Tuesday, June 17, 2014

பார்த்தசாரதிப் பெருமாள் கருட சேவை

  ஜய வருடசித்திரை பிரம்மோற்சவம்








மேற்கு மாட வீதியில் பார்த்தசாரதிப்பெருமாள்



அதிகாலையில்  கோபுரவாசல் சாதித்தபின் தெற்கு சந்நிதி தெருவில்  முதலில் சேவை சாதித்த பெருமாள் பின் மேற்கு மாட வீதியில் வலம் வந்தார். தாங்கள் பார்க்கும் இப்படங்கள் அப்போது எடுக்கப்பட்டவை. இந்த வீதியில் இறுதியில் உள்ள   கங்கை கொண்டான் மண்டபம் வரை பக்தர்களின் தேங்காய்,  பழம், மலர் மாலைகள் மற்றும் பட்டு துண்டுகளை ஏற்றுக்கொண்டு சேவை சாதித்த பெருமாள் மண்டபம் வந்தவுடன் அப்படியே பின் நோக்கி மாட விதியின் இறுதி வரை சென்று பின்னர் கருடனில் பறந்து வருவது போலவே அற்புதமாக மேள சத்ததிற்கு ஏற்றவாறு ஆடி வரும் அந்த அழகை எப்படி வர்ணிப்பது என்றே தெரியவில்லை.



 அலை கடல் ஓரத்தில் மக்கள் கடலின் நடுவே கருடசேவை தந்தருளும் பெருமாள்

பெருமாள் பின்னழகு 



கங்கை கொண்டான் மண்டப வாயிலின் முன்பு


கங்கை கொண்டான் மண்டபத்தில் பெருமாள்



மண்டபத்தில் சிறிது நேரம் மண்டகப்படி கண்டருளி பின்னர் வடக்கு கிழக்கு மாட வீதிகள் வழியாக வாகன மண்டபத்தை அடைந்து பின்னர் ஒற்றை ரோஜா மாலையுடன் ஏகாந்த சேவை சாதித்த வண்ணம் அலங்கார மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றார். 



சிறுவர்களின்  பெருமாள்


திருவல்லிக்கேணியில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் சேவை சாதிக்கும் போது அவரைப் போலவே சிறிய பெருமாள்களை அதே போலவே அலங்காரம் செய்து பின்னே சிறுவர்கள் வலம் வருவார்கள். அது போல வந்த ஒரு கருட சேவையை தாங்கள் காண்கின்றீர்கள்.


பின் புறம் கூட தாமரை மலர்களுடன் தத்ரூபமாக அலங்காரம் செய்துள்ளனர்.

இன்னொரு கருட சேவை

Monday, June 9, 2014

மாசி மக தீர்த்தவாரி கருட சேவைகள்

இந்த வருடம் மாசி பௌர்ணமியன்று சென்னை கடற்கரைக்கு சென்று தீர்த்தவாரிகளை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது  அதில் கருட சேவை சாதித்த பெருமாள்களின் தொகுப்பே இப்பதிவு.


அதிகாலையிலேயே பெருமாள் கடற்கரைக்கு வருவதற்கு  முன்னரே பக்தர்களுக்கு தண்ணீரும், நீர் மோரும் வழங்கும் அன்பு உள்ளங்கள். அதையும் வருடா வருடம் தவறாமல் செய்து வரும் "காத்தன் செட்டியார் ட்ரஸ்ட்" அன்பர்களுக்கு  வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.


தங்க  கருட வாகனத்தில் பார்த்தசாரதி பெருமாள்


கடற்கரைக்கு எழுந்தருளுகிறார்

மாசி மாதம் முழுமதியும் மக நட்சத்திரமும் இணைந்து வரும் நன்னாளில் மாசி கடலாட்டு, மாசி மக  தீர்த்த வாரி, தீர்த்தம் கொடுத்தல், மாசி மகம் என்றெல்லாம் அழைக்கப்படும் இத்திருவிழா தமிழகமெங்கும் வெகு விமர்சையாக நடைபெறுகின்றது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை கடற்கரையோரம் அமைந்த திருக்கோவில்களின் அனைத்து உற்சவ மூர்த்திகளும் கடலுக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகின்றனர். ஆற்றங்கரையில் அமைந்த திருக்கோவில்களின் மூர்த்திகள் ஆற்றுக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கின்றனர். மற்றும் பல் வேறு திருக்குளங்கள் முதலான நீர் நிலைகளில் மாசி மக தீர்த்தம் கொடுத்தல் சிறப்பாக நடைபெறுகின்றது. கும்பகோணத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு கொண்டாடப்படும் மஹாமகமும் இந்த மாசிமக விழாதான்.


ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு நட்சத்திரம் சிறந்தது போல, மாசியில் சிறந்து விளங்குவது மக நட்சத்திரம். ஏன் இப்படி என்று ஆராய்ந்தால், நமது முன்னோர்கள் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் "பௌர்ணமி' திதி வரும் நன்னாளில் என்ன நட்சத்திரம் உள்ளதோ, அதையே அந்த மாதத்தின் பெயராகவும் வரும்படி அமைத்துள்ளார்கள். (உதாரணமாக சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி, சித்திரை நட்சத்திரத்தில் உதிப்பதால் அந்த மாதத்திற்கு "சித்திரை' என்று பெயர்). அந்த வரிசையில் மாசி மாதம் வரும் பௌர்ணமியில் மக நட்சத்திரம் பிறப்பதால், இந்தத் தமிழ் மாதம் "மாக மாதம்' (மாசி) என்று பெயர் பெற்றது.



பெருமாளை சேவிக்கும் பக்தர்கள்


பொதுவாகவே ஆலயங்களிலே திருவிழாக்களைத் தொடங்குவது அல்லது விழாக்கள் கொண்டாடுவது ஒரு முழுமதி திகழும் நன்னாளாகவே அமையும். அவ்வகையில் இந்த மாசிமாதம் மக நட்சத்திரத்தில் நடைபெறும் மகத்திருவிழா, - தலம், மூர்த்தி, தீர்த்தம் என்ற மூன்றினில் தீர்த்தத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப் பெறும் விழாவாக அமைந்துள்ளது. இதனை "மாக ஸ்நானம்' என்று சிறப்பித்துக் கூறுவார்கள்.


பார்த்தசாரதிப் பெருமாளின் பின்னழகு 


கடலில் இறங்க தயாராகின்றார் பெருமாள்

புராணங்களும் இந்நன்னாளைப் போற்றுகின்றன. மனிதர்கள் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ளும் வழிகளில் மாசி மகப் புனித நீராடலும் ஒன்று. மாசி மகத்தில் புண்ணிய தீர்த்தங்களைத் தரிசிப்பதும் தொடுவதும் பருகுவதும் அதில் நீராடுவதும் புண்ணியத்தைத் தரும்; பாவங்கள் தொலையும். இத்தினத்தில் தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம், பிதுர்க்கடன் ஆகியவை செய்தால், அவர்கள் பாவங்கள் நீங்கி நற்கதி பெறுவர் என்பது நம்பிக்கை.


பெருமாளுடன்  புனித தீர்த்தமாடிய  ஸ்ரீவைஷ்ணவர்கள்


 கடலாடிய சுதர்சனாழ்வார்

மாசி மக நட்சத்திரத்தன்று கோள்களின் அமைப்பின் காரணமாக ஈர்ப்புத் தன்மை காரணமாக பூமியில் காந்த சக்தி அதிகமாகி நீர் நிலைகளில் புதிய ஊற்று தோன்றி காந்த சக்தி கலக்கிறது. அதனால் அப்போது நதியில் நீராடுவதால் உடலிலும், மனதிலும் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று விஞ்ஞானம் கூறுகிறது.



 எழும்பூர் ஸ்ரீநிவாசப்பெருமாள்






கருட சேவை

இம் மாதத்தில் எல்லா நாட்களிலும் புனித நீராடுவது பிரயாகை, கங்கை, நர்மதா, காவேரி, கோதாவரி, துங்கபத்திரா, தாமிரபரணி உள்பட 24 கோடி தீர்த்தங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகள் நீராடிய பலன் ஒரே நாள் நீராடுவதால் கிட்டும். முனி பத்தினியர்கள் சரஸ்வதி நதி தீரத்தில் மண்ணால் அம்பிகை விக்ரகம் அமைத்து மாசி மாதம் 30 நாட்களும் வழிபட்டு சுமங்கலி பேறு பெற்றனர். மாசியின் தேவதை மஹா விஷ்ணு. இம்மாதம் முழுவதும் திருமாலை நினைத்து துளசியால் அர்ச்சனை செய்து வழிபட மிகவும் நல்ல பலன் கிட்டும்.




ஸ்ரீநிவாசர் பின்னழகு 

இராயப்பேட்டை  ஸ்ரீநிவாசர் கருட சேவை



சென்னையில் கடற்கரையெங்கும் பல இடங்களில் அனைத்துக் கோவில் திருமூர்த்தங்களும் எழுந்தருளி தீர்த்தக் கொடுக்கின்றனர்.  பெருமாளுடன் சக்கரத்தாழ்வாரும்  கடற்கரைக்கு எழுந்தருளுகிறார். பெருமாள் கடலுக்குள் சென்று வந்த பிறகு  சக்கரத்தழ்வார்  கடலில் வந்து நீராடும் போது அவருடன் பக்தர்களும் அவருடன் கடலில் நீராடி தங்கள் பாபங்களை போக்கிக்கொள்கின்றனர். பின்னர் கடற்கரையில் சக்கரத்தாழ்வாருக்கு , மஞ்சள் , திருமஞ்சனப்பொடி, சந்தனம், பால், தயிர், தேன், பன்னீர் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன பின்னர் சக்கரத்தாழ்வாருக்கும் பெருமாளுக்கும்  தீபாரதனை நடைபெறுகின்றது. இன்றைய தினம் சிறப்பு நைவேத்யம் வெள்ளரிக்காய், நீர்மோர் கோடைக் காலம் தொடங்கி விட்டதாலோ?


Sunday, June 8, 2014

பரதவர் குல மருமகன் கருட சேவை -2

திருகண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள்
 மாசி மக தீர்த்தவாரி

சௌரிராஜப்பெருமாள்


இவர் சௌரிராஜன் என்று அழைக்கப்படுவதற்கு ஒரு சுவையான கதை  உண்டுகோவிலுக்கு தரிசனத்திற்கு வந்த அரசனுக்கு  பிரசாதமாக  அளிக்கப்பட்ட மலர் மாலையில் தலை முடி இருந்ததைக் கண்டு அரசன்  கோபப்படஅர்ச்சகரும் பெருமாள் திருமேனியில் தலையில் சௌரி  இருப்பதாக சொல்லி சமாளித்தார்இதை சோதனை செய்ய அரசன்  மீண்டும் வந்த  போதுதன் பக்தனைக் காப்பாற்ற பெருமாள் தன்  தலையில் கட்டி குடுமியோடு சேவை சாதித்தாராம்எனவே உற்சவருக்கு இத்தலத்தின் சிறப்பான  கிரீடம் வைரம் அல்ல சௌரிதான்.

ஒவ்வோர் ஆண்டும் மாசி மகத்தன்று ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் 70  கி.மீ  தூரம் பயணம் செய்து பத்மாவதி நாச்சியாரின் கிராமமான  திருமலைராயன் பட்டினத்திற்கு எழுந்தருளிகிறார்கடற்கரையில்  தீர்த்தவாரி கண்டருளுகிறார்.


கடற்கரையில் காத்திருக்கும் பக்தர் கூட்டம்


திருமலைராயன் பட்டினத்திற்கு செல்லும் வழியில் உள்ள பட்டினஞ்சேரி என்ற கடற்கரைக் கிராமத்தில் உள்ள மீனவ இன மக்கள் ஊர் எல்லையில்பெருமாளை பட்டும்மாலைகளும் ஏந்தி எதிர் கொண்டு அழைக்கின்றனர்தங்கள் மாப்பிள்ளையைநெற்கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட பவளக்கால் சப்பரத்தில் சௌரிராஜப்பெருமாளை ஏழப்பண்ணி தங்கள் தோள்களில்
  தூக்கி வைத்துக் கொண்டு   மாப்ளேமாப்ளேஎன்று கூப்பிட்டவாறே  குலுக்குகின்றனர்


ஆடும் புள்ளில் ஆதி மூர்த்தி

இவருடன் திருமருகல் வரதராஜப்பெருமாளும்    வருகின்றார்.   தங்கள் பகுதிக்கு வரும்  இவர்களை காரைக்கால் பகுதியை சார்ந்த  திருமலைராயன் பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள்ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள்நிரவி ஸ்ரீ கரிய மாணிக்கப் பெருமாள்வரிச்சிக்குடி ஸ்ரீ வரதராஜப் பெருமாள்தென்னங்குடி ஸ்ரீ வரதராஜப் பெருமாள்காரைக்கால் கோவில்பத்து கோதண்டராமர், ஆகிய எழு பெருமாள்கள் எதிர் கொண்டு  கடற் கரைக்குஅழைத்துச் செல்கின்றனர்கடற்கரைக்கு வந்த பெருமாள் கடலில்  இறங்கி தீர்த்தம் கொடுத்தருளுகின்றார்பின்னர்  கரையில் கட்டு  மரங்களால் அமைக்கப்பட்டுமீன் வலை கொண்டு  விதானம் கட்டபட்ட  பந்தலில் மீன் காய வைக்கும் பாயை ரத்ன கம்பளமாக விரிக்கின்றனர்அன்று பெருமாள் நெற்கதிர்களால் எழிலாக அலங்கரிக்கப்பட்ட பவளக்கால் சப்பரத்தில் சௌரி முடியுடன் தங்க கருட வாகனத்தில் சேவை சாதித்து  அருளுகின்றார்.  மற்ற எட்டு பெருமாள்களும் தோளுக்கினியானில்  பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றனர்.


மாசிமக தீர்த்தவாரி கருடசேவை


ஸ்ரீ சௌரிராஜப்பெருமாள் தங்கள் கிராமத்திற்கு எழுந்தருளுவதை ஒட்டி  இந்த மீனவர்கள் முதல் நாளும்மாசிமகத்தன்றும் மறு நாளும் கடலுக்கு மீன் பீடிக்க செல்வதில்லைபுலால் உணவு உண்பதையும் தவிர்க்கின்றனர்பெருமாள் தங்கள் சேரிக்குள் நுழையும் போதுஅந்த மீனவக்குலப்  பெண்கள் நேராக வந்து வணங்குவதில்லைமருமகனுக்கு முன்னால்  வந்து பெண்கள் நிற்கக் கூடாது என்பது மரபாம்மீனவர்களுக்கு  அதாவது பெண்  வீட்டாருக்கு வெற்றிலைபாக்கு துளசி மாலை  ஆகியவற்றுடன் பத்து தோசைகளும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. இத்தலத்தில் வருடத்தில் ஒரு நாள்  இந்த மீனவர் குலத்தினருக்காக ஆண்டுக்கொரு முறை விசேஷ பூஜைகள் ஆராதணைகள் செய்யப்படுகின்றன.  

ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் தங்கள் இல்லங்களில் பணியாளாக இருந்து, தங்கள் இனத்தை சார்ந்த பத்மாவதி என்ற இராஜ குமாரியை விரும்பி  திருமணம் செய்துதன்னோடு அழைத்துச் சென்றதாக ஒரு கர்ண  பரம்பரை கதையை சொல்லி இவர்கள் மகிழ்கின்றனர்.


தீர்த்தவாரி முடிந்து திருமலைராயன் பட்டினம்
 திரும்புகின்றனர் 




கீழைக் கடற்கரைக்கு செல்ல திருமலைராயன் பட்டினம் கிராமத்தில்  இருந்து சுமார் 2 கி.மீ தூரம் வயல்வெளிகளில் நடந்து செல்ல வேண்டும். அறுவடை முடிந்த பின் வெற்றாக இருக்கும் நிலத்தின் வரப்பில் நடந்து  செல்வதே ஒரு தனி அனுபவம்ஆயிரக்கணக்கான பக்தர்கள்  குடும்பத்தினருடன் அனைத்து பெருமாள்களையும் காண செல்லுவதை  காண்பதே ஒரு   பரவசம்


கடற்கரையில் மீன் வலைப்பந்தலில்  தங்க கருட வாகனத்தில் சௌரி  கிரீடத்துடன் சவுரிராஜப்பெருமாளை

இல்லையலல் எனக்கேல் இனியென்குறை
அல்லி மாதரமரும் திருமார்பினன்
கல்லிலேயந்த மதில்சூழ் திருக்கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாரவே.

என்று நம்மாழ்வாரின் பாசுரம் சேவித்து கத்தும் கடற் கரையில்உப்பு  காற்றின்  மணத்தில் மணலில் நடந்து தோளுக்கினியானில் மற்ற  பெருமாள்களையும் கருட வாகனத்தில் திருமாமகள் தன் கேள்வன், நினைத்ததை   நிறைவேற்றும்   பேராற்றல்   பெற்றவன், தாயெடுத்த  கோலுக்கு   உளைந்தோடி   அத்தயிருண்ட வாய் தொடைத்த மைந்தன்கண்டவர் தம் மனம்   வழங்கும் கண்ணபுரத்தாம்மான்கிருஷ்ணண்கண்ணபுரத்து   அமுதன்,  வைகுந்தம் வழங்குபவன், காவிரி நல் நதி பாயும்  கண்ணபுரத்து   என்   கண்மணி, சௌரிப்பெருமாளை  சேவிப்பதே ஒரு   அற்புத   பரவசம். அவசியம் சென்று சேவியுங்கள் அதை எப்போதும்   மறக்கமாட்டீர்கள்.   




தமிழகத்தை சுனாமி தாக்கிய வருடம்   இந்த விழா தடைப்பட்டதுஇவ்வளவு தூரம் பெருமாள் சென்று  வர வேண்டுமாஎன்று ஒரு வாதம் எழுந்து இவ்விழா நின்று விடும் நிலை ஏற்பட்டபோது இந்த பரதவ குல மக்கள் முடியாது தங்கள் மாப்பிள்ளை தங்கள் ஊருக்கு வந்து தான் ஆக வேண்டும் என்றும் அதற்காக எந்த சிரமமானாலும் தாங்கள் ஏற்றுக் கொள்ள சித்தமாக இருப்பதாக கூறியதால் இன்றும் பெருமாள் மாசி மகத்தன்று திருமலைராயன் பட்டினம் எழுந்தருளி அந்த எளிய பக்தர்களுக்கு சேவை  சாதித்து அருளுகின்றார். வாய்ப்புக்கிடைத்தால் மாமியார் வீட்டிற்கு கருட வாகனத்தில் வரும் எளிமையானவரை சென்று சேவித்து அருள்பெறுங்கள். 

புகைப்படங்கள்: பொன். மனோகரன், காரைக்கால்


சில புகைப்படங்கள் Anudinam.org வலைதலத்தில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.