Wednesday, April 22, 2009

நீர்வண்ணர் கருடசேவை -1

இனி வரும் பதிவுகளில் நாம் காணப்போகும் கருடசேவை ஒரு திவ்யதேசப் பெருமாளின் கருடசேவைங்க. ஆமாங்க எந்த திவ்ய தேசம்ன்னு யோசிக்கறீங்களா? வேணா ஒரு க்ளு தரேன். திருமங்கையாழ்வார் இந்த திவ்ய தேச பெருமாளை தரிசிக்க வந்த போது இந்த திவ்யதேசத்தை சுற்றி ஒரே தண்ணீர்க் காடாக இருந்ததாம். எதிரே இருந்த மலையிலே ஆறு மாதம் தங்கியிருந்தாராம் தண்ணீர் வடிய பரகாலன், இவ்வளவு தண்ணீர் இருந்த ஊரா? காவேரி பாயற சோழ நாட்டு திவ்ய தேசமோன்னு நினைக்கறீங்களா? பெருமாளை சேவிச்ச்சுட்டு வாங்க அது எந்த திவ்ய தேசன்னு சொல்லறேன்.

 

என்னங்க அழகா இருக்காரா பெருமாள், சௌந்தரராஜன் ஆச்சே எம்பெருமான் அழகா இருக்காமலா இருப்பார். பெருமாள் சேவை ஆச்சே எந்த திவ்ய தேசம்ன்னு தெரிஞ்சுதா? இல்லையா? சரி நானே சொல்லிடறேன். இத்திவ்ய தேசம் சோழநாட்டு திவ்யதேசம் இல்லீங்க, தொண்டை நாட்டு திவ்ய தேசங்க, என்னங்க வெய்யில்ல எதாவது ஆயிருச்சான்னு யோசிக்கறீங்களா? தண்ணீர் பஞ்சத்தை அவ்வப்போது சந்திக்கிற சென்னைக்கு அருகில் உள்ள திருநீர் மலை தாங்க இந்த திவ்ய தேசம்.



திருமங்கையாழ்வார் காலத்தில் சென்னையில் இவ்வளவு மக்கள் தொகையும் இல்லை அதனால் தண்ணீருக்கும் ஒன்றும் குறைவில்லாமலேயே இருந்தது. வள்ளலார் சுவாமிகள் கூவம் ஆற்றில் குளித்துள்ளார் என்றும் படித்துள்ளேன் இன்று தான் நிலைமை இவ்வாறு மாறி விட்டது. சரீங்க இனி இத்திவ்ய தேசத்தின் மற்ற பெருமைகளையும் நீர் வண்ணரின் கருட சேவையை அடுத்த பதிவுலேயும் பார்ப்போமா?



அக்காலத்தில் பெருமாளை தரிசிக்க திருமங்கை மன்னன் தங்கிய ஊர் திருமங்கையாழ்வார்புரம் என்று அழைக்கப்படுகின்றது.. பெருமாளின் அழகில் மிகவும் ஈடுபட்ட திருமங்கை மன்னன் 19 பாசுரங்கள் பாடியுள்ளார் அந்த நீர்வண்ணரின் சௌந்தர்யத்தை தாங்களும் கண்டு களியுங்கள். அதுவும் தன்னை பரகாலநாயகியாக பாவித்து



நீர்வண்ணன் நீர் மலைக்கே போவேனென்றும்


வருநல்தொல்கதி ஆகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர்மலை


அலங்கெழு தடக்கை ஆயன்வாயாம்பற்கு
அழியுமால் என்னுள்ளம் என்னும்
புழங்கெழு பொருநீப்புட்குழிபாடும்
போதுமோ நீர்மலைக்கு? என்னும்


அருவிசோர் வேங்கடம் நீர்மலை யென்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவியிருக்கிறாள்….



மாலிருஞ்சோலைமணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்
நீர்மலையார் கொல்


என்று நீர்வண்ணப்பெருமாளின் சௌந்தர்யத்தில் திளைத்து பாடுகின்றார்
மங்கை மன்னர்,

எந்தப்பக்கம் இருந்து பார்த்தாலும் எவ்வளவு எழிலாக காட்சி தருகின்றார் எம்பெருமாள். காணக் காண திகட்டாத அழகு என்பதால் தானோ ஆழ்வார்கள் பெருமாளை ஆராவமுதன் என்று பாடிப்பரவுகின்றனர். 


மேலும் சிறிய திருமடலில்


ஆராமம் சூழ்ந்த அரங்கம் – கணமங்கை
காரார்மணிக் கண்ணணூர் விண்ணகரம்
சீரார் கணபுரம் சேறை திருவழுந்தூர்
காரார் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏரார் பொழில்சூழ் இடவெந்தை நீர்மலை
சீராரும் மாலிருஞ்சோலை திருமோகூர்
என்று எம்பெருமானின் இருப்பிடங்களை பட்டியலிடுகின்றார் திருமங்கையாழ்வார்.

பெரிய திருமடலில்

நீர்மலை மேல் மன்னுமறை நான்குமானானை
புல்லாணித் தென்னன் தமிழை....

என்று கொண்டாடுகின்றார் குமுதவல்லி மணாளர்.



மேலும் முதலாழ்வாரான பூதத்தாழ்வார் இத்திவ்விய தேசத்தை

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள்- பயின்றது
அணி திகழுஞ் சோலை அணிநீர்மலையே
மணித்திகழும் வண்தடக்கைமால்

என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.

வால்மீகி முனிவருக்காக ஹனுமனாக சேவை சாதித்த கருடன்.

என்னங்க வெறும் பெருமாள் சேவை மட்டும்தானா எங்கறீங்களா? சற்று பொறுங்க அடுத்த பதிவுவரை.
நீர்வண்ணர் கருட சேவை தொடரும் .......

No comments: