Monday, January 28, 2008

மோக்ஷமளிக்கும் கருட சேவை

மஹா விஷ்ணுவிற்கு வாகனமாகவும் கொடியாகவும் விளங்குவது கருடன். புள்ளரையன், பக்ஷி ராஜன், நாகப் பகையோன், சுபர்ணன் என்றெல்லாம் அழைக்கப்படும் கருடன் திருவைகுந்தத்தில் எப்போதும் எம்பெருமானுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ஒரு நித்ய சூரி. எம்பெருமானை தாங்குவதில் முதன்மையானாவ்ர் எனவே வைணவ சம்பிரதாயத்தில் இவர் பெரிய திருவடி என்றழைக்கப்படுகின்றார். மனித முகத்துடன், பெரிய மீசையுடனும், கருடன் போன்ற அலகுடனும், உடல் முழுவதும் எட்டு நாகங்கள் ஆபரணமாக தரித்து , ஒரு காலை முழங்காலிட்டு மடித்தும் மற்றோரு காலை ஊன்றி அமர்ந்த நிலையில் , இரு கரங்களையும் எம்பெருமானின் திருப்பாதங்களைத் தாங்குவதற்காக நீட்டி பெரிய இறக்கைகளுடன் கருடாழ்வாரின் அழகே ஒரு அழகு.

கருடன் மங்கள வடிவினன், வானத்தில் கருடன் வட்டமிடுவதைப் பார்த்தால் சிறந்த சகுனம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. திருக்கோவில்களில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும் போது கருடன் வருவது ஒரு நல்ல அறிகுறி. திருமயிலையில் கும்பாபிஷேகத்தின் போது ஒரு தடவை கருடன் வந்து வட்டமிட்டதை அடியேன் தரிசித்துள்ளேன். பதினென் புராணங்களுள் ஒன்று கருட புராணம், நீதி விளக்கம், தண்டனைகள், மற்றும் திருத்த்ங்களைப் பற்றியும், மரணத்திற்க்குப்பின் ஆத்மாவின் பிரயாணத்தைப் பற்றியும் கருட புராணம் விளக்குகின்றது, சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாள் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீ வில்லிபுத்தூரில் இரங்கமன்னார், ஸ்ரீ ஆண்டாளுடன் ஏக சிம்மாதனத்தில் எழுந்தருளுகிறார் கருடன். தேரழுந்தூர் திவ்ய தேசத்தில் எம்பெருமானுடன் கர்ப்பகிரகத்தில் எழுந்தருளுகிறார் கருடன். எம்பெருமானை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம், மேலும் கருட சேவை இவ்வுலகில் ஜீவாத்மாக்களின் மும்மலத்தை போக்கும் இத்தகைய சிறப்புகள் பெற்ற கருட சேவையை எம்பெருமான் தந்தருளியதை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. ஒவ்வொரு பதிவிலும் ஒரு ஆலயத்தின் கருட சேவையும், அது தொடர்பான செய்திகளும் , கருடனைப் பற்றிய ஒரு பாசுரம் கருடனின் மற்ற சிறப்புகளையும் காணலாம் வாருங்கள் கை கூப்பி அழைக்கின்றேன்.

2 comments:

வடுவூர் குமார் said...

சிங்கை அருப்பொருள் காட்சியகத்தில் நுழையும் போதே கருடனின் சிலையை வைத்திருப்பார்கள்,நீங்கள் போட்டுள்ள படத்தில் உள்ள மாதிரியே இருக்கும்.

S.Muruganandam said...

தகவலுக்கு நன்றி வடுவூர் குமார் அவ்ர்களே.