Sunday, December 29, 2013

ஸ்ரீவைகுண்டம் கள்ளர் பிரான் கருட சேவை


ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -6




இத்தலம் திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 28 கி.மீ தொலைவிலும்ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ  தொலைவிலும் தாமிரபரணியாற்றின் வடகரையில் உள்ளது.

மூலவர் : வைகுந்த நாதன், நின்ற திருக்கோலம், கிழக்குப் பார்த்த திருமுக மண்டலம்.
உற்சவர்: கள்ளர் பிரான் (சோர நாதர்)
தாயார் : வைகுந்த வல்லி, கள்ளர்பிரான் நாச்சியார்( தாயார்களுக்கு தனித்தனி சன்னதி)
விமானம்: சந்திர விமானம்
தீர்த்தம் : தாமிரபரணி,பிருகு தீர்த்தம், கலச தீர்த்தம்
தல விருட்சம்: பவள மல்லி  
பிரத்யட்சம் : பிரம்மா, இந்திரன் , பிருகு  சக்ரவர்த்தி
ஆகமம் : பஞ்சராத்ரம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம் : நம்மாழ்வார் 
கிரகம்: சூரியஸ்தலம்



பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 81 வது திவ்ய தேசம். நவதிருப்பதிகளில் முதலாவதாகவும்நவகிரக ஸ்தலங்களில் சூரிய ஸ்தலமாகவும் இந்த ஸ்ரீ கள்ளபிரான் திருக்கோயில் அமைந்துள்ளதுஸ்ரீ கள்ளபிரான் சுவாமி சந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்நான்கு புஜங்களுடன், கையில் தண்டத்துடன்ஆதி சேஷனைக் குடையாகக்  மார்பில் மஹா லக்ஷ்மியுடன்  நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்பிரகாரத்தில் வைகுந்தவல்லித் தாயார் சன்னதி உள்ளதுமேலும் நரசிம்மர் சன்னிதிகோதண்ட ராமர் சன்னிதியும் உள்ளன. சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில்பௌர்ணமி நாளன்றுசூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் படும்படிஇதற்கு ஏற்றாற் போல் சுவாமி சன்னதி எதிரிலுள்ள கொடி மரம்மேரு வடிவ  பலிபீடம் தென்புறம் விலகியிருக்கிறது.  இத்தலம் சூரிய தோஷ பரிகார ஸ்தலம் ஆகும். ஆதித்ய ஹ்ருதயம் சேவிக்க அருமையான பலன் உண்டு. 



கள்ளர்பிரான் கருடசேவை

இரண்டு திருவாசிகளும் மற்றும் கருடாழ்வாருக்கும் முழுதும் மலர் மாலை அலங்காரமும் இங்கு மட்டுமே சேவிக்க கிட்டியது. ஒவ்வொரு பெருமாளுக்கும் ஒரு சிறப்பு அலங்காரம்  காணக்கண் கோடி வேண்டும். 


தல வரலாறு: முன்பு ஒரு சமயம் சத்யலோகத்தில் பிரளயம் ஏற்பட்டது. அப்போது அயன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். அதையறிந்த கோமுகசுரன், அவரிடமிருந்து வேதங்களை அபகரித்து சென்றான். துயில் நீங்கி எழுந்த பிரம்மன் அதற்காக வருந்தி, அதனை அவனிடமிருந்து மீட்கும் பொருட்டு மஹாவிஷ்ணுவைக் குறித்து தவம் செய்ய எண்ணி,  தன் கையிலிருந்த தண்டத்தை ஒரு பிரம்மாச்சாரியாக மாற்றி ”பூவுலகில் தாமிரபரணி நதிக்கரையில்   தவம் புரிய ஒரு இடத்தை பார்த்து வா” என்று அனுப்பினார். அவனும் நதியின் இரு கரையிலும் பார்த்து விட்டு இறுதியாக திருக்கோளுருக்கு அருகில் உள்ள ஜயந்திபுரிக்கு வந்தான். அங்கு ஒரு மோகினியைக் கண்டு மோகித்து அவளுடன் காலம் கழித்து நான்முகன் கட்டளையை மறந்தான்.

இதையறிந்த சதுர்முகன் தன் கையிலிருந்த  கெண்டியை ஓர் பெண்ணாக்கி “ பெண்ணே! தவம் இயற்ற தாமிரபரணி நதிக்கரையில் ஒரு நல்ல இடம் பார்த்து வா” என்று அனுப்பினார்.  அவளும் வெகு நாள் பூவுலகில் சுற்றி  சோலைகள் நிறைந்த இந்த பரமபாவனமான இடமே தவத்திற்குரியது என்று பிரம்மனிடம் தெரிவித்தாள்.  பிரம்மனும் இங்குவந்து கடும் தவம் செய்ய, திருமால் அதற்கு இரங்கி சதுர்முகனுக்கு நேரில் காட்சி கொடுத்து, கோமுகாசுரனை முடித்து அவனிடமிருந்த வேதங்களை மீட்டு பிரம்மனிடம் அளித்தார்.
பிரமனும் “அகல் விசும்பும் நிலனும் இருளார் வினைகெட செங்கோல் நடாத்துவீர்” எப்படி வைகுந்தத்திலிருந்து இங்கு எழுந்தருளி சேவை சாதித்தீரோ அவ்வண்ணமே இங்கு எப்பொழுதும் சேவை சாதித்து அடியார்களின் “செடியாய வல்வினைகளை தீர்த்து அருள் புரிய   வேண்டும்”  இத்திருப்பதியும் ஸ்ரீ வைகுண்டம் என்ற திருநாமத்துடன் விளங்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய, பெருமாளும் அவ்வாறே இங்கு கோயில் கொண்டார். பிரமனும் தனது கெண்டியால் தாமிரபரணி தீர்த்தத்தை எடுத்து  பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்ததாலும், நதிக்கரையில் கலசத்தை ஸ்தாபித்ததாலும், இத்தீர்த்தம் “ கலச தீர்த்தம்” என்று வழங்கப்படுகின்றது. பிரமன் வைகுண்ட நாதருக்கு சைத்ர உற்சவம் நடத்தி பின் சத்திய லோகம் சென்றார்.


காய்சின பறவையில் கள்ளர்பிரான் 


வைகுந்தநாதன் சோரநாதன் ஆன வரலாறு: இத்தலத்தில் காலதூஷகன் என்ற கள்வன் ஒருவன் இருந்தான். அவன் திருடச்செல்லும் போது வைகுந்த நாதரிடம், தேவா! நான் எவ்விடத்தில் திருடச்சென்றாலும்  ஒருவரும் அறியாவண்ணம் திருடிவர வேண்டும். அவ்வாறு திருடிய பணத்தில் பாதியை உமக்கு காணிக்கையாகத் தருவேன் என்று வணங்கிச் செல்வான். குறுகிய காலத்தில் ஏராளமான செல்வத்தை கொள்ளை அடித்தான், தான் கூறியது போலவே அதில் பாதியை பெருமாளுக்கு காணிக்கையாக்கி வந்தான்.

ஒரு நாள் அரசன் அரண்மனையில் திருடும் போது அவனது சில சகாக்கள் அரச சேவகர்களிடம் மாட்டிக்கொண்டனர். அவர்கள் அரச தண்டனைக்கு பயந்து காலதூஷகனை காட்டிக்கொடுத்து விடுவதாக கூற அவனும் பகவானை சரணடைந்து  துதி செய்ய, கருணைக் கடலான கார்முகில் வண்ணரும் வயது முதிர்ந்த வேடத்தில் வந்து அப்பா நீ அஞ்ச வேண்டாம் தஞ்சமென்றவரை ஆதரிப்பது என் கடமை என்றார்.    

பிறகு பகவான் கால்தூஷகனாக வடிவெடுத்து அரண்மனைக்கு செல்ல வழியில் திருடர்கள் இவரை நோக்கி இவனே எங்கள் தலைவன் என்று கூற சேவகர்கள் அவரை அரண்மனைக்கு  அழைத்து சென்று அரசன் முன்னர் நிறுத்தினர். மன்னனும் நீ யார்? நீ இருப்பது எவ்விடம்? எதற்காக அரண்மனையில் புகுந்து கொள்ளையடித்தாய்? என்று வினவினான். அது கண்ட வைகுந்தநாதனாக இருந்து சோரநாதனான, காலதூஷகனான பெருமாள் அரசே! என் பெயர் கள்ளர் பிரான், ஸ்ரீவைகுண்டம் எனது இருப்பிடம், என் பிழைப்புக்காக உன் பணம் முழுவதையும் திருடினேன். உன் குற்றத்தை நீ தெரிந்து கொள்ளவில்லை பணத்திற்கு பங்காளிகள் நால்வர். அவர்கள் தர்மம், அக்னி, திருடன், ராஜா. இவற்றில் முந்தியது தருமம், தருமம் செய்யப்படாத செல்வம் கள்வனாகிய  என்னால் அபகரிக்கப்பட்டது. எனவே இனி தர்மம் செய்வாய் என்றார்.



அது கேட்ட அரசனும் சிங்காதனத்திலிருந்து எழுந்து  நமக்கு நற்புத்தி புகட்டியவர் பகவானே என்று தீர்மானித்து வைகுந்த நாதா! கள்ளர் பிரானே! இன்று முதல் தாங்கள்  சோரநாதன் (கள்ளர் பிரான்) என்ற திருநாமத்துடன் எழுந்தருளியிருத்தல் வேண்டும் என்று விண்ணப்பித்தான். அது முதல் உற்சவர் கள்ளர்பிரான் என்று வழிபடப்படுகின்றார். 





பால் திருமஞ்சனம்:
தென்னகத்தில் குறிப்பாக மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் பால்பாண்டி என்ற பெயரை மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டும் வழக்கம் உள்ளது. இது இத்தலத்து பெருமாளின் பெயராகும். பூவுலகில் ஸ்ரீவைகுண்டபதி பிரமன் தவத்திற்கு மகிழ்ந்து அர்ச்சா மூர்த்தியாக எழுந்தருளிய பிறகு அந்த சிறிய சன்னதியும்  மூர்த்தியும் பூமியில் புதையுண்டன.  பின்னர் பாண்டிய மன்னர் காலத்தில்,  இங்கு மேய்ச்சலுக்கு வந்த அரண்மனை பசு, தொடர்ச்சியாக இங்கிருந்த புற்றில் பால் சுரந்தது. இதையறிந்து வந்த பாண்டிய மன்னன், அவ்விடத்தில் சுவாமி சிலை இருந்ததைக் கண்டு  வெகு ஆனந்தம் கொண்டு ஆச்சரியமான பெரிய கோயில் எழுப்பினான். அன்றிலிருந்து தினமும் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து பூஜித்தான். இதனடிப்படையில் தற்போதும் தினமும் காலையில் இவருக்கு பால் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது. பாண்டியன் பால் அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்தமையால் இந்த சுவாமிக்கும் "பால்பாண்டி' என்ற பெயர் ஏற்பட்டது.

நம்மாழ்வார் பெருமாளை இரு பாடல்களால் வைப்புத்தலமாக  மங்களாசாசனம் செய்துள்ளார். அவையாவன

புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று
தெளிந்தவென்சிந்தையகங்கழியாதே என்னையாள்வாய்! எனக்கருளி
நளிர்ந்தசீருலகமூன்றுடன்வியப்ப நாங்கள்கூத்தாடிநின்றார்ப்ப
பளிங்குநீர்முகிலின்பவளம்போல்கனிவாய் சிவப்ப நீகாண வாராயே

ஆச்சாரியாரின் அழகிய விளக்கம்: நம்மாழ்வார் தனது பாசசுரத்தில் "புளிங்குடி கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்தில் நின்று" என்று மங்களாசாசனம் செய்துள்ளார். "பசியாக இருக்கும் ஒருவர்  சமையல் முடியும்வரையில் படுத்திருந்து காத்திருப்பார். பசி கூடும்போது, ஆர்வத்தில் எழுந்து அமர்ந்து கொள்வார். சமையல் முடிய இன்னும் தாம்தமானால் பொறுமையிழந்து எழுந்து நிற்பார். இதைப்போலவே நம்மாழ்வாருக்கு அருளவந்த பெருமாள், அவர் பக்தியில் உயர்நிலை அதையும் வரையில் முதலில் புளியங்குடியில் கிடந்தும் (பள்ளி கொண்ட கோலம்), பின் வரகுணமங்கையில் அமர்ந்தும், இந்த ஸ்ரீவைகுண்டத்தில் நின்றும் சேவை சாதிக்கின்றார்" என்று வைணவ ஆச்சாரியாரான அழகிய மணவாளப்பெருமான், நம்மாழ்வாரின் இந்த பாசுரத்திற்கு  வியாக்கியானம் செய்துள்ளார்.     

எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம் இணைஅடி தொழுது எழுந்து இறைஞ்சி
தங்கள் அன்பு ஆர தமது சொல் வலத்தால் தலை தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப்புளிங்குடியாய்! திருவைகுந்துள்ளாய்! தேவா!
இங்கண் மா ஞாலத்து இதனுளும் ஒரு நாள் இருந்திடாய்- வீற்று இடம் கொண்டே.(3575)

எங்கள் முன்னால் கண்ணுக்குத் தெரியும்படி உலகத்தவர் அனைவரும் உன் இணையார் திருவடிகளைத் தொழுதபடியும் பின் எழுந்தபடியும் வணங்கி உன்னைத் துதிக்கிறார்கள். அவர்கள் மிகுந்த பக்தியுடன் தத்தம் வார்த்தைகளால் உன்னைப் போற்றி வழிபடுகிறார்கள். இப்படிப்பட்ட மேன்மையுடைய நீ, சந்திரனைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ள மாடங்கள் நிறைந்த திருப்புளிங்குடியில் பள்ளி கொண்டுள்ளாய். நீயே ஸ்ரீவைகுண்டத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றாய். நீயே ஸ்ரீவைகுண்டத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றாய். தேவனே!  அகன்ற இந்த உலகத்தில், பரமபதத்தைப் போலவே இத்திருப்புளிங்குடியிலும் ஒரு நாள் வீற்றிருந்த திருக்கோலத்தில் எங்களுக்குக் காட்சி தர வேண்டும். 

மதுரகவியாழ்வார் 

நம்மாழ்வார் மங்களாசாசனம்: சித்திரை பெருந்திருவிழாவின் போது நம்மாழ்வார், பொலிந்து நின்ற பெருமாளுடன் ஸ்ரீவைகுண்டம் எழுந்தருளுவார். பெருமாளை மங்களாசாசனம் செய்தபின் அன்ன வாகனத்தில் எழுந்தருளும் சடகோபருக்கு கள்ளபிரான், பொலிந்து நின்ற பிரான், வரகுண மங்கை எம் இடர் கடிவான், திருப்புளிங்குடி காய்சினவேந்தன் ஆகிய நான்கு பெருமாள்களும் கருட வாகனத்தில் சேவை சாதிக்கின்றனர்.  



108 திவ்ய தேச சேவை: 
தை மாதம் முதல் நாள் அன்று கள்ளபிரானை 108 போர்வைகளால் போர்த்தி கொடி மரத்தை சுற்றி வந்த பின் பூஜை செய்து ஒவ்வொரு போர்வையாக களைகின்றனர். அன்றைய தினம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108  திவ்யதேசத்து எம்பெருமான்களாக கள்ளபிரான் சேவை சாதிப்பதாக ஐதீகம்.



ஆச்சரியப்பட வைக்கும் சிற்பங்கள்: பாண்டி நாட்டு திருக்கோயில்களின் சிறப்ப்பம்சமே உலகமே வியந்து போற்றும் சிற்பங்கள் ஆகும். இந்த ஸ்ரீவைகுண்டம் கோவிலும் அதற்கு விதிவிலக்கல்ல. 9 நிலைகளும் 110  அடி உயரமும் கொண்டுள்ள இராஜ கோபுரத்தில் அற்புதமான பல சுதை சிற்பங்கள் உள்ளன. இக்கோவிலின் திருவேங்கடமுடையான் சன்னதியில் நாயக்கர் காலத்தை சார்ந்த அற்புதமான கற்சிற்பங்கள் உள்ளன. அவை அனைவரது கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.  குறிப்பாக ஆதிசேஷனை குடையாகக் கொண்டு அமர்ந்த கோலத்தில் உபய நாச்சியார்களுடன் காட்சி தரும் வைகுண்ட பெருமாள் சிற்பம், மூன்று உலகங்களும் தன்னுள் அடக்கம் என்று உணர்த்தும்  அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த பெருமாள் சிற்பம், அன்பிற்கும்  உண்டோ அடைக்கும் தாழ்  என்பதை உணர்த்தும் இராமர், அனுமன் சிற்பம்,




 கணவனின் காலில் இருந்து முள்ளுடன் சேர்த்து வலியையும் எடுக்கும் மனைவி, யாழியின் வாலுக்குள்ளே ஆஞ்சநேயர், பலவித கோலங்களில் வானரங்கள் என ஆயிரம் கதை சொல்லும் சிற்பங்கள் அனைத்தும் தத்ரூபம்.  இனி வரும் பதிவில் திருப்புளிங்குடி காய்சின வேந்தரின் கருடசேவையைக் காணலாம் அன்பர்களே. 


No comments: