Friday, October 2, 2015

கருட யாத்திரை - 10

சிறு புலியூர் சலச்சயனம் 




கருடனும் அனந்தனும் மாற்றாந்தாய் மக்கள், பெருமாளுக்கு பரமபதத்தில் கைங்கர்யம் செய்யும் நித்ய சூரிகள் ஆயினும் பகைவர்கள்.  இந்த சிறுபுலியூர் திவ்ய தேசத்தின் தல வரலாறு இந்த  கருட நாக பகைமையை அடிப்படையாக் கொண்டதேஇத்தலத்தைப் பற்றிய வரலாறு கருட புராணத்தில் பேசப்படுகிறது. பகவான் ஸ்ரீமந் நாராயணனை சயனத்தில் தாம் தாங்குவதாக ஆதிசேஷனுக்கும், எல்லா இடங்களிலும் அவரைச் சுமந்து செல்வதாக கருடனுக்கும் கர்வம் ஏற்பட்டது. இருவரும் இரு வேறு காலத்தே தாமே பகவானைத் தாங்குவதாக எண்ணம் கொண்டனர். விளைவு,  இருவருக்கும் போட்டியும் வெறுப்பும் வளர்ந்து பகையாக மாறியது. ஆதிசேஷன் இந்தப் பகை விலக எண்ணம் கொண்டு தவமிருந்தார். அவர் தவத்துக்கு இரங்கி மாசி மாதம் வளர்பிறை ஏகாதசி தினத்தன்று அவருக்கு சேவை சாதித்த  பெருமாள், ஆதிசேஷன் மடியில் அனந்த சயனம் கொண்டு சிறு குழந்தையாக பாலசயனக் கோலத்தில் கோயில் கொண்டார். அதாவது, பாற்கடலில் மிதக்கும் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கும் கோலம். கருடனுக்கு அபயமளித்த தலம். எனவே இத்தலத்தில்   உயரத்தில்   ஆதிசேடனுக்கும்  பூமிக்கு கீழ் கருடனுக்கும் சன்னதி அமைந்துள்ளது.   கருடா சௌக்கியமா? என்று கேட்டதற்கு அவரவர்கள் இருக்கவேண்டிய இடத்தில் இருந்தால் சௌக்கியம் என்று சொல்லப்பட்ட ஸ்தலம்.

 சலசயனம், பால வியாக்ரபுரம்,  என்றும் அழைக்கப்படுகின்றது. சல சயனன் -என்றது அது அவனுக்குத் திரு நாமமாய் ஜல சயனன் வர்த்திக்கிற இடம் சல சயனம் என்று ஊருக்கு பெயராகிறது  என்பது வியாக்கியான சக்ரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை அவர்களின் வியாக்கியானம்   திருநாகையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் இத்தலம் அமைந்துள்ளது. அடியோங்கள் வேறு வழியாக சென்றோம் எனவே இந்த யாத்திரையின் போது இத்தலம் செல்லவில்லை. படங்கள் முன்னர் ஒரு யாத்திரையின் போது எடுத்தவை. கருடனுடன் தொடர்புடைய தலம் என்பதால் இந்த யாத்திரையில் சேவிக்கலாம் என்பதால் இனைத்துள்ளேன்.

ஏழு நிலை இராஜகோபுரம் (உட்புறம்)


னி இத்தலம் சிறுபுலியூர் என்று ஏன் அழைக்கப்படுகின்றது என்பதைக் காணலாமா அன்பர்களே.  வியக்கிரபாதர் என்னும் முனிவர் சிதம்பரத்தில் தவமியற்றி தனக்கு மோட்சம் வேண்டுமென்று நடராஜரிடம் கேட்க, மோட்சம் கொடுக்க வல்லவர்மகாவிஷ்ணுவே என்று நடராஜர் கூற, அவ்வாறாயின் அதற்குரிய ஸ்தலத்தை எனக்கு காண்பியும் என்று முனிவர் வேண்ட நடராஜர் சிவலிங்க ரூபமாக வழிகாட்ட அவரை விரைந்து பின்பற்றுவதற்கு தாம் பெற்ற வலிமையால் விரைந்து செல்லும் புலியின் கால்களால் இத்தலத்திற்கு வந்து சேர்ந்து முக்திபெற்றதால் இதற்குச் சிறுபுலியூர் என பெயர் வந்ததென்பர். 

இரண்டாம்  சுற்று  கோபுரம் 

பெருமாள் தரிசனமும் கண்டபோது அந்த பிரமாண்ட தோற்றம் பார்த்து விக்கித்துப்  போனார்  வியாக்ரபாத முனிவர். இரண்டு கண்களுக்குள்ளும் விரித்த இரு கரங்களுக்குள்ளும் அடங்காத அந்தப் பரம்பொருளை எப்படி முழுமையாகக் கண்களால்  காண முடியும், எப்படி கரங்களால் தீண்டி இன்புற முடியும் என்று திகைத்துப் போனார் அவர். ஆமாம், திருவனந்தபுரம் திவ்ய தேசத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளை மூன்று வாசல்கள் வழியாக, தனித்தனியாக சிரம், நாபி, பாதம் என்று தரிசிப்பதுபோல நெடிய தோற்றம்! அவருடைய  தர்மசங்கடத்தைப் பார்த்த பெருமாள் அவருக்கு அருள் வழங்கும் வண்ணம் தன்னை அப்படியே சுருக்கிக் கொண்டார். புலியாருக்காக இப்படி சிறுவடிவினனாகப் பெருமாள் மாறியதாலும் இத்தலம் சிறுபுலியூர் என்று வழங்கப்பட்டிருக்கலாம். இந்தச் சிறு கோலத்திலும் இவர் தன் நாபிக் கமலத்தில் பிரம்மனைத் தாங்கியிருக்கிறார். திருவடிகளுக்கு அருகே ஸ்ரீதேவி-பூதேவியரோடு சிறு வடிவில் புலிக்கால் முனிவரும்  கன்வ முனிவரும் காட்சி தருகிறார்கள்.  இவர்களுக்கும் இங்கு வழிபாடுகள் நடக்கின்றன.

கள்ளம்மனம்விள்ளும்வகை கர்ருதிக்கழல்தொழுவீர்
வெள்ளம்முதுபரவைத் திரைவிரிய கரையெங்கும்
தெள்ளும்மணிதிகழும் சிறுபுலியூர்ச்சலசயனத்
துள்ளும் எனதுள்ளத்துள்ளும் உறைவாரைஉள்ளீரே.  (பெ.தி  7-9-1)

பொருள்: மனத்திலிருந்து வஞ்சகச்செயல் விட்டு நீங்க வேண்டும் வகையை விரும்பி இருப்பவர்களே! கடலின் அலைகளால் உண்டான வெள்ளமானது கரைகளில் எல்லாம் பரவ அதனால் கொழிக்கப்பட்ட இரத்தினங்கள் விளங்கும் சிறுபுலியூரில் சலசயனம் என்னும் சன்னதியிலும், என்னுடைய உள்ளத்திலும் நித்திய வாசம் செய்யும் பெருமானை சிந்தனை செய்யுங்கள் என்று இத்தலத்தில் வாசம் செய்யும் பெருமாளே தன் உள்ளத்திலும் வாசம் செய்கின்றார் என்று மங்களாசானம் செய்த இச்சிறுபுலியூர் தலத்தின்  

மூலவர்:  சலசயனப் பெருமாள், தெற்கே திருமுக மண்டலம்,   புஜங்க சயனம். 

உற்சவர்:   கிருபா சமுத்திரப் பெருமாள் (அருள்மாகடல்)

தாயார்:      திருமாமகள் நாச்சியார்,

உற்சவர்:      தயாநாயகி

தீர்த்தம்:     மானச புஷ்கரிணி

விமானம்:     நந்தவர்த்தனம்

தல விருட்சம் : வில்வம் 

பிரத்யக்ஷம் :  வியாசர், வியாக்ர பாதர்.

ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பெற்ற 108 வைணவத் திருப்பதிகளுள் ஒன்றான இந்தக் கோயில், 11வது தலமாக இடம்பெற்றுள்ளது. பெருமாள் புஜங்க சயனத்தில் தெற்கு நோக்கிய திருக்கோலத்தில் காட்சி தருகிறார். 108 திவ்ய தேசங்களில் பெருமாள் சயனக் கோலத்தில் தெற்கு நோக்கிக் காட்சி தருவதாக அமைந்த தலங்கள் இரண்டுதான். முதல் தலமான ஸ்ரீரங்கத்தில் பெருமாள் மிகப் பெரிய வடிவினனாக அனந்த சயனத்தில் சேவை சாதிக்கின்றார். இரண்டாவது தலமான இங்கே பெருமாள் பால சயனத்தில் குழந்தை வடிவினனாகக் சேவை சாதிக்கின்றார்.



ஏற்கெனவே பிரமாண்ட எழிலுடையவராகப் பெருமாளை வேறு திவ்ய தேசங்களில் தரிசித்தவர்களுக்கு இந்தச் சிறு வடிவம் வித்தியாசமான தோற்றமாகப்படுவதில் ஆச்சரியமில்லை. ஆனால் இதே ‘ஏமாற்றம்’ திருமங்கையாழ்வாருக்கும் ஏற்பட்டது என்பது தான் குறிப்பிடத்தக்கது. புலிக்கால் முனிவருக்காக அவர் இப்படி குறுந்தோற்றம் கொண்டார் என்றாலும் தனக்கு அது திருப்தியளிக்கவில்லை என்பதால், ஏக்கமும் ஏமாற்றமும் கொண்டார் ஆழ்வார். உடனே இவரையும் சமாதானப்படுத்தும் நோக்கத்துடன், பெருமாள் அசரீரியாக, ‘நீ பார்க்க விரும்பும் வடிவை திருக்கண்ணமங்கை திருத்தலத்தில் காண்பாயாக’ என்று அருளிச் செய்தார். திருவனந்தபுரம் போல தலையை இடது ஓரத்துக்கும், வலது ஓரத்துக்குமாக அசைத்து தரிசிக்க  வேண்டிய அவசியம் போல, திருக்கண்ணமங்கையில் தலையை கீழிருந்து மேலாகக் கழுத்தை வளைத்துப் பார்க்க வேண்டிய அவசியம்! 

ஆண்டாள் சன்னதி 

பகவானின் அண்ணாந்த தரிசனத்துக்கு முன்னால் கழுத்து வலி தெரியுமா என்ன? திருக்கண்ணபுரத்தில் வேறு அமைப்பில், பிரமாண்டமாகத் தனக்கு தரிசனம் தர உத்தரவாதம் அளித்திருக்கும் பெருமாளின் கருணையில் நெகிழ்ந்து  இந்த திருச்சிறுபுலியூர் பெருமாளை உள்ளம் உருகி 

                      
கருமாமுகிலுருவா! கனலுருவா! புனலுருவா! 
பெருமால்வரையுருவா! பிறவுருவா!  நினதுருவா!
திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச்சலசயனத்து
அருமாகடலமுதே!  உனது அடியேசரணாமே.  (பெ.தி  7-9-9)

பொருள்: கரிய பெரிய மேக வண்ணனே! அன்பில்லாதார் அணுக முடியாதபடி நெருப்பைப் போலும் உருவமுடையவனே! நீர் போல குளிர்ந்த வடிவுடையவனே!  பெரிய மலை போன்றஉருவத்தை உடையவனே! மற்றுமுள்ள பொருள்களின் வடிவாக உள்ளவனே, அசாதரணமானவனே! திவ்விய மங்கள வடிவானவனே! பெரிய பிராட்டியார் பொருந்தி வாழும் சிறுபுலியூர்  சலசயனத்து அரிய கடலமுதம் போன்றவனே! உன்னுடைய திருவடிகளே அடியேனுக்கு புகலிடமாகும்  என்று அருமா கடலமுதே என்று பெருமாளையும், திருமாமகள் என்று தாயாரையும்  சிறுபுலியூர் சலச்சயனம் என்று தலத்தையும் ஒரே பாசுரத்தில்  மங்களாசாசனம் செய்திருக்கிறார் திருமங்கையாழ்வார்.

ஆண்டாள் சன்னதி   ஹனுமன் சன்னதி விமானங்கள் 

ஏழு நிலை  ராஜகோபுரத்துக்கு அடியிலேயே பால ஆஞ்சநேயர், பெருமாளின் பால சயனத் தோற்றத்துக்குக் கட்டியம் கூறுவது போல அமைந்துள்ளார். இடது பக்கம் ஆண்டாள் சந்நதி. இந்த ஆண்டாளுக்கு அருகில் பக்த அனுமன் விநயத்தோடு காட்சியளிக்கிறார். இவர்களுக்கு எதிரே யாகசாலையும் ஆழ்வார்கள் சந்நதியும் அமைந்துள்ளன. 

சிறு குழந்தை போல சல சயனத்தில் சேவை சாதிக்கும் மூலவரை தரிசித்துவிட்டு கருவறையை வலம் வந்தால், விநாயகரையும் அவர் முன் பலிபீடத்தையும் காணலாம்.  தொடர்ந்தால், ஒவ்வொரு திக்கை நோக்கியபடியும் அடுத்தடுத்து மஹாவிஷ்ணு விக்ரகங்கள் கோஷ்ட தெய்வங்களாகப் பரிமளிக்கின்றன.  கூடவே  விஷ்ணு துர்க்கை. தாயார் திருமாமகள் நாச்சியார் தனிச் சந்நதியில் அமர்ந்து அருள் பரிபாலிக்கிறார். இவரது உற்சவர் தயாநாயகி என்ற பெயரில் கருணையின்          மொத்த  உருவமாகத் திகழ்கிறார். பூமிக்குக் கீழே கருடன் தனி சந்நதியில் விளங்குகிறார். ஆதிசேஷனோ, ஆனந்த புஷ்கரணியின் கரையில் எழுந்தருளியிருக்கிறார்.  இவர் அனைத்து  வகையான நாக தோஷங்களையும் சர்ப்ப கிரகங்களால் ஏற்படும் பிரச்னைகளையும்  தீர்க்க வல்லவர்; மகப்பேறும் அருள்பவர். 


பெருமாள் இராஜகோபுரம் - மணவாள மாமுனிகள் இராஜகோபுரம்

கிழக்கு நோக்கி மணவாள மாமுனிக்கு மூன்று நிலை இராஜகோபுரத்துடன் தனி சன்னதி உள்ளது. பெருமாள் இராஜ கோபுரமும் ஆச்சார்யார் இராஜ கோபுரமும் அருகருகே இருக்கும் காட்சி அருமையாக உள்ளது. 


குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமான பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வருகிறார்கள். மாங்கல்ய தோஷம், காலசர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், பாலாரிஷ்ட தோஷம்,  திருமணத்தில் தடை, நவக்கிரக பரிகாரம் என, பல்வேறு தடை சிரமங்களைச் சந்திப்பவர்களுக்கு இந்தப் பெருமான் அருள்புரிந்து ஆறுதல் தருகின்றார் என்பது நம்பிக்கை. தீராத நோய், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும், இங்கே வந்து, சிறப்பு  வழிபாடுகளைச்  செய்து, நலம் பல பெற்றுச் செல்கின்றனர்..  அடுத்து  தேரழுந்தூரில் ஆமருவியப்பனையும் அவருடன் கருடனையும் சேவிக்கலாம் அன்பர்களே. 

     

No comments: