Sunday, June 9, 2013

ஸ்ரீநிவாசர் கருட சேவை


திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்
ஸ்ரீநிவாசர் கருடசேவை

ஸ்ரீ ஸ்ரீநிவாசர்


சமீபத்தில்தான் இத்திருக்கோவில் விரிவுபடுத்தப்பட்டு மஹா  சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது . அதற்கு பிறகு நடைபெற்ற பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் காலை கருட சேவையை சேவிக்கின்றீர்கள் அன்பர்களே.



வேதாந்த தேசிகர் சன்னதி முன் பெருமாள் சேவை

பின்னழகு


புதிதாக பல வர்ணத்தில் மிளிரும் சீனிவாசர் விமானம்



Friday, June 7, 2013

திருவல்லிக்கேணி கண்ணாடி கருட சேவை


பங்குனி உத்திரத் திருக்கல்யாணம்

வேதவல்லித்தாயார் ஸ்ரீமந்நாதர் திருக்கல்யாணம்

திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் நெடியோனாய் நின்ற கோலத்தில்,  தேர் சாரதிக்கு உரிய முறுக்கு மீசையுடன் வலக்கையில் சங்கமேந்தி சக்கரம் இல்லாமல், என்னை சரணடைவாயாக நான் உன்னை ஈடேற்றுவேன்   என்று இடக்கரம் திருப்பாதத்தை சுட்ட, வேங்கட கிருஷ்ணன் என்று மூலவராயும், திருமுக மண்டலத்தில் பீஷ்மரின் அம்பு காயங்களுடன் பார்த்தசாரதி என்று உற்சவராயும், வால்மீகி முனிவர் வணங்கும் இராவணாந்தகனாய்,  இராமனாய், மைதிலி மற்றும் தம்பி இலக்குவனோடும் சக்கரவர்த்தி திருமகனாகவும், பள்ளி கொண்ட ஸ்ரீமந்நாதராய் அரங்கனாகவும், பிரகலாதனுக்கு அருள் புரிந்து யோக நிலையில் அமர்ந்த தெள்ளிய சிங்கராகவும், நித்ய கருட சேவை வழங்கும் கஜேந்திர வரதராகவும் பெருமாள் ஐந்து கோலங்களில் சேவை சாதிக்கின்றார்.



கண்ணாடி கருட சேவை

ஐந்து பெருமாள்களும்  பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் காலை கருட சேவை தந்தருளுகின்றனர்.   மேலும் கஜேந்திர மோஷம் ஆடி பௌர்ணமியன்றும், மாசி மகத்தன்று தீர்த்தவாரி கருட சேவையும், பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீமந் ரங்கநாதர் கண்ணாடி கருட சேவை தந்தருளுகின்றார். இந்த கண்ணாடி கருட சேவையை இப்பதிவில் காணலாம்.

திருவரங்கம் பங்குனி உத்திர சேர்த்தி சேவை

பங்குனி உத்திரம் எனது கல்யாண விரதம் என்றும் அழைக்கப்படுகின்றது. அன்று தான் சீதா இராமர் திருக்கல்யாணம் நடைபெற்றது. பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்தில் இன்றுதான் "நம்பெருமாளும், அரங்கநாயகியும் சேர்த்தி சேவை" சாதிக்கின்றனர்.  அது போலவே பல வைஷ்ணவ ஆலயங்களில் இன்று திருக்கல்யாணமும், சேர்த்தி சேவையும் நடைபெறுகின்றது. திருநறையூர், திருவாலி திருநகரி வேடுபறி உற்சவம், தேரழுந்தூர் ஆகிய பல திவ்ய தேசங்களில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. இந்த திவ்ய தேசத்திலும் பங்குனி  உத்திரத்தன்று ஸ்ரீமந் நாதர் என்னும் அரங்கநாதர் மற்றும் வேதவல்லித் தாயார் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது.





திருவல்லிக்கேணியில்  "என்னையாளுடையப்பன்" என்று அழைக்கப்படும்  அரங்கநாதர், வெங்கடகிருஷ்ணருக்கும் முன்பாக இங்கு கோவில்                            கொண்டதாக ஐதீகம்ஒரு சமயம் பெரிய பிராட்டியார் திருமாலுடன் கோபம்             கொண்டு துளசி செடிகள் நிறைந்த இந்த பிருந்தாரண்யத்தில் அல்லி மலர்கள் நிறைந்த  கைரவணி புஷ்கரணி தடாகத்தில் ஒரு அல்லி மலரில் தோன்றினார்பிருகு மகரிஷிக்கு அந்தக் குழந்தை வேத ஸ்வரூபமாக காட்சியளித்ததாலும் அல்லி மலரில் தோன்றியதாலும் "வேதவல்லி" என்று பெயரிட்டு வளர்த்தார்.  வேத வல்லித்தாயார்   திருவரங்கனை தம் நாதனாக ஏற்று வாரீர்  "எம் நாதரே" என்று அழைக்கவே இத்தலத்தில் ஸ்ரீ ரங்கநாதர் "ஸ்ரீமந்நாதன்"   என்றும் போற்றப்படுகின்றார்தாயாரை திருக்கல்யாணம் செய்து கொள்வதற்காக ஸ்ரீரங்கநாதர் இத்திருத்தலத்திற்கு  எழுந்தருளினார் என்பது ஐதீகம்.



பார்த்த சாரதி பெருமாளின் கருவறைக்கு இடப்புறத்தில் அரங்கநாதரின் சன்னதி அமைந்துள்ளதுபாம்பனையில்  புஜங்க சயனத்துடன் பள்ளி    கொண்ட கோலத்தில் இரு புறமும் தேவியர் அமர்ந்திருக்கநாபியிலிருந்து பிரம்ம     தேவருடன் சேவை சாதிக்கின்றார் பெருமாள்அனந்த சயன பெருமாளுக்கு அருகே  உள்ளே மறைவாக சிரித்தபடி வராகரும் அமர்ந்திருக்கின்றார்.    உற்சவர் ஸ்ரீ தேவி பூதேவி தாயாருடன் சேவை சாதிக்கின்றார்.  பங்குனி உத்திரத்தன்று வேதவல்லித் தாயார் அரங்கநாதர் திருக்கல்யாணம்.இவரை திருமங்கையாழ்வார் 

வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும் 
கோதிலின் கனியை நந்தனார்க் களிற்றைக் குவலயத்தோர் தொழுதேத்தும் 
ஆதியை அமுதை என்னையாளுடை யப்பனை ஒப்பவரில்லா 
மாதர்கள் வாழும்  மாடமாமயிலைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே   என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.


பங்குனி உத்திரத்தை ஒட்டி ஸ்ரீமந்நாதருக்கு ஐந்து நாட்கள் பல்லவ உற்சவம் நடைபெறுகின்றது. ஐந்து நாட்களும் பெருமாள் முன்பு " ப்ருந்தாரண்ய புராணம்"  என்னும் திருவல்லிக்கேணி புராணம் சேவிக்கப்படுகின்றது. நிறை நாள் பங்குனி உத்திரத்தன்று மாலை பௌர்ணமி நிலவொளியில் ஸ்ரீ ரங்கநாதர் கண்ணாடி கருட சேவை தந்தருளுகின்றார்.

  அற்புதமாக திருக்கர  விரல்களில் நவரத்ன மோதிரங்கள்,  திருக்கரம் மற்றும் திருப்பாத  நகங்களில் கண்ணாடி,  திருக்கர கங்கணங்கள், கிரீடம் ஆகியவற்றில் பல வர்ண கண்ணாடிகள், மற்றும் பிரபை முழுவதும் அற்புதமாக கண்ணாடி வேலைப்பாட்டுடன்,சர்வ அலங்கார பூஷிதராக பெருமாள் கண்ணாடி கருட சேவை சாதிக்கின்றார்.




கண்ணாடி கருட சேவை படங்களை தெளிவாக பார்க்க  இங்கு செல்க கண்ணாடி கருடன்

பௌர்ணமி நிலவொளியில் பெரிய மாட வீதியில் சேவை சாதித்தபின் பெருமாள் ஆஸ்தான மண்டபம் எழுந்தருளி மறு அலங்காரம் கண்டருளி தாயார் சன்னதிக்கு எழுந்தருளுகிறார். சர்வலங்கார பூஷிதையாக தாயார் தன் நாதருக்காக காத்திருக்கின்றாள். பின் திருக்கல்யாணம். சேர்த்தி சேவையின் போது கத்யத்ரயம் சேவிக்கப்படுகின்றது. (கத்யத்ரயம் என்பது இராமானுஜர் இயற்றிய சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுண்ட கத்யம் என்ற மூன்று நூல்கள். சரணாகதி கத்யம் பிரபத்தி என்ற சரண்புகுதலைப் பற்றியது. ஸ்ரீ ரங்க கத்யம் ரங்கநாதப் பெருமானை தன்னை தாசனாக்கிக் கொள்ளும்படி வேண்டுவது, வைகுண்ட கத்யம் மஹா விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்தை நேரில் பார்ப்பது போல விவரிப்பது).  இதன்மூலம் இராமானுஜர் சரணாகதி செய்துகொண்டு இறைவனை அடைந்தார்.

 பெருமாளுடன் தாயார் இருக்கும் சமயமாகப் பார்த்து இராமானுஜர் இங்கு கத்யத்ரயம் சேவித்தார் என்பார்கள். அதனால் இன்றும் இந்த உற்சவத்தின்போது கத்யத்ரயம் சேவிப்பது வழக்கம். தாயாரின் சிபாரிசு கிடைக்கும் அல்லவா? 


நாமும்  பங்குனி உத்திர நாளில் மோக்ஷமளிக்கும்  (கண்ணாடி)கருட சேவையை சேவித்து ,திவ்ய தம்பதிகளிடம் பிரபத்தி செய்து முக்தியடைவோமாக.

Sunday, June 2, 2013

வரதா! வரதா! உனக்கு கைங்கர்யம் செய்ய முடியுமா? -2

பூவிருந்தவல்லி மூன்று கருடசேவை -2


மேனா பல்லக்கில் திருக்கச்சி நம்பிகள்


வரதராஜப் பெருமாள் கோபுராஹார விமானத்தின் கீழ்  ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் சூரிய மண்டலத்துடன் மேற்கு நோக்கிய முக மண்டலத்துடன்  அன்று திருக்கச்சி நம்பிகளுக்கு சேவை சாதித்த அதே கோலத்தில் அற்புதமாக சேவை சாதிக்கின்றார். ஜோதிட ரீதியாக சூரிய திசை நடப்பவர்கள், தந்தையுடன் கருத்து வேறுபாடு உள்ளவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் வரதராஜ பெருமாளுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வழிபட நன்மை.  பட்டர் அருமையாக சேவை பண்ணி வைத்து தீர்த்தமும் சடாரியும் வழங்கினார். பெருமாளை திவ்யமாக சேவித்து விட்டு வெளியே வந்து அருகில் உள்ள தாயார் சன்னதிக்கு செல்வோமா?.  


மூன்று கருட சேவை கோபுர வாசல் தரிசனம் 

பொதுவாக தாயார் மற்றும் ஆண்டாள் சன்னதி பெருமாளுக்கு வலப்பக்கதிலும் இடப்பக்கதிலுமாக இருக்கும் ஆனால் இத்தலத்தில் மாறியுள்ளது. தாயார் பூவில் இருந்தவள் என்பதால் பூவிருந்தவல்லி,  புஷ்பவல்லி என்பது தாயாரின் இன்னொரு திருநாமம். தாயார் சன்னதி தனிக்கோவிலாக  பல அற்புத கற்சிற்பங்கள் கொண்ட அர்த்த மண்டபம் மற்றும் மஹா மண்டபத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.  மல்லி வனத்தில் மல்லிகைப்பூவில் இருந்த புஷ்பவல்லித்தாயாருக்கு மல்லிகை மாலை சார்த்தி வழிபடுவது மிகவும் விசேஷம். வைகாசி பிரம்மோற்சவத்தின் போது தாயாருக்கு புஷ்பயாகம் நடைபெறும் அன்று சுவாமி பள்ளியறைக்கு சயன கோலத்தில் சேவை சாதிப்பார். பங்குனி உத்திரத்தன்று வரதராஜர், ஸ்ரீதேவி, பூ தேவி, புஷ்பவல்லித் தாயார் ஆண்டாள் ஆகியோருடன் சேர்த்தி சேவை அளிக்கின்றார்.


அரங்கநாதர் கருட சேவை

தாயார் சன்னதிக்கு இடப்புறம் திருக்கச்சி நம்பிகளின்  ஆச்சாரியரும் நாதமுனி அவர்களின் பேரனுமான, ஆளவந்தாருக்கு   தனி சன்னதி கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் இவர் சன்னதியிலும் மஹா மண்|டபம் அர்த்த மண்டபம் உள்ளது. இவருக்கு ஆடியில் திருநட்சத்திர விழா நடைபெறுகின்றது. அடுத்து வேங்கடவனை சேவிக்கலாமா அன்பர்களே.  
வேங்கடேசர் சன்னதி இராஜ கோபுரம் தீபஸ்தம்பத்திற்கு அருகில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நெடியோனாக நின்ற கோலத்தில் ஸ்ரீ தேவி, பூ தேவியுடன் சேவை சாதிக்கின்றார் பெருமாள். இவர் சன்னதியின் முன் மண்டபம் அருமையான கற்தூண்களில் சிற்பங்களுடன் எழிலாக அமைந்துள்ளது. திருக்கச்சி நம்பிகளுக்காக இங்கு வந்து கோவில் கொண்ட திருமலையப்பனை நாமும் மனதார சேவிக்கின்றோம்.  


வருடம் முழுவதும் திருவிழாக்கள் தான் இத்தலத்தில். மூன்று பெருமாள்களுக்கும் தனித்தனியாக பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. சித்திரையில் 10 நாட்கள் ஸ்ரீரங்கநாதர் பிரம்மோற்சவம், வைகாசியில் 10 நாட்கள் வரதராஜர் பிரம்மோற்சவம், ஆனியில் மிருக சீரிஷத்தன்று சத(108) கலஸ ஸ்தாபன திருமஞ்சனம் வரதராஜர், புஷ்பவல்லித் தாயார் ஆண்டாள், திருக்கச்சி நம்பிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆடியில் ஆண்டாள் திருவவதார ஆடிப்பூர உற்சவம், ஆளவந்தார் திருநட்சத்திரம் உற்சவம், ஆவணியில் ஸ்ரீ ஜெயந்தி உற்சவம், புரட்டாசியில் பவித்ர உற்சவம் 3 நாட்கள், ஸ்ரீ ஸ்ரீநிவாசர் பிரம்மோற்சவம் மற்றும் நவராத்திரி உற்சவம், ஐப்பசியில் மணவாள மாமுனிகள்  10 நாள்  அவதார உற்சவம். கார்த்திகையில் ஸ்ரீ கார்த்திகை தீப உற்சவம், மார்கழியில் அத்யயனோற்சவம், வைகுண்ட ஏகாதசி. தையில் கனு உற்சவம். மாசியில் ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் அவதார 10 நாட்கள் உற்சவம், மிருகசீரிஷத்தன்று காலை வரதராஜப் பெருமாள் எழுந்தருள, திருக்கச்சி நம்பிகள் இயற்றிய தேவராஜ அஷ்டகம் சேவித்து,  மூலவருக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம், பல்லக்கில் திருவீதிப் புறப்பாடு, மாலை உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஈரவாடை தீர்த்தம் மற்றும் சாத்துமுறை பின்னர் இரவு புறப்பாடு. பங்குனியில் ஸ்ரீ மங்களாசாசனம் மூன்று கருட சேவை, காலை 9 மணி அளவில் மேனா பல்லக்கில் எழுந்தருளியுள்ள திருக்கச்சி நம்பிகளுக்கு மூன்று பெருமாள்களும் கோபுர வாசல் சேவை பின்னர் மாட வீதி புறப்பாடு.

கோவிலுக்கே வெளியே இராஜ கோபுரத்திற்கு அருகிலேயே உள்ளது வெண் தாமரைக்குளம், சில வருடங்கள் முன்பு ஒரே குப்பைகள் கொட்டப்பட்டு கிடந்தது. தற்போது சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது திருத்தேர் அமைக்கும் பணியும் நடந்து வருகின்றது. விரும்பும் அன்பர்கள் இந்த  கைங்கரியங்களில் பங்கு கொள்ளலாம்.


அரங்க நாதர் பின்னழகு

இனி திருக்கச்சி நம்பிகளை குறித்து வழங்கும் சில சம்பவங்களைக் காணலாம். திருக்கச்சி நம்பிகள் தினமும் நீராடிவிட்டு வரும் போது அவருடைய திருவடிகள் பட்ட மண்ணை ஒரு பாகவதர் தன் தலையிலும், உடம்பிலும் பூசி வந்தார். ஒரு நாள் இதைக் கண்ட நம்பிகள் அதற்கான காரணத்தை அவரிடம் கேட்க, அதற்கு, “நீங்கள் தான்  பெருமாளிடம் தினமும் பேசுகிறீர்களே, உங்கள் திருவடி பட்ட மண்ணை நான் பூசிக்கொள்வதால் எனக்கு மோட்சம் கிடைக்குமா? என்று பெருமாளிடம் கேட்டு சொல்லுங்கள் என்றாராம். திருக்கச்சி நம்பிகள் வரதராஜப் பெருமாளிடம் இதைப் பற்றிக் கேட்க, வரதராஜப் பெருமாளும், “அவனுக்கு நிச்சயம் மோட்சம் உண்டு” என்று கூறினார்.


திருவேங்கடவன் கருட சேவை

தினமும் தான் பெருமாளிடமே பேசுகிறோமே, நிச்சயம் தனக்கும் மோட்சம் உண்டு என்று நம்பிய நம்பி, “எனக்கு உண்டா?” என்று கேட்க அதற்குப் பெருமாள், “நீர் விசிறி வீசினீர்; நான் பேசினேன், இரண்டும் சரியாயிற்று” என்று பதில் சொல்லியிருக்கிறார். “சரி மோட்சம் அடைய என்ன வழி?” என்று கேட்க அதற்குப் பெருமாள் ஆசார்ய கைங்கரியம் (தொண்டு) செய்ய வேண்டும் என்று சொல்ல, நம்பிகள் திருக்கோட்டியூர் நம்பியிடம் அவர் மடத்து மாடுகளை மேய்க்கும் கைங்கர்யத்தை மாறுவேடமிட்டுச் செய்கிறார். ஒரு நாள் மழை பெய்த போது இவர் தனது போர்வையை பசுவிற்கு போர்த்தி விட்டு தான் அதன் கீழே அமர்ந்திருந்தார். இதைப் பார்த்து திருக்கோட்டியூர் நம்பி ஏன் என்று வினவ, பசு மாடு மழையில் நனைந்தால் அதற்கு சீதளம் பிடிக்கும் அதன் பாலைப் பருகும் தங்களுக்கும் சீதளம் பிடிக்கும் எனவேதான் இவ்வாறு செய்தேன் என்று கூறினார். இவர் வெறும் மாட்டுக்கரர் அல்ல உயர்ந்தவர் என்று கண்டுபிடித்த திருக்கோட்டியூர் நம்பி இவரை ‘நம் பையல்’ என்று தழுவிக்கொண்டார் என்று கதை. இன்றும் திருக்கச்சி நம்பிகள் மூலவர் கீழே சில மாடுகள் இருப்பதைக் காணலாம். பகவத் சேவையை விட  பாகவத சேவையே சிறந்தது என்பதை உணர்த்தவும், மேலும் தான்  பெருமாளிடம் நேரில் பேசுகின்றோம் என்ற நம்பிகளின் கர்வத்தை குறைக்க பெருமாள் இவ்வாறு நாடகமாடினார் என்பார்கள் பெரியோர்.  


திருக்கச்சி நம்பிகள் நற்குணங்களைப் பார்த்துவிட்டு இராமானுஜர் அவரைத் தன் குருவாக ஏற்க வேண்டும் என்று கேட்க அதற்கு திருக்கச்சி நம்பிகள் வர்ணாசரம தர்மத்துக்கு அது ஒத்து வராது என்று மறுத்துள்ளார். எப்படியாவது திருக்கச்சி நம்பிகளின் ஆசி தனக்கு கிடைக்க வேண்டும் என்று நினைத்த இராமானுர்,  ஆசார்யராக நினைத்த திருக்கச்சி நம்பி சாப்பிட்ட மிச்சத்தை, தான் சாப்பிடுகிற வாய்ப்பு கிடைத்தால் அது பெரும் பாக்கியம் என்று நினைத்தார்;  எப்படி பெருமாளுக்கு நாம் நைவேத்தியம் செய்யும் உணவை பிரசாதம் என்று சொல்லுகிறோமோ அதே போல. அதற்காக திருக்கச்சி நம்பிகளைத் தன் வீட்டிற்கு சாப்பிட அழைக்க, அவரும் சம்மதித்தார். இராமானுஜர் தன் மனைவியிடம் உணவு தயாரிக்கச் சொல்லிவிட்டு காத்துக்கொண்டு இருந்தார். நேரம் ஆகவே அவர் திருக்கச்சி நம்பிகளைத் தேடிக்கொண்டு  கோவிலுக்குப் போக, வேறு வழியாக திருக்கச்சி நம்பிகள் இராமானுஜரின் வீட்டை அடைந்தார். இராமானுஜர் வீட்டில் இல்லாவிட்டால் பரவாயில்லை, தனக்கு கோயில் வேலை இருப்பதால் சீக்கிரம் போக வேண்டும் என்றுசொல்லி அவர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார்.

திருவேங்கடவன் பின்னழகு

அவர் சென்றபின் இராமானுஜரின் மனைவி தஞ்சமாம்பா அவர் சாப்பிட்ட இலையை ஒரு குச்சியால் தள்ளிவிட்டு, அவர் சாப்பிட்ட இடத்தை சாணத்தால் மெழுகிவிட்டு, தானும் குளித்துவிடுகிறாள். திரும்பி வந்த இராமானுஜர், தனது மனைவி செய்த செயலைக் கண்டு வருந்துகிறார் “அவர் சாப்பிட்டு விட்டு மீதியாக வீட்டு சென்ற ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்க அதற்கு அவர் மனைவி “கீழ் ஜாதியைச் சேர்ந்தவர் சாப்பிட்ட மிச்சத்தை இங்கே யார் சாப்பிடுவது, பிச்சைக்காரர்களுக்குப் போட்டுவிட்டேன்,” என்று பதில் சொல்லுகிறார்.
ஒரு நல்ல பாகவதரான திருக்கச்சி நம்பி சாப்பிட்ட மீதியைச் சாப்பிடுகிற பாக்கியம் தனக்குப் போய்விட்டதே என்று மனம் வருந்துகிறார் இராமானுஜர். அதனால் இன்றும் ஸ்ரீரங்கம் கோயியில் இராமானுஜர் காலத்தில் அவருக்கு ஏற்பட்ட இந்தக் குறையைப் போக்க அத்யயன  உற்சவத்தின் போது நம்பெருமாள் அமுது செய்தருளியபின் நைவேத்தியம் ஆழ்வார்கள், ஆசார்யர்களுக்கு சமர்ப்பிக்கப்படும். அப்போது முதலில் திருக்கச்சி நம்பிகளுக்கு நைவேத்தியம் பண்ணிய அமுது பிறகு இராமானுஜருக்கு சமர்ப்பிக்கப்படும் வழக்கம் இருக்கிறது.

ஸ்ரீ கிருஷ்ணர் விமானம்



இவ்வளவு சிறப்புகள் பெற்ற தலத்திற்கு முடிந்தால் சென்று மூன்று பெருமாள்களையும், திருக்கச்சி நம்பிகளையும் , பூவிருந்த வல்லியையும்  சேவித்து விட்டு வாருங்கள். 

Saturday, June 1, 2013

வரதா! வரதா! உனக்கு கைங்கர்யம் செய்ய முடியுமா? -1

பூவிருந்தவல்லி மூன்று கருடசேவை

திருக்கச்சி நம்பிகள்
( நம்பியின் பதக்கத்தில் அரங்கனும் திருவேங்கடவனும் உள்ளதை படத்தை பெரிது படுத்திப்பார்க்கவும்)

மூன்று கருட சேவை

தருமமிகு சென்னையின் மிக அருகில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலம். ஸ்ரீ ராமானுஜருக்கு குருவாகிய விளங்கியவரும் கச்சி வரதருக்கு புஷ்ப கைங்கர்யம் மற்றும் ஆலவட்ட கைங்கர்யம் செய்தவருமான அருள் நிறை ஸ்ரீ திருகச்சி நம்பிகளின் திருஅவதார ஸ்தலம். பெருமாள் இவருக்காக சூரிய மண்டலத்துடன்  காஞ்சி வரதராஜராகவும், மேலும்  அரங்கநாதராகவும், திருவேங்கடவனுமாக சேவை சாதிக்கும் தலம்.

தர்மமே வெல்லும் என்ற நியதியின்படி பாரதப் போரில் வெற்றிவாகை சூடிய தருமன், இத்தலத்தில் தவம் செய்து மன அமைதி பெற்றதால் தருமபுரி என்று அழைக்கப்படும் தலம். இத்தலத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீபுஷ்பவல்லித்தாயார் மல்லிகைப் பூவிலிருந்து தோன்றியதால் பூவிருந்தவல்லி என்றழைக்கப்படும் தலம். திருகச்சி நம்பிகள் இங்கு நந்தவனம் அமைத்து மலர்த்தொண்டு செய்து வந்ததால் புஷ்ப மங்கலம் என்றும் புஷ்பபுரி என்றும் அறியப்படும் தலம். முதற்பராந்தக சோழன் காலத்து பழைய கல்வெட்டில் தொண்டை நாட்டின் புலியூர் கோட்டத்துப் பூந்தண்மலி என்று  குறிப்பிடப்படும் தலம். தற்போது பேச்சு வழக்கில் பூந்தமல்லி என்றும் ஆங்கிலத்தில் பூணமல்லி என்றழைக்கப்படும் தலம்.  

மூன்று கருட சேவை கோபுர வாசல் தரிசனம்


இச்சிறப்புகள் பெற்ற பூவிருந்தவல்லியில் அவதரித்த திருக்கச்சி நம்பிகளின் பெருமையை பார்ப்போமா? நகரேஷூ காஞ்சி என்னும் கச்சியம்பதியில் சேவை சாதிக்கும் தேவராஜப் பெருமாளுக்கு புஷ்ப கைங்கரியமும், ஆலவட்ட (விசிறி வீசுதல்) கைங்கர்யமும் செய்து வந்தவர் திருக்கச்சி நம்பிகள். அர்ச்சா திருமேனியரான அத்திகிரி வரதனுடன் அனுதினமும் நேரில் பேசும் பெரும்பேறு பெற்றவர். ஸ்ரீ இராமானுஜருக்காக ஆறு வாக்கியங்களை வரதராஜரிடம் பெற்று அனைவரும் உய்ய வழங்கியவர். இவரது முதுமைக் காலத்தில் கச்சி செல்ல முடியாத நிலையிலும் கால்கள் தேய செல்ல முயன்ற போது பேரருளானனே சூரிய மண்டலத்தில் இவருக்கு சேவை சாதித்து இவருக்காக இத்தலத்திலேயே  கோவில் கொண்டார். இவருடன் திருவரங்கத்து அமுதனும், திருவேங்கடவனும் இங்கு திருக்கோவில் கொண்டனர். தன் தந்தையைத் தொடர்ந்து  திருமழிசையாழ்வாருக்கு சேவை செய்து வந்ததால் பார்க்கவப்பிரியர்  என்னும் நாமமும் பெற்றார். திருமழிசையாழ்வாரின் திருச்சந்த விருத்தத்திற்கு தனியன்கள் இவர் இயற்றியவை. காஞ்சி வரதருக்கு புஷ்ப கைங்கரியமும், ஆலவட்ட கைங்கரியமும் செய்து வந்து அவருடன் உரையாடும் பாக்கியமும் பெற்றதால் காஞ்சி பூரணர் என்னும் திருநாமமும் இவருக்கு உண்டு. இவ்வளவு சிறப்புகள் பெற்ற இத்தலத்தில் பரம பாகவதர் திருக்கச்சி நம்பிகளுக்காக பங்குனி மாதம் ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் மூன்று கருட சேவையை இப்பதிவில் காணலாம் அன்பர்களே.

வரதராஜப்பெருமாள் கருட சேவை 

திருக்கச்சி நம்பிகள் வரலாறு: இன்றைக்கு ஆயிரத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் சாலி வாஹன சகாப்தம், ஆங்கில 1009ம் ஆண்டு, சௌம்ய வருடம் மாசி மாதம் மிருகசீர்ஷ நட்சத்திரத்தில் ஸ்ரீவீரராகவ செட்டியாருக்கும் ஸ்ரீமதி கமலையாருக்கும் நான்காவது திருக்குமாரனாக திரு அவதாரம் செய்தார். இவரது இயற்பெயர் கஜேந்திரதாசன் ஆகும். சிறு வயது முதலே இவர் திருமால்மீது பக்தி கொண்டவராய் வளர்ந்தார்.  இவரது தந்தையார் தமது முதுமைக் காலத்தில் தனது சொத்துக்களையெல்லாம் தனது நான்கு மகன்களுக்கும் சமமாக பிரித்துக் கொடுத்து, வைசியர்கள் என்பதால் வணிகம் செய்து இந்த செல்வத்தை இன்னும் பெருக்கிக் கொண்டு வளமாக  வாழுங்கள் என்ற அறிவுரை கூறினார். மற்ற மூவரும் அவ்வாறே செய்ய , கஜேந்திரதாசர் மட்டும் செல்வத்தை பற்றி எண்ணாமல் திருமாலுக்கு கைங்கர்யம் செய்வதிலேயே காலத்தை கழித்தார். தந்தை அளித்த செல்வத்தில் பூவிருந்தவல்லியில் நிலம் வாங்கி நந்தவனம் அமைத்து, பல் வேறு மலர்ச் செடிகளை பேணி வளர்த்து, மலர் மாலை கட்டி காஞ்சி பேரருளானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தார்.  பின்னர் ஆலவட்ட கைங்கரியமும் செய்யும் பேறு பெற்றார். இவரது சேவைக்கு மகிழ்ந்த  தேவராஜப் பெருமாள் இவருடன் தினமும் உரையாடினார்.

அரங்கநாதர் விமானம்

ஆலவட்ட கைங்கர்யம்: ஒரு சமயம் இவர் திருவரங்கத்தில் தங்கியிருந்து  திருவரங்கனை கண்டு கண்  குளிர சேவித்து, அரங்கனுக்கு திரு ஆலவட்ட கைங்கரியத்தை செய்யத் திருவுள்ளம் கொண்டு தம்மை அருளும்படி திருவரங்கனிடம்  விண்ணப்பித்தார். அதற்கு அரங்கனும் அன்புடன் அவரை நோக்கி தாம் கங்கையினும் புனிதமான காவிரியின் நடுவு பாட்டு, சோலைகளின் தென்றலினால் குளிர்ச்சியாக  பள்ளி கொண்டிருப்பதால் தனக்கு ஆலவட்ட சேவை தேவையில்லை, நீ   திருமலை சென்று  திருவேங்கடவனுக்கு சேவை செய் என்று அருளினார். ஆகவே இவரும் அரங்கனது ஆணையைச் சிரமேற்  கொண்டு, திருமலை சென்று திருமலையப்பனை கண்ணார சேவித்து  தம் விருப்பத்தை விண்ணப்பிக்க, வேங்கடவாணரும் குளிரருவி பாயும் மலையில் தான் சேவை சாதிப்பதால் அந்த மேகங்கள் சூழப் பெற்று மெல்லிய தென்றல் காற்றே சுகமாக உள்ளது. எனவே காஞ்சிபுரம் செல், பிரம்மா நடத்திய யாக குண்டத்திலிருந்து தோன்றிய தேவராஜப்பெருமாளுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்து வா என்று அருளினார்.  நம்பிகளும் அவ்வாறே பூந்தமல்லி வந்து  காஞ்சி பேரருளாருக்கு மலர் மாலை சாற்றியும், விசிறி வீசியும் சேவை செய்து வந்தார். காஞ்சியில் நம்பிகள் வசித்து வந்த  இடத்தில் இன்றும் இவர் சன்னதி உள்ளது.

பொதுவாக ஆலயங்களில் பட்டர்கள் பெருமாளின் வலது புறம் நின்று பூசை செய்வார்கள். ஆனால் தேவராஜப் பெருமாள்க்கு இடதுபுறம் நின்றே பூசை செய்கின்றனர் ஏனென்றால் வலப்புறத்தில் திருக்கச்சி நம்பிகள் இன்றும் நின்று ஆலவட்ட கைங்கர்யம் செய்கின்றார் என்பது ஐதீகம். 

வரதராஜப் பெருமாள் பின்னழகு 

நம்பிகளுக்கு காட்சி கொடுத்து அருளியது: காலம் கழிந்தது இவ்வாறு நம்பியும் முதுமை எய்தினார். ஆயினும் தான் செய்து வந்த திருத்தொண்டை விட மனமில்லாமல் தினமும் பூந்தமல்லியிலிருந்து காஞ்சி சென்று வந்து கொண்டிருந்தார். ஒரு நாள் அதிகாலையில்  தள்ளாத வயதில், உடல் தளர்ச்சியால், நடக்க முடியாமல் அவர் முழங்கால் தேய  வரதா! வரதா! இவ்வாறு ஆகிவிட்டதே உனக்கு  கைங்கர்யம் செய்ய முடியாமல் போய் விடும் போல உள்ளதே, ஓ! யானைக்காக உடனே ஓடி வந்த ஆதி மூலமே சரணம், பாண்டவகளுக்காக தூது சென்ற பரமனே சரணம், ப்ரகலாதனுக்காக தூணில் தோன்றிய வள்ளலே சரணம் என்று பலவாறும் போற்றிக்கொண்டே,   கண்ணில் நீர் சொரிய, தவழ்ந்து செல்ல முயன்ற போது காஞ்சி  வரதர் சூரிய உதய வேளையில் கோடி சூரிய பிரகாசனாக  சூரிய மண்டலத்தில் தோன்றி இவருக்கு சேவை சாதித்தருளினார். உடன் திருவரங்கனும், திருவேங்கடவனும் சேவை சாதித்தனர். இனி மேல் தாங்கள் காஞ்சி வர வேண்டாம் நாங்கள் மூவரும் உங்களுக்காக இங்கேயே சேவை சாதிக்கின்றோம் என்று மூவரும் பூவிருந்தவல்லியில் நிரந்தரமாக  கோவில் கொண்டனர். வரதராஜப் பெருமாள் சூரிய மண்டலத்துடன் சேவை சாதிப்பது இத்தலத்தின்  ஒரு தனி சிறப்பாகும்.
திருவேங்கடவன்  கருட சேவை
இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில் வருடத்தில் ஒரு நாள் பங்குனி மாதம் ஞாயிற்றுக்கிழமை மூன்று கருட சேவை சிறப்பாக இத்தலத்தில் நடைபெறுகின்றது. வாருங்கள்  மூன்று பெருமாள்களும் திருக்கச்சி நம்பிகளுக்கு சேவை சாதிக்கும் அழகை இப்பதிவில் சேவிக்கின்றீர்கள்.
அரங்கநாதர் கருட சேவை

வாருங்கள் திருக்கச்சி நம்பிகளுக்காக  பெருமாள் மூன்று கோலங்களில் கோவில் கொண்ட இத்தலத்தை சுற்றி வருவோம். சென்னையில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள பூந்தமல்லியில், பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது ஈடில்லாத தெய்வீகச் சிறப்புகள் நிறைந்த இத்தலம். முதலில் மேற்கு நோக்கிய , 7  நிலை கோபுரம் நம்மை வாருங்கள், வாருங்கள் பரம பாகவதரான திருகச்சி நம்பிகளையும் அவருக்காக கோவில் கொண்ட பெருமாளையும் சேவிக்க வாருங்கள் என்று அழைக்கின்றது. இராஜ கோபுரத்தின் உற்சுவற்றில் இக்கோவிலைப் பற்றிய சிறப்புகளை கல்வெட்டாக பதித்து வைத்துள்ளனர்.


இராஜ கோபுரம் உட்பக்கம், தீபஸ்தம்பம் வேங்கடவர் சன்னதி

பெருமாள்:: அருள்மிகு வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன்
நின்ற கோலத்தில் சூரிய மண்டலத்துடன் மேற்கு
நோக்கி அருள் பாலிக்கின்றார்.
உற்சவர்:: அருள்மிகு தேவராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூ தேவியுடன்
தாயார்::  அருள்மிகு புஷ்பவல்லித் தாயார்(பூவிருந்தவல்லித் தாயார்)
விமானம்:: கோபுராஹர விமானம்
தீர்த்தம்:: ஸ்வேதராஜ புஷ்கரணி( வெண் தாமரைக் குளம்)
தல விருக்ஷம்:: மல்லி (வனம்)
ஆகமம்:: வைகாநஸம்

எதிரில் விமானங்கள் அற்புதமாக வர்ணம் பூசப்பட்டு அருட்காட்சி தருகின்றன. மிக விலாசமான பிரகாரம்.  பிரகாரத்தை வலம் வரும் போது நாம் முதலில் சேவிப்பது அரங்கநாதர் விமானம் அதை அடுத்து ஸ்ரீ கிருஷ்ணர் விமானம், பிரகாரத்தின் வடக்கில் பெரிய அரசமரம் அரசமரத்தின் அருகில் நின்று திருக்கச்சி நம்பிகளின் விமானத்தை தரிசனம் செய்கின்றோம். கிழக்கு பிரகாரத்தில் நந்தவனம் இங்கிருந்து வரதராஜப் பெருமாளின் விமானத்தை தரிசனம் செய்கின்றோம். தெற்கு பிரகாரத்தில் ஒய்யாளி மண்டபம். சன்னதிக்குள் நுழைந்தவுடன்  முதலில் பாம்பணையில் பள்ளி கொண்ட அரங்கநாதரை சேவிக்கின்றோம். அடுத்து  கிருஷ்ணரை சேவிக்கின்றோம்.இருவரும் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் சேவை சாதிக்கின்றனர். பின்னர் தெற்கு நோக்கிய திருக்கச்சி நம்பிகள் சன்னதி.  அருகிலேயே இவர் கச்சி வரதரிடம் பேசி இராமானுஜருக்காக பெற்ற ஆறு வார்த்தைகளின் கல்வெட்டு. அது என்னவென்று பார்க்கலாமா?
திருக்கச்சி நம்பிகள் விமானம் 

அற்புதங்கள் ஆறு – அருளாளன் வாக்கு: 
இளையாழ்வாருக்கு(இராமானுஜருக்கு) ஏற்பட்ட சந்தேகத்தை திருக்கச்சி நம்பிகளிடம் கூற அவரும் அதை தேவப்பெருமாளிடம் எடுத்துரைக்க, பேரருளானும் மனமுவந்து ஆறு வார்த்தைகளை அருளிச்செய்தார்.

1.  1. “அஹமேவ பரம் தத்துவம்”
நாமே உயர்ந்த தத்துவம், நாராயணனே பரம் பொருள்.

2. 2.  “தர்சநம் பேத ஏவச”
சித்தாந்தம் ஆத்ம பரமாத்ம பேதத்தையுடையது.
ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது சித்தாந்தம்.

3.  3. “உபாயேஷு ப்ரபத்திஸ்யாத்”
மோட்சத்திற்கு ப்ரபத்தியே சிறந்த உபாயம்.
 சரணாகதியே மோட்சத்திற்கு வழி.
 சரணாகதியே கடைத்தேறுவதற்கு உகந்த வழி.

4.  4. ”அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம்”
அந்திம காலத்தில் ஸ்ம்ருதி வேண்டியதில்லை. இவ்வாறு சரணமடைந்தவன் ஆக்கை முடிவில் நாராயணனை நினைத்தல் வேண்டுமென்கிற நிர்பந்தமில்லை.

5.  5. “தேஹாவஸாகே முக்கிஸ் யாத்”
சரீர முடிவில் மோட்சமுண்டு – பிறவியின் முடிவில் மோட்சமுண்டு, மரணமானால் வைகுந்தம் ப்ராப்தமாகும்.

6. 6.  “பூர்ணாசார்ய ஸ்மாச்ரய”
பெரிய நம்பிகளையே நாட வேண்டியது. அவரைக் குருவாகக் கொள்வதென்ற இராமானுஜரின் எண்ணத்திற்கு விடையாக அமைந்ததே இந்த அருட்செயல்.
  
இந்த  "ஆறு வார்த்தைகளை" தாமே ஆசிரியர் போல இருந்து விளக்கினார் திருக்கச்சி நம்பிகள். நம்பிகள் மூலம் காஞ்சி தேவப்பெருமாளிடம் பெற்ற இந்த ஆறு வார்த்தைகள் தான் ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கைப் போக்கை தீர்மானித்தது. இவ்வாறு இராமானுஜர் என்ற மகானை உருவாக்கிக் கொடுத்ததில் எல்லாமாக இருந்தவர் திருக்கச்சி நம்பிகள்.

திருக்கச்சிநம்பிகள் அஞ்சலி ஹஸ்த்துடன் கையில் வரதனுக்கு வீசிய ஆலவட்டத்துடன்(விசிறி)நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். மாசியில் மிருகசீரிஷ நட்சத்திரத்தன்று காஞ்சி வரதராஜர் கோவிலிலிருந்து இவருக்காக மாலை பரிவட்டம், பட்டு இங்கு வரும். அன்று காலை வரதராஜப் பெருமாள்  மூலவர் சன்னிதிக்கு எழுந்தருளி சேவை சாதிப்பார். அப்போது அன்பர்கள் திருக்கச்சி நம்பிகள் பாடிய தேவராஜ அஷ்டகம் சேவிக்க வருடத்தின்  ஒரு நாள் மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறும். ஸ்ரீபெரும்புதூரில் சித்திரை திருவாதிரை உற்சவத்தின் போது இங்கிருந்து மாலை, பரிவட்டம் பட்டு ஸ்ரீபெரும்புதூர் செல்லும்.   ஆனி மிருகசீரிஷத்தன்று 108 கலச பூஜை செய்து வரதராஜர், புஷ்பவல்லித்தாயார்,ஆண்டாள், திருக்கச்சி நம்பிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். ஆடியில் திருக்கச்சி நம்பிகளின் ஆச்சார்யன் ஆளவந்தாருக்கு திருவிழா நடைபெறுகின்றது.  திருக்கச்சி நம்பிகளை

மருவாரும் திருமல்லி வாழ வந்தோன் வாழியே
மாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியே
அருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியே
ஆறு மொழி பூதூரர்க்கு அளித்த பிரான் வாழியே
திரு ஆலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே
தேவராச அட்டகத்தைச் செப்புமவன் வாழியே
தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே
திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே 
என்று வாழ்த்தி இனி வரதராஜர் சன்னதிக்கு செல்லாம்.


 கருட சேவை தொடரும்............