ரிநாதர் ஆலயத்தின் அருகில் ஐந்து புனித பாறைகள் உள்ளன. அவையாவன நாரத ஷிலா, கருட ஷிலா, மார்க்கண்டேய ஷிலா, வராஹ ஷிலா, நரசிங்க ஷிலா ஆகும். இவற்றுள் கருடன் கந்தமாதன பர்வதத்தில் இந்த பாறையில் அமர்ந்து கடும் தவம் செய்தார். பெருமாளும் பிரசன்னராகி கங்கையை வரவழைக்க கருடனும் பெருமாளுக்கு பாத பூஜை செய்தார். பின்னர் கருடன் வேண்ட அவருக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருக்க வரமளித்தார். மேலும் தான் தவம் செய்த பாறையை தரிசிப்பவகளின் பாவம் எல்லாம் மறைய  வேண்டும் என்று வேண்ட பெருமாளும் அவ்வாறே வரம் அளித்தார்.



 இவ்வதரி திவ்ய தேசத்தை திருமங்கையாழ்வார் 22 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார் அவற்றுள் இரண்டு பாசுரங்களை சேவிப்போம்.

நர நாராயணர் மலைச்சிகரங்கள்

எய்த்தசொல்லோடு ஈளையேங்கி இருமியிளைத்து உடலம்
பித்தர்போலச் சித்தம்வேறாயப் பேசி அயராமுன் 
அத்தன் எந்தை ஆதிமூர்த்தி ஆழ்கடலைக் கடைந்த 
மைத்தசோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே. என்றும்

ஏனமுனாகி இருநிலமிடந்து அன்று இனையடி இமையவர் வணங்க தானவனாகம் தரணியில் புரளத் தடஞ்சிலை குனித்தவென் தலைவன் தேனமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வநல்நறுமலர் கொணர்ந்து வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல் வதரியாசிரமத்துள்ளானே.

அவர் அருள் இருந்தால் வதரி சென்று பத்ரி நாராயணரை சேவிக்குமாறு வேண்டுகிறேன். அடுத்த பதிவில் பெருமாளுடன் கருடாழ்வார் சேவை சாதிக்கும் இன்னும் சில தலங்களுடன் சந்திப்போமா?