Thursday, December 3, 2009

மாப்பிள்ளைத் தோழன் கருடன்

ஸ்ரீ வில்லிபுத்தூர்

அன்ன வாகனமேறி எழிலாக உலா வரும்
 கோதை நாச்சியார்

கருடன் வேத ஸ்வரூபர் மட்டுமல்ல நாத ஸ்வரூபரும் கூடத்தான். ஷடகம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் ஸப்த ஸ்வர வடிவானவர் கருடன். பெரிய திருவடியான இவர் இராமாவதாரத்தில் இந்திரஜித் விடுத்த நாக பாசத்தினால் கட்டுண்டு கிடந்த இளைய பெருமாளையும் மற்ற வானர சேனைகளையும் விடுவித்து பெருமாளுக்கு கைங்கர்யம் புரிந்தார். அது போலவே அவர் கிருஷ்ணாவதாரத்தில் பிராட்டியான ஸ்ரீருக்மணியிடமிருந்து அவர் அழகாக எழுதிக் கொடுத்த மடலை எடுத்துக்கொண்டு சென்று ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்து கைங்கர்யம் செய்தார், இவ்வாறே பல்வேறு திவ்ய தேசங்களிலும் கருடன் செய்த கைங்கரியங்களினால் அவர் பெருமாளுடன் சமமாக நின்று சேவை சாதிக்கும் பேறு பெற்றார். அத்தகைய திவ்ய தேசங்களுள் முதலாவதானது ஸ்ரீவில்லிபுத்தூர்.

கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடந் தோன்றுமூர்
நீதியால் நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகளோதுமூர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்  என்று இத்தனை பெருமைகளைக் கொண்ட தலம் இத்தலம்.
ஏக சிம்மாசன சேவை

சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாள், திருஅவதாரம் செய்து, ஆயனுக்காக கனா கண்டு, அரங்கனைக் கைப்பிடித்த மென்னடையன்னம் பரந்து விளையாடும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் , கருடன் மற்றும் ரங்க மன்னார் மூவரும் ஒரே சிம்மாசனத்தில் நின்ற கோலத்தில் சேவை சாதித்து அருளுகின்றனர்.
ஆண்டாள் நாச்சியாரின் திருஅவதாரம் வராக அவதார காலத்திலேயே முடிவு செய்யப்பட்டது என்பர் பெரியோர்கள். ஹிரண்யாக்ஷன் பூமிப் பிராட்டியரை எடுத்துக் கொண்டு போய் பாதாளத்தில் ஒளித்து வைத்து விட பெருமாள் வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனை அழித்து பூமிதேவி நாச்சியாரை தனது கோரைப் பற்களின் மேலாக மூக்கில் வைத்துக் கொண்டு வரும் போது தாயார்  மூன்று பிரதிக்ஞை செய்தார் அவையாவன

1.பெருமாளின் திருவடிகளில் இட்டு அர்ச்சனை செய்வது.
2.அவர் நாமத்தை உரக்கச் சொல்லுவது.
3. அவர் திருவடிகளிலே ஆத்ம சமர்ப்பணம் செய்வது.

கோதை நாச்சியாராக இப்பூவுலகில் பிறந்த போது இந்த பிரதிக்ஞைகளை நிறைவேற்றினார் பூமி பிராட்டியார்.

கீதா சாரத்தை பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் சொல்லி உலகத்தில் உள்ளவர்களை திருத்தவும், மேற் சொன்ன பிரதிக்ஞைகளை நிறைவேற்றவும், மின்னனைய நுண்ணிடையார் விரிகுழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் ஸ்ரீ வில்லிபுத்தூரில் கருடனின் அம்சமான, பெருமாளுக்கே வாத்ச்ல்ய பாவத்துடன் திருப்பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரின் புஷ்ப நந்தவனத்தில் ஒரு துளசிச்செடியின் அருகில் ஆடிப் பூரத்தன்று குழந்தையாய் தோன்றினாள் தாயார். உளம் மகிழ்ந்த பெரியாழ்வார் அக்குழந்தையை உச்சி மோந்து எடுத்து கோதை என்று பெயரிடப்பட்டு வளர்‘ந்து வரும் காலத்தில் அவளுக்கு கிருஷ்ண பக்தி என்னும் அமுதினை அளித்தார். நாச்சியாரும் கருவுடை முகில் வண்ணன் காயா வண்ணன், கருவிளை போல் வண்ணன், கமல வண்ணன் ஒருவனையே தன் நாயகனாக வரித்து மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே, என்று

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி! நான்
என்று வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சீராக வளர்ந்து வந்தாள்.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்

ஒரு நாள் பெரியாழ்வார் பெரிய பெருமாளுக்காக தொடுத்து வைத்திருந்த மலர் மாலையை கோதை அணிந்து அழகு பார்ப்பதைக் கண்டு பதைத்து. வேறு ஒரு மாலை கட்டி பெருமாளுக்கு சம்ர்பித்தார். அன்று இரவு பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய பெருமாள். ஆண்டாள் அணிந்த மாலையே தனக்கு மிகவும் உகந்தது என்று உணர்த்தினார். அன்று முதல் நாச்சியாரும் "சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்" என்னும் திருநாமம் பெற்றார்.

ரங்க மன்னார் திருக்கோலம்
(சென்னை மேட்டுப்பாளையம், மேற்கு மாம்பலம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்)

இவ்வாறு தன்னை ஒரு கோபிகையாக பாவித்து, பெரிய பெருமாளை கிருஷ்ணராகவும், கோவிலையே நந்தகோபன் மாளிகையாகவும், ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்ப்பாடியாகவும் பாவித்து பாவை நோன்பு நோற்பதற்காக திருப்பாவை 30 பாடல்கள் பாடினார். இதில் முதல் பத்தில் பெருமாளின் நாமங்களை போற்றுகின்றாள், இரண்டாம் பத்தில் அவரது உயர்வான திருவடிகளில் அர்ச்சனை செய்கின்றாள், மூன்றாம் பத்தில் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாமாட் செய்வோம் என்று ஆத்ம சமர்ப்பணம் செய்து பிரதிக்ஞ்னைகளை நிறைவேற்றுகின்றாள். இவ்வாறு பூமாலையும், பாமாலையும் சூடிக் கொடுத்தாள் நாச்சியார்.
ஸ்ரீ வில்லிபுத்தூர் வடபத்ரசாயி

திருமண வயதடைந்த ஆண்டாள், ‘அரங்கனைத் தவிர வேறு எவருக்கும் மாலையிட மாட்டேன்!’ என்றாள். பெரியாழ்வார் குழம்பினார். மீண்டும் அவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘ஆண்டாள் தெய்வப் பிறவி. அவளை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வா!’ என்று அருளி மறைந்தார். அதன்படி ஸ்ரீரங்கம் வந்த கோதை, காவிரிக்கரையை அடைந்ததும், தன் கணவன் இருக்குமிடத்தில் பல்லக்கில் செல்வது அவருக்கு மரியாதை தருவதாக இருக்காது என எண்ணினாள் ஆண்டாள். எனவே, தன்னை ஆட்கொள்ளும்படி ரெங்கமன்னாரிடம் வேண்டினாள். ரெங்கமன்னாரும் அவளை தன்னுடன் வரவழைத்துக் கொண்டார். இதனிடையே, தன் மகளைக்காண பல்லக்கிற்குள் பார்த்தார் பெரியாழ்வார். ஆனால் ஆண்டாள் அங்கில்லாததைக் கண்டு திகைப்படைந்தார். கோதை தனக்குத் திருவடிச் சேவை செய்வதை பெரியாழ்வாருக்குக் காட்டினார் பெருமாள்.

ஆனால், ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்துதான் கோதையை மணம் முடிக்க வேண்டுமென்று பெரியாழ்வார் பெருமாளை வேண்டினார். அதன்படி ஸ்ரீவில்லிப்புத்தூரில் எழுந்தருளி ஒரு பங்குனி உத்திர நன்னாளில் கோதையை திருமணம் செய்து கொண்டார் பெருமாள் என்கிறது தல புராணம். இப்படி கோதை ஆண்டவனை ஆட்கொண்டதால் ஆண்டாள் எனச் சிறப்பிக்கப்பட்டாள். இதன் அடிப்படையில் பங்குனி உத்திரத்தன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணமும், தேர்த்திருவிழாவும் நடக்கின்றது.

இனி ஏன் கருடனுக்கு சம ஆசனம் என்று யோசிக்கின்றீர்களா? அதற்கும் ஆண்டாள் அரங்கர் கல்யாணத்திற்கும் சம்பந்தம் இருக்கின்றது. குறித்த நேரத்திற்கு அரங்கர் திருமணத்திற்கு வர முடியாமற் போய் விட்டது, பெரியாழ்வார் உட்பட திருக்கல்யாணத்திற்காக கூடியிருந்த அனைவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்க, அனைவரின் நிலையை உணர்ந்த கருடன் விரைந்து சென்று காலம் தாழ்த்தாமல் பெருமாளை பிராட்டியாரிடம் சேர்த்தான். இதற்கு கைமாறாக ஆண்டாள் ரங்கமன்னாரிடன் பரிந்துரைக்க பெருமாளும் தங்களுடன் கருடனும் சரி சமமாக நின்று சேவை சாதிக்கும் பேற்றை அளித்தார். கருடாழ்வார் திருவரங்கத்திலிருந்து பெருமாளை அழைத்து வந்ததால் மாப்பிள்ளைத் தோழனாகவும் விளங்குகின்றார் என்பது ஐதீகம். மேலும் எப்போதும் கருடன் பெருமாளையும் பிராட்டியாரையும் வணங்க விருப்பப்பட்டதாலும் எப்போதும் அருகில் இருப்பதாகவும் ஐதீகம்.

திருமயிலை ஆதி கேசவர் ரங்கமன்னார் -ஆண்டாள் திருக்கோலம்
(முன்னழகும் பின்னழகும்)


அர்த்த மண்டபத்தில் தங்க முலாம் மஞ்சத்தில், வலப்புறம் கோதை நாச்சியாரும், நடுவில் ரங்க மன்னாரும், இடப்புறம் கருடன் என மூவரும் ஒன்றாக சேவை சாதிக்கின்றனர். ரங்கமன்னார் நின்ற கோலத்தில் வலக்கையில் பெந்து கோல் (தற்காப்புக் கோல்), இடக்கையில் செங்கோல், இடையில் உடைவாள், கால்களில் திருப்பாதுகைகள் என்று இராஜாங்க கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஆண்டாள் இடக்கரத்தில் கிளியை தாங்கி, வலக்கரம் திருவடிகளை சுட்டிக் காட்ட வைர மூக்குத்தி மின்ன எழிலாக சேவை சாதிக்கின்றாள். கருடன் அஞ்சலி ஹஸ்தத்துடன் திவ்ய தம்பதிகளை வணங்கும் நிலையிலும் நின்று சேவை சாதிக்கும் அழகே அழகு. ஓம் என்னும் பிரணவத்தின் வடிவாக சேவை சாதிக்கின்றனர் மூவரும்.
ஓம் என்னும் பிரணவ கோலம்

அ + உ + ம் = ஓம் அல்லவா? இதில் அ = பெருமாள் என்னும் பரமாத்மா, ம = ஆண்டாள் நாச்சியார் , ஜீவாத்மா, சரணாகதியின் மூலம் இருவரையும் பாலமாக இனைக்கும் கருடபகவான் = உ. இதன் மூலமும் நாம் கற்பது சரணாகதி தான். எல்லாவற்றையும் பெருமாளின் காலடியில் விடுத்து சரணமடைய அவர் மோட்சம் அளிப்பார் என்பது சத்தியம்.

கணவன் எப்படிப்பட்ட உயரிய பதவியில் இருந்தாலும் மனைவி விரும்பியதை நிறைவேற்றித்தான் ஆக வேண்டும் என்பதற்கு உதாரணமாக பெருமாள் திகழ்கின்றார்.

 கண்ணனையே தன் நாயகனாக அடைய வேண்டும் என்று வேயர் குல விளக்கு விரும்பியதால் ரங்க மன்னாரே கிருஷ்ணர், ஆண்டாள் ருக்மணி, கருடன் சத்யபாமா என்று அருளுகின்றனர்.

கருடாழ்வார் இத்தலத்தில் ரங்கமன்னாருக்கு மாமனார் (பெரியாழ்வார் அம்சம்), மாப்பிள்ளை தோழன், சத்தியபாமா (பெருமாள் கிருஷ்ணன் என்பதால்) என மூன்று பதவிகளுடன் இருக்கிறார்.

என்னங்க இந்த திவ்ய தேசத்தில் கருட சேவை சிறப்பாக இல்லையா அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று சந்தேகம் எழுகின்றதா? இத்தலத்தில் ஐந்து கருட சேவை சிறப்பாக நடைபெறுகின்றது வருடத்தில் இரு முறை கோதை நாச்சியாரின் திருஅவதார தினமான ஆடிப்பூர உற்சவத்தின் ஐந்தாம் நாளன்றும், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின் ஐந்தாம் நாளன்றும் ஐந்து கருட சேவை சிறப்பாக நடைபெறுகின்றது. இன்னும் ஐந்து கருட சேவை நேரில் சேவிக்கும் பாக்கியம் சித்திக்கவில்லை எனவே விஸ்தாரமாக எழுத முடியவில்லை.
ரங்க மன்னார் கருட சேவை

ஐந்து கருட சேவையில் பெரிய பெருமாள் வடபத்ர சாயி, ரங்க மன்னார், காட்டழகர் கோவில் சுந்தரராஜ பெருமாள், திருவில்லிபுத்தூருக்கு அருகில் உள்ள திருவண்ணாமலை திருவேங்கடமுடையான், மற்றும் அருகில் உள்ள திவ்ய தேசமான திருத்தண்கால் அப்பன்

ஐந்து கருட சேவைக்கு எழுந்தருளும்
திருத்தண்கால் அப்பன்.

ஆகிய பெருமாள்கள் காலையில் எழுந்தருளி பெரியாழ்வாரின் மங்களாசாசனம் கேட்டருளுகின்றனர். பின்னர் மாலையில் பெரியாழ்வாரும் ஆண்டாளும் அன்ன வாகனத்தில் எழுந்தருள பெருமாள்கள் ஐவரும் கருட சேவை சாதிக்கின்றனர்.

இப்பதிவில் கருடன் கோதை நாச்சியார் திருமணத்திற்காக பெருமாளை விரைந்து கொண்டு வந்து சேர்த்த கைங்கரியத்திற்காக பெருமாளுடனும் பிராட்டியாருடனும் சேவை சாதிக்கும் அழகைக் கண்டோம் இனி அடுத்த ஒரு திவ்ய தேசத்தில் பெருமாளுடன் கருடன் சேவை சாதிக்கும் அழகைக் காண்போமா அன்பர்களே.

Sunday, November 8, 2009

பெருமாளுடன் கருடாழ்வார் – பத்ரிநாத்

வேத ஸ்வரூபன் கருடன்

கருடன் வேத ஸ்வரூபன் என்று பார்த்தோமல்லவா? அது ஏன் என்று தற்போது முக்கூர் சுவாமியின் மட்டப்பல்லியில் மலர்ந்த மறை பொருள் என்ற புத்தகத்தில் படிக்க நேர்ந்தது அதை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஸூபர்ணோஸி கருத்மாந் த்ரிவ் ருத்தே சிரோ
காயத்ரம் சஷீஸ்ஸ்தோம ஆத்மா ஸாம தே
தநுர் ப்ரஹத்ரதந்தரே யஜ்ஞாயஜ்ஞியம்
புச்சம் - என்பது யஜுர் வேத வ்யாக்யானம்.

ஸ்ரீ வைநதேயனின் திருமேனியில் ஒவ்வொரு அவயமும் வேதத்தின் பகுதியாகவே உள்ளது. “ஸ்தோமம்” என்கிற சாமவேத பாகமே அவருக்கு ஆத்ம சொரூபம், “காயத்ரம்” என்கிற சாமம் அவருக்கு கண்ணாய் விளங்குகின்றது. “த்ரிவ்ருத்” என்கிற சாமம் அவருக்கு தலையாக இருக்கின்றது. யஜுர் வேதங்கள் அவருடைய பெயர்களாகின்றன. சந்தஸ்ஸுகள் அவருடைய திருக்கரங்கள். “த்ஷ்ண்யம்என்று சொல்லப்படும் வேள்வி மேடைகள் அவருடைய திருக்கால் பாதங்களாகின்றன. “வாமதேவ்யம்” என்கிற சாமம் அவருடைய திருமேனியாகவும், “ப்ருஹத்”, “ரதந்த்ரம்” என்னும் ஸாமங்கள் அவருக்குச் சிறகுகளாகின்றன. “யஜ்ஞாயஜ்ஞியம்” என்ற சாமம் அவருக்கு வாலாகின்றது. இப்படி வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனியி்ன் பகுதிகளாய் விளங்குவதால் கருடனை வேதஸ்வரூபன் என்கிறார்கள் மஹான்கள்.

 இப்படி வேத ஸ்வரூபனான கருடனில் பச்சைப்புயலென பெருமாள் வரும் போது அதைப் பார்த்து அதன் தாத்பர்யத்தை உணர்ந்து பூரண சரணாகதி அடைந்தால் மோக்ஷம் நிச்சயம். எனவே கருட சேவையைப் பார்த்தால் மறுபிறவி கிடையாது என்று கூறினார்கள் நம் முன்னோர்கள்.

மோட்சம் தரும் கருட சேவை - ஆதி கேசவர் பல்லக்கு சிற்பம்

சென்ற பதிவில் பெருமாள் நித்ய கருட சேவை சாதிக்கும் திருவல்லிக்கேணி ஷேத்திரம் பற்றிப்பார்த்தோம். இப்பதிவில் பெருமாளுடன் தோளோடு தோள் இனைந்து கருடன் சேவை சாதிக்கும் சில ஷேத்திரங்களைப் பற்றிப் பார்ப்போமா அன்பர்களே.
ஆதி சங்கரர் அமைத்த சிம்மத் துவாரம்

நாம் முதலில் பார்க்கப்போகின்ற ஸ்தலம் நமது பாரத தேசமெங்கும் உள்ள அனைத்து தலங்களிலும், நான்கு திசைகளிலும் உள்ள பரம பவித்ரமான ஸ்தலங்கள் “சார் தாம்” என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், தெற்கில் இராமேஸ்வரம், கிழக்கில் துவாரகை ஆகிய நான்கு தலங்களே இவை. இவற்றுள் பார்வதி தேவியை மகளாகப் பெற்ற பனி படர்ந்த இமயமலையில் அமைந்துள்ள பத்ரிநாத்தில் தான் பெருமாள் கருடனுன் நமக்கு சேவை சாதிக்கின்றார். இந்த பத்ரிநாதத்தின் சில பெருமைகளைப் பற்றிக் காண்போமா?

மஹாலக்ஷ்மித் தாயாருக்கு மிகவும் உகந்த தலம். பத்ரி எனப்படும் இலந்தை மரத்தினடியில் மஹாலக்ஷ்மித் தாயார் தவம் செய்ய அதற்கு பிரசன்னமாகி பெருமாள் அதே இலந்தை மரத்தடியில் சேவை சாதித்து நமக்கு முக்தி வழங்கும் முக்தி தாம். அஷ்டாத்திர மந்திரத்தை உபதேசம் செய்த தலம். பெருமாள் நர நாராயணகர்களாக அவதாரம் செய்து தவம் செய்து நாம் எல்லோரும் உய்ய நலம் தரும் தானே குருவாகவும், சீடனாகவும் ஒம் நமோ நாராயணா என்னும் திருமந்திரத்தை அருளிய தலம். அலக்நந்தா நதிக்கரையில் அமைந்துள்ள தலம். சங்கராச்சாரியருக்கு பெருமாள் நரசிங்கமூர்த்தியாக சேவை சாதித்த தலம்.

தந்தத்தை உடைத்து முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமான் மஹா பாரதம் எழுதிய தலம். இந்த பூவுலகில் பெருமாள் பிரத்யக்ஷமாக ஆச்சாரியனாக சேவை சாதிக்கும் தலம்.

புத்தர் காலத்தில் குளத்தில் வீசிய இந்த சாலக்கிராம மூர்த்தியை ஆதி சங்கரர் கண்டெடுத்து இக்கோவிலில் புனர் பிரதிஷ்டை செய்தார். பனிக் காலத்தில் ஆறு மாதங்கள் திருக்கோவில் மூடியிருக்கும், அப்போது உற்சவ மூர்த்தி ஜோஷிமட் நரசிம்மர் ஆலயத்தில் இருப்பார். அப்போது பத்ரி நாதரை நாரதர் பூஜை செய்வதாக ஐதீகம். திருக்கோவில் மூடும் போது ஏற்றப்பட்ட விளக்கு ஆறு மாதம் கழித்து மீண்டும் திறக்கும் போது அப்படியே அனையாமல் இருக்கும் அற்புதம் நடக்கும் தலம்.
இரண்டு அடி உயரத்தைக் கொண்ட – சாலக்கிராம மூர்த்தமான பத்ரி நாராயணர், ஜடா முடியோடு சதுர்புஜனாய், சங்கு சக்கரம் ஏந்தி மடியில் மற்ற இரு கரங்களை யோக முத்திரையுடன் வைத்து பத்மாசன கோலத்தில்- தியான ரூபத்தில் பிரதான சந்நிதியில் சேவை சாதிக்கின்றார். நாரத முனிவர் மண்டியிட்டு அமர்ந்துள்ள நிலையில் சேவை சாதிக்கின்றார். இடப் புறத்தில் , குபேரன், விநாயகரின் மூர்த்திகளைப் சேவிக்கலாம். அவரது வலப்புறத்தில் உத்தவர், நர, நாராயண முனிவர்களின் மூர்த்திகள், நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.

மகாவிஷ்ணுவின் வாகனமும் கொடியுமான கருடபகவன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். பெருமாளை வணங்கும் கோலத்தில் பெருமாளுடன் கர்ப்பகிரகத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பது ஒரு தனிச்சிறப்பாகும். வெள்ளிக் கவசம் சார்த்தியுள்ளனர். காலையில் பெருமாளுக்கு திருமஞ்சனம் ஆகும்போகு இவர்க்கும் திருமஞ்சனமாகி தங்க கிரீடத்துடன் அலங்காரம் சிறப்பாக நடைபெறுகின்றது.


தாயாரின் பெயர் அரவிந்தவல்லி தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றாள். ஆதி சங்கரருக்கும் தனி சன்னதி உள்ளது. தீர்த்தம் வெந்நீர் குண்டமான தப்தகுண்டம் அதன் கரையிலும் கருடாழ்வார் சேவை சாதிக்கின்றார். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3113 அடி உயரத்தில் அமைந்துள்ளது இத்தலம். நர நாராயண மலை சிகரங்களுக்கிடையில் அமைந்துள்ளது , பிண்ணனியில் நீலகண்ட சிகரத்தை தரிசனம் செய்யலாம்.

பத்ரிநாதர் ஆலயத்தின் அருகில் ஐந்து புனித பாறைகள் உள்ளன. அவையாவன நாரத ஷிலா, கருட ஷிலா, மார்க்கண்டேய ஷிலா, வராஹ ஷிலா, நரசிங்க ஷிலா ஆகும். இவற்றுள் கருடன் கந்தமாதன பர்வதத்தில் இந்த பாறையில் அமர்ந்து கடும் தவம் செய்தார். பெருமாளும் பிரசன்னராகி கங்கையை வரவழைக்க கருடனும் பெருமாளுக்கு பாத பூஜை செய்தார். பின்னர் கருடன் வேண்ட அவருக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருக்க வரமளித்தார். மேலும் தான் தவம் செய்த பாறையை தரிசிப்பவகளின் பாவம் எல்லாம் மறைய  வேண்டும் என்று வேண்ட பெருமாளும் அவ்வாறே வரம் அளித்தார்.



 இவ்வதரி திவ்ய தேசத்தை திருமங்கையாழ்வார் 22 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார் அவற்றுள் இரண்டு பாசுரங்களை சேவிப்போம்.

நர நாராயணர் மலைச்சிகரங்கள்

எய்த்தசொல்லோடு ஈளையேங்கி இருமியிளைத்து உடலம்
பித்தர்போலச் சித்தம்வேறாயப் பேசி அயராமுன் 
அத்தன் எந்தை ஆதிமூர்த்தி ஆழ்கடலைக் கடைந்த 
மைத்தசோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே. என்றும்

ஏனமுனாகி இருநிலமிடந்து அன்று இனையடி இமையவர் வணங்க தானவனாகம் தரணியில் புரளத் தடஞ்சிலை குனித்தவென் தலைவன் தேனமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வநல்நறுமலர் கொணர்ந்து வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல் வதரியாசிரமத்துள்ளானே.

அவர் அருள் இருந்தால் வதரி சென்று பத்ரி நாராயணரை சேவிக்குமாறு வேண்டுகிறேன். அடுத்த பதிவில் பெருமாளுடன் கருடாழ்வார் சேவை சாதிக்கும் இன்னும் சில தலங்களுடன் சந்திப்போமா?

Monday, October 26, 2009

நித்ய கருட சேவை


சென்றால் குடையாம் இருந்தால் சிங்காதனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் – என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம்புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு.

என்று ஆதிசேஷனாகிய நாகம் திருமாலுக்கு செய்யும் சேவைகளை பட்டியலிடுகின்றார் பொய்கையாழ்வார். அது போல யாரும் பெரிய திருவடியாம் கருடன் செய்யும் சேவையை பாடவில்லையென்றாலும் நாம் அவை என்னவென்று பார்ப்போமா?

திருவல்லிக்கேணி தெள்ளிய சிங்கர் கருட சேவை

அவுணரை கொல்ல செல்கையில் மேலப்பாம்
வெற்றிக் கொடியாம் குளிர் விசிறியாம் – காய்சின
பறவையாம் பரி பூணாத இரதமாம்
உற்ற துணைவனாம் திருமாற்கு புள்ளரையன்.

என்றபடி பெருமாள் அசுரரை கொல்லச் செல்லும் போது, "மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும் மேலாப்பின் கீழ் வருவானை" என்று ஆண்டாள் நாச்சியார் பாடியபடி அவருக்கு குடையாய் நிழல் தருபவனும், தனது பெரிய சிறகுகளால் பெருமாளூக்கு ஆலவட்ட கைங்கரியம் செய்து அவரை குளிர்விப்பவனும், அவரது திருவடிகளை தாங்கும் வாகனமாயும், அவரது தலைக்கு மேலே வெற்றிக் கொடியாகவும், பல சமயங்களில் பெருமாளுக்கு சிரமம் தராமல் தானே சென்று பகைவர்களை கொத்தி புரட்டி எடுத்து விடுகின்ற காய்சினப் பறவையாகவும், ( பரனூர் மகான் பெருமாள் இதை நகைச்சுவையாக பெருமாள் பல சமயம் கருடனை அனுப்பி விட்டு தான் ஹாயாக அமர்ந்து விடுவார் எல்லாவற்றையும் கருடன் கவனித்துக் கொள்வான் என்று கூறுவார்), பெருமாள் எங்கு செல்ல விழைகின்றாறோ அங்கு அவரை அந்த க்ஷணமே கூட்டிச் செல்கின்ற குதிரை பூட்டாத நாராயண ரதமாகவும், பெருமாள் எங்கு சென்றாலும் அவருக்கு உற்ற துணைவனாயும் விளங்குபவன் சுபர்ணன் என்னும் அழகிய சிறகுகளை உடைய கருடன்.

பார்த்தசாரதிப்பெருமாள் கருட சேவை

அநேகமாக அனைத்து தலங்களிலும் நின்ற கோலத்தில் அஞ்சலி ஹஸ்தத்துடன் ( பெருமாளை வணங்கிய நிலையில்) பெருமாளுக்கு எதிரில் கருடன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பார். மிக சில ஸ்தலங்களில் மட்டும்தான் பெருமாளுடன் கருவறையிலேயே தோளோடு தோள் இணைந்து தோழனாய் கருடன் சேவை சாதிக்கின்றான். அவ்வாறு கருடன் சேவை சாதிக்கும் சில ஸ்தலங்களை அடுத்து வரும் பதிவுகளில் காணலாம்.

"நித்ய கருட சேவை" என்று பெயரிடப்பட்டுள்ளதால் பெருமாள் கருட வாகனத்தில் மேலிருந்து கஜேந்திர வரதனாக தினமும் சேவை சாதிக்கும் ஒரு திவ்ய தேசத்தைப்பற்றி பார்ப்போம். அந்த திவ்ய தேசம் தான் திருவல்லிக்கேணி. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த பெருமாள் இவர்.

இத்திவ்ய தேசத்தில் நெடியானாய் நின்ற கோலத்தில், சாரதிக்கு உரிய முறுக்கு மீசையுடன் வலக்கையில் சங்கமேந்தி சக்கரம் இல்லாமல் வேங்கட கிருஷ்ணன் என்று மூலவராயும், திருமுக மண்டலத்தில் பீஷ்மரின் அம்பு காயங்களுடன் பார்த்தசாரதி என்று உற்சவராயும், வால்மிகி முனிவர் வணங்கும் இராமனாய், மைதிலி மற்றும் தம்பி இலக்குவனோடும் சக்கரவர்த்தி திருமகனும், பள்ளி கொண்ட ஸ்ரீமந்நாதராய் அரங்கனாகவும், பிரகலாதனுக்கு அருள் புரிந்து யோக நிலையில் அமர்ந்த தெள்ளிய சிங்கராகவும், நித்ய கருட சேவை வழங்கும் கஜேந்திர வரதராகவும் பெருமாள் ஐந்து கோலங்களில் சேவை சாதிக்கின்றார்.

கஜேந்திர வரதர் சன்னதி உள் பிரகாரத்தில் தென் கிழக்கு மூலையில் தனி சன்னதியாக அமைந்துள்ளது. இவருக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் வைகாசி திருவோணத்தை ஒட்டி பத்து நாள் நிகழ்ச்சியாக நடைபெறுகின்றது. வைகானச ஆகமப்படி உற்சவங்கள் நடைபெறுவதால் மூன்றாம் நாள் அதிகாலை கோபுர வாசல் தரிசனத்துடன் கருட சேவை எல்லா பெருமாள்களின் பிரம்மோற்சவத்தின் போதும் நடைபெறுகின்றது. கஜேந்திர வரதர் ஹஸ்த நட்சத்திரத்தன்று் மாலை புறப்பாடு கண்டருளுகிறார். கஜேந்திர மோக்ஷ உற்சவம் ஆடி கருடன் என்று ஆடிப் பௌர்ணமியன்று நடைபெறுகின்றது. பங்குனி உற்சவ திருக்கல்யாண உற்சவத்தின் போது மாலை ஸ்ரீரங்கநாத சுவாமி கண்ணாடி கருட சேவை தந்தருளுகின்றார்

இவ்வாறு நித்ய கருட சேவை தந்தருளும் கஜேந்திர வரதரை திருமங்கையாழ்வார் இவ்வாறு மங்களாசாசனம் செய்துள்ளார்

மீனமர் பொய்கை நான்மலர்கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த
கானமர் வேழம் கையெடுத்தலற கராஅதன்காலினைகதுவ
ஆனையின் துயரம் தீரப்புள்ளூர்ந்து சென்றுநின்று ஆழிதொட்டானை
தேனமர்சோலை மாடமாமயிலைத் திருவல்லிக்கேணி கண்டேனே.

கஜேந்திர மோக்ஷ சிற்பம் ( ஆதி கேசவப்பெருமாள் பல்லக்கு)

பெருமாளின் புஷப கைங்கர்யத்திற்காக வேண்டி, கயல் மீன்கள் துள்ளி விளையாடும் தடாகத்திலிருந்து தினம் தாமரை மலர்களை பறித்து வந்த, காட்டில் உற்சாகமாகச் சுற்றித் திரியும், கஜேந்திரன் என்ற யானையின் காலை, ஒரு சமயம் புலால் உண்ணும் முதலையொன்று கவ்வ, அப்போது அந்த கஜேந்திரன் தன் தும்பிக்கையைஉயர்த்தி, "ஆதிமூலமே" என்று பெருங்குரலெடுத்து அலற, கருடனில் விரைந்து பறந்து வந்த பெருமாள், தன் சக்ராயுதத்தை வீசி முதலையை அழித்து, அந்த யானையை துயரிலிருந்துக் காத்தார். இவ்வாறு அடியவர் துயர் தீர்க்கும் அப்பேர்ப்பட்ட வரதராஜப் பெருமாளை, தேன் மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலைகள் சூழ்ந்த, மாடங்கள் மிகு மாமயிலைக்கு அருகில் உள்ள, திருவல்லிக்கேணியில்நான் கண்டேனே ! என்று மயிலாப்பூரில் உள்ள திருவல்லிக்கேணியென்று பாடுகிறார் திருமங்கை மன்னன்.

குறிப்பு: : “ஆழி தொட்டானை' என்பதற்கு 'யானைக்கு பாதிப்பு இல்லா வண்ணம், முதலை மட்டும் அழியும்படியாக திருச்சக்கரத்தை வீசிய எம்பெருமான்” என்றுபொருள் கொள்க !


கண்ணாடி கருடனில் அரங்கநாதர்


பாசுரச் சிறப்பு: முக்கூரார், தனது உபன்யாசத்தின் போது கஜேந்திரனைக் காக்கபெருமாள் கொண்ட அவசரத்தை சுவைபட இவ்வாறு கூறுவார் ! 'ஆதிமூலமே' என்ற கஜேந்திரனின் அலறலைக் கேட்ட மாத்திரத்தில், வைகுண்டத்தில்பிராட்டியுடன் அளவளாவிக் கொண்டிருந்த பெருமாள் அவசர அவசரமாகக்கிளம்ப யத்தனித்தபோது, அவரது உத்தரீயம் (மேல் துணி) தாயாரின் கையில்சிக்கிக் கொள்ள, பெருமாளின் எண்ணம் புரிந்த கருடன் அவரை விட வேகமாகபறந்து வந்து அவர் முன் நிற்க, சக்ராயுதமானது, பெருமாள் கருடன் மேலேறிபயணத்தைத் தொடங்கி விட்டபடியால், தானாகவே பறந்து வந்து அவரது வலதுதிருக்கரத்தில் சரியாக அமர்ந்து கொள்ள, பகவான் அதிவிரைவில் சென்று, கஜேந்திரனுக்கு அபயம் அளித்ததாக அழகாக பாசுர விளக்கம் கூறுவார் !
திருவல்லிக்கேணி சக்கரவர்த்தி திருமகன் கருடசேவை

தன்னை வேண்டி அழைத்த அடியவரைக் காக்க விரைந்த பெருமாளுக்கு, கருடனின் உதவியோ, சக்கரத்தின் தேவையோ தோன்றவே இல்லை ! அபயம்அளிப்பது ஒன்றே குறி ! அப்பேர்ப்பட்ட கருணாமூர்த்தி எம்பெருமான் ஆவார் ! கீழே விழுந்து அடிபட்டு அழும் குழந்தையை, கையில் ஏந்தி ஆசுவாசப்படுத்திஆறுதல் சொல்ல எப்படி ஒரு தாய் அவசரமாக ஓடி வருவாளோ, அது போலவே, எம்பெருமான் ஓடோடி வந்து, தன் அடியாரின் துயர் தீர்த்து அபயம் அளிப்பார் என்பது திண்ணம். வேண்டியதெல்லாம் பூரண சரணாகதி ஒன்றுதான், நான், எனது என்றிருக்கும் வரையில் அவர் அருள் கிட்டாது. நீயே சரணம் என்று சரணமடைவதே உய்ய வழி .

சோள சிம்ம புரம் என்னும் திருக்கடிகையில் காஞ்சி வரதர் தனது அன்பரான தொட்டாச்சாரியாருக்கு வைகாசி கருட சேவை காட்சியை தக்கான் குளக்கரையை அளித்ததை அனைவரும் அறிவோம், அறியாதவர்கள் இங்கு கிளிக்கவும்.
இவ்வாறு கச்சி வரதன் அளித்த அற்புத கருட சேவையை எப்போதும் அனைவரும் சேவிக்கும் பொருட்டு தக்கான் குளக்கரையில் வரதர் ஆலயம் உள்ளது. அங்கும் நாம் தினமும் மோட்சமளிக்கும் கருடசேவையை தரிசிக்கலாம்.


அடுத்த பதிவில் கருடன் பெருமாளுடன் சேவை சாதிக்கும் சில ஸ்தலங்களுடன் சந்திப்போமா அன்பர்களே.

Monday, September 7, 2009

ஸ்ரீ சத்ய நாராயணப் பெருமாள் கருட சேவை-2


சென்னை மேற்கு மாம்பலம் சத்ய நாராயணப் பெருமாள் திருக்கோவிலில் பௌர்ணமி தினத்தன்று நடை பெறும் சத்ய நாராயண பூஜை சிறப்பாக நடைபெறுகின்றது. அன்னவரத்தில் உள்ள சத்ய நாராயணப் பெருமாளே இங்கு எழுந்தருளி அருள் பாலிப்பதால் இப்பூசை மிகவும் சிறப்பு பெற்றது ஆகும். இப்பூஜையின் மகத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்வோமா?

பௌர்ணமியன்று காலையில் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறுகின்றது. பின் காலை பத்து மணியளவில் சத்ய நாராயண பூஜை நடைபெறுகின்றது. மாலை பெருமாள் புறப்பாடு நடைபெறுகின்றது. சத்ய நாராயண பூஜையின் போது பாராயணம் செய்யப்படும் கதைகளைப் பார்போமா?

ஒரு சமயம் நைமிசாரண்யத்திலே, சனகாதி முனிவர்கள் ஸூ பௌராணகரிடம், சுவாமி விரும்பிய பலத்தை வரத்தாலும் தபஸ்ஸாலும் விரைவில் பெரும் வகை என்ன? என்று வினவ, ஸூதரும் , எம்பெருமான் நாரத முனிவருக்கு கூறிய சத்ய நாராயண விரத மகிமையைப்பற்றி கூறுகின்றார்.

கருட சேவை க்கு முன்னர் ஊஞ்சல் சேவை
தந்தருளும் சத்யநாராயணப் பெருமாள்
கலியுகத்திலே பூலோகத்திற்கு வந்த நாரதர் அவர்கள் படும் துன்பத்தைக் கண்டு வருந்தி பிறர்க்கருள் புரிய நாரதர், " இவர்களது துன்பத்தைத் துடைக்கும் வழி என்ன"? என எம்பெருமானிடம் வினவ, மஹா விஷ்ணுவும், ' உன்னிடம் அன்பால் ஸத்ய நாராயண விரதத்தைப் பற்றி சொல்லுகின்றேன் கேள். ஏதேனும் ஒரு தினத்தில் சுற்றம் சூழ அந்தணர்களுடன் இவ்விரதத்தை செய்யலாம். பக்தியுடன் நிவேதனங்களை ஸமர்பிக்க வேண்டும். கோதுமை மாவு, அரிசிமாவு, பால், நெய், சர்க்கரை, பஷணங்கள், முதலியவற்றை நிவேதனம் செய்து, அந்தணனிடம் விரத மகிமையைக் கேட்டு தக்ஷிணை அளித்து அனைவருக்கும் போஜனம் செய்வித்து வீடு திரும்ப வேண்டும்'. "இந்த கலியுகத்திலே ப்ரதக்ஷ்யமாக பலனளிக்க வல்லதாம்" என்று கூறினார்.
ஒரு சமயம் காசி நகரில் ஒரு ஏழை அந்தணன் பசி தாகத்தினால் மிகவும் வாடி துன்பப்பட்ட போது அவனுக்காக இரங்கி பகவான் கிழரூபத்தில் வந்து, அந்த அந்தணனுக்கு சத்ய நாராயண பூஜையின் மகிமையும், அந்த விரதத்தை அனுஷ்டிக்கும் முறையையும் கூறி மறைய, அந்த அந்தணனும் விரதத்தை முறையாக செய்து முடித்தான். பின் பெருமாளின் அருளால் துயர் நீங்கி செல்வந்தன் ஆனான். இறுதியில் அவனுக்கு முக்தியும் கிட்டியது.

ஒரு சமயம் ஒரு ஏழை அந்தணனின் வீட்டில் நடை பெற்ற சத்ய நாராயண பூஜையில் ஒரு விறகு வெட்டியும் கலந்து கொண்டு, பிரசாதத்தையும் புசிக்க அடுத்த நாள் அணைத்து விறகுகளும் விற்று தீர்ந்து விட்டன. சத்ய நாராயண விரதத்தின் மகிமையை உணர்ந்த விறகு வெட்டி, பிராமணனிடம் இவ்விரதத்தை கடைப்பிடிக்கும் முறையைக் கேட்டு, தானும் பின் இப்பூஜையை செய்து செல்வந்தன் ஆனான் அவனுக்கும் மோட்சம் கிட்டியது.

ஊஞ்சல் சேவை பின்னழகு
உல்காமுகன் என்ற மன்னனின் இராணி சத்ய நாராயண விரதத்தை செய்வதை கண்ட ஒரு வணிகன் வந்து கேட்க சந்தான சம்பத்துக்களை விரும்பி செய்வதாக இராணியும் கூறினாள். வணிகனும் புத்ர பாக்கியம் உண்டானால் விரதம் இருப்பதாக கூற பெண் மகவும் பிறந்தது. அவனும் மணைவியிடம் பெண்ணுக்கு கல்யாணம் முடிந்தவுடன் பூஜை செய்வதாக கூறி மறந்து விட்டான். ஒரு நாள் மருமகனுடன் வியாபாரம் செய்ய ரத்ந்ஸார நகரம் சென்று ஒரு சத்திரத்தில் இரவு தங்கினான். அந்த இரவில் அரண்மனையில் கொள்ளையடித்த பொருட்களை அந்த சத்திரத்திலே போட்டு விட்டு கொள்ளையர்கள் சென்று விட, காலையில் காவலர்கள் இருவரையும் அரண்மணையில் கொள்ளையடித்ததாக கைது செய்து சிறையிலடைத்தனர். அங்கே மனைவியும் மகளும் எல்லா பொருள்களையும் களவு கொடுத்து உண்ண உணவின்றி தவித்தனர். ஒரு நாள் மகள் ஒரு பிராமணன் வீட்டில் சத்ய நாராயண பூஜை நடப்பதை பார்த்து , பிரசாதம் புசித்து வந்து தானும் பூஜை செய்ய , பகவான் மன்னன் கனவில் தோன்றி உண்மையைக் கூற இருவரும் விடுதலை அடைந்தனர்.

அரசன் கொடுத்த பொன்னையும், வெள்ளியையும் இருவரும் ஒரு ஓடம் ஏறி நகரம் செல்ல, பகவானும் ஒரு பிரம்மச்சாரி வேடத்தில் வந்து ஓடத்தில் என்ன என்று வினவ, எல்லாமே கொடி, இலை என்க, அவ்வாறே ஆகுக என. எல்லா தங்கமும் வெள்ளியும் இலையும் கொடியுமாகியது. மருமகன் பிரம்மச்சாரியை சரணடைந்து வேண்ட சரியாயிற்று.

லக்ஷ்மி ஹாரம் அணிந்து அஞ்சிறைப் புள் ஊர்ந்து
அருள் பாலிக்கும் சத்ய நாராயணப் பெருமாள்

நகர் சென்றதும், சத்ய நாராயண பூஜை செய்து கொண்டிருந்த மகள் மருமகன் வந்த செய்தி கேட்டவுடன் பிரசாதத்தை சுவீகரிக்காமல் மறக்க , பகவான் மருமகனுடன் ஒடத்தை மூழ்கும்படி செய்ய , அவளும் மூழ்க முயல, வணிகன் சத்ய நாராயண பூஜை செய்ய நேர்ந்து கொள்ள, வணிகனே உன் மகள் பிரசாதம் உட்கொள்ள மறந்து விட்டாள். அது பெரிய அபராதம். இவள் பிரசாதம் சுவீகரித்துக் கொண்டவுடன் தன் கணவனை காண்பாள் என்று அசரீரி கூற , அவ்வாறே அவளும் பிரசாதம் சுவிகரித்தவுடன் ஓடத்துடன் தன் கணவனைக் கண்டாள். சத்ய நாராயண பூஜை செய்வதால் இக மற்றும் பர சுகங்கள் இரண்டும் கிடைக்கின்றன. பௌர்ணமி மற்றும் சங்கராந்தி தினங்களில் செய்யும் பூஜை மிகவும் சிறந்தது.

துங்கத்வஜன் என்ற மன்னன் ஒரு சமயம் காட்டிலே வேட்டையாடசென்றபோது அங்கு இடையர்கள் சத்ய நாராயண பூஜை செய்வதை பார்த்தான். அவர்கள் பூஜை பிரசாதத்தை கொடுக்க மன்னன் அதை உதாžனம் செய்ய அவனுடைய 100 பிள்ளைகளும் உடனே மாண்டனர். அவனது தன தான்ய சம்பத்தும் அழிந்தது. தன் தவறை உணர்ந்த மன்னன் பின் சத்ய நாராண பூஜை செய்து சம்பத்தையும் புதல்வர்களையும் திரும்பப் பெற்றான். சத்ய நாராயண பூஜை செய்து அதன் சரித்திரத்தையும் ச்ரவணம் செய்பவன் ஸத்ய நாராயணர், ஸத்ய தேவர், சத்யர், காமி தேவன் என்று அன்புடன் அழைக்கப்படும் சுவாமியின் அனுகிரகம் பெற்று , ஏழ்மை விலகும், சிறை தண்டனை பெற்றவன் விடுதலை அடைவான், பயம் நீங்கும், விரும்பிய அனைத்தும் கிடைக்கும். இந்த ஆறு கதைகளும் சத்ய நாராயண பூஜையின் போது ச்ரவணம் செய்யப்படுகின்றன.

உம்பராலறியலாகா ஒளியுளார் ஆணைக்காகி
செம்புலாலுண்டு வாழும் முதலை மேல் சீறி வந்த
எம்பருமான் புண்டரீகப் பாவை சேர் மார்பன் கருட சேவை
இனி சத்ய நாராயண பூஜை செய்தவர்கள் அடுத்த பிறவியில் பெற்ற பேற்றைக் காண்போமா? அந்தணன் குசேலாராக ப்பிறந்து கிருஷ்ணரின் நன்பனும் ஆகி பெரும் பேறு பெற்றான். விறகு வெட்டி குகனாகப் பிறந்து இராம பிரானுக்கு சேவை செய்யும் பாக்கியம் பெற்ரான். உல்காமுகன் தசரத மஹாராஜாவாகப் பிறந்து அரங்கனாதரின் திவ்ய கடாக்ஷம் பெற்று முக்தியும் அடைந்தான். வணிகன் மோத்வஜனாக பிறந்து உடலை அறுத்துத் தந்து மோட்சலோகமும் போனான். துங்கத்வஜன் நான்முகனானன்.
-->
விண்ணுளார் வியப்பவந்து ஆனைக் கருளையீந்த 
கண்ணன் பன்றியாய் அன்று பாரகங்கீண்ட பாழியானாழியான்

கருட சேவையன்று எப்போதும் போல் முதலில் பக்தி உலாத்தல் கண்டருளி திருக்கோவிலிலிருந்து வாகன மண்டபத்திற்கு நடையலங்காரத்துடன் எழுந்தருளுகின்றார் சத்யநாராயணப் பெருமாள். பின் வாகன மண்டபத்தில் ஊஞ்சல் சேவை தந்தருளுகின்றார். அங்கு உபயதாரர்களுக்கு மரியாதையுன் செய்யப்படுகின்றது. பின் கருட வாகனத்தில் எம்பெருமானின் அலங்காரம் நடக்கின்றது. வெளியே புள்ளூர்தியில் பெருமாளை தரிசிக்க அன்பர்கள் தவம் கிடக்கின்றனர். அலங்காரம் முடிந்து திரை விலக்கப்படுகின்றது திவ்ய தரிசனம் கண்டு ஆனந்தம் அடைகின்றனர் அன்பர்கள். பின்னர் . ஆச்சாரியார் வேதாந்த தேசிகர் மூலவரின் லக்ஷ்மி ஹாரஹ்த்துடன் எழுந்தருளுகின்றார். பின்னர் லக்ஷ்மி ஹாரம் பெருமாளுக்கு சார்த்தப்பட்டு தீபாராதணை நடை பெறுகின்றது. பக்தர்கள் அனைவரும் ஆனந்த பராவசத்தில் கண்ணீர் மல்க பெருமாளை சேவிக்கின்றனர். இந்த வருடம் சிறப்பாக அஹோபில மட ஜீயர்களும் எழுந்தருளி சத்ய நாராயணப் பெருமாளை மங்களாசாசனம் செய்தனர்.

இப்புதிய தங்க முலாம் கருட வாகனத்தை அன்பர்கள் சென்ற சம்ப்ரோக்ஷணத்தின் போது சமர்பித்தனர். எல்லா உற்சவங்களும் வெகு சிறப்பாக இத்திருக்கோவிலில் நடைபெறும் சிறப்பை சமயம் கிடைத்தால் வந்து சேவித்து சத்ய ஸ்ரீ மஹா லக்ஷ்மி சமேத சத்ய நாராயணர் அருள் பெறுமாறு பிரார்த்திக்கின்றேன்.

கருட சேவை பின்னழகு
தாழைத்தண்ணாம்பல் தடம்பெரும் பொய்கைவாய் 
  வாழுமுதலை வலைப்பட்டு வாதிப்புண் 
  வேழந்துயர்கெட விண்ணோர் பெருமானாய்
ஆழிப்பணி கொண்டானாலின்று முற்றும் 
  அதற்கருள் செய்தானாலின்று முற்றும்.