Wednesday, September 2, 2015

கருட யாத்திரை -3

கல் கருட சேவை 



அனைத்து ஆலயங்களிலும்  மரத்தால் அல்லது உலோகத்தால் ஆன வாகனத்தில் பெருமாள் சேவை சாதிப்பார். ஆனால் திருநறையூரின் சிறப்பு மூலவராக விளங்கும் கல் கருடனே வாகனமாக பெருமாளை தாங்கி வருவதுதான். வருடத்தில் இரு முறை இந்த கல் கருட சேவை நடைபெறுகின்றது.    வைகுண்ட ஏகாதசியை ஓட்டி  முப்பத்து முக்கோடி தெப்போற்சவமும், பங்குனி உத்திரத்தை ஒட்டி பிரம்மோற்சவமும் பெரு விழாவாக இத்தலத்தில் கொண்டாடப்படுகின்றது அந்த பெருவிழாவின் நான்காம் திருநாள் இரவு தாயார் அன்ன வாகனத்திலும்  பெருமாள் கல் கருடனிலும் சேவை சாதித்து அருளுகின்றனர்.

வாருங்கள் அன்பர்களே முன்னர் அடியேனின் நன்பர் சேவித்த கல் கருட சேவையை சேவிப்போம். இது ஒரு மீள் பதிவு.


  

                    திருமஞ்சனம் கண்டருளும் வஞ்சுளவல்லித்தாயார் சமேத ஸ்ரீநிவாசர்


கருட சேவையன்று பெருமாளும் தாயாரும் பகலில்  திருமஞ்சனம் கண்டருளுகின்றனர் அப்படங்களைக் கண்டீர்கள் அன்பர்களே.


புறப்பாட்டின் போது தாயார் தான் முன்னே செல்கின்றார், பெருமாள் பின்னே தொடர்கின்றார் மேதாவி முனிவருக்கு அன்று கொடுத்த வாக்கை காப்பற்ற வேண்டி. பெருமாள் இத்திவ்ய தேசத்தில் மற்ற உபய நாச்சிமார்கள் இல்லாமல் நீளா தேவி அம்சமான வஞ்சுளவல்லித் தாயாருடன் மட்டுமே சேவை சாதிக்கின்றார். எனவே முதலில் அன்ன வாகனத்தில் தாயார் புறப்பாடு கண்டருளும் அழகையும், தாயார் அன்ன வாகனத்திலும், பெருமாள் கல் கருடனிலும் ஒன்றாக சேவை சாதிக்கும் அழகையும் காணலாம்.



எழிலாக அன்ன வாகனத்தில் சேவை சாதிக்கும்
 வஞ்சுளவல்லித்தாயார்



அன்ன வாகனத்தில் தாயாரும்
 கல்கருட வாகனத்தில் பெருமாளும் சேவை




சன்னதியிலிருந்து கருட சேவைக்காக கல் கருடனை 
ஏழப்பண்ணிக்கொண்டு வரும் காட்சிகள்.

கருடனில் வந்து யானையின் துயரம் திருநறையூர் நம்பி தீர்த்த அழகை அவரிடம் பஞ்ச சமஸ்காரம் பெற்ற திருமங்கையாழ்வார் இவ்வாறு பாடுகின்றார்.

தூவாயபுள்ளுர்ந்துவந்து துறைவேழம்
மூவாமைநல்கி முதலை துணித்தானை
தேவாதிதேவனைச் செங்கமலக் கண்ணானை
 நாவாயுளானை நறையூரில்கண்டேனே.

ஆடும் புள்ளேறி பக்தர் துயர் தீர்க்க ஓடி வரும் பெருமாள்
(கருடன் திருமுகம் மிக அருகில்)




கல் கருட சேவையின் போது ஒரு அற்புதம் நடைபெறுகின்றது. அதாவது கருடனின் கனம் (எடை) அதிகமாகிக்கொண்டே போவதுதான். சன்னதியிலிருந்து வெளியே வரும்போது கருடனை நான்கு பேரால் ஏழப்பண்ண முடியும் அதுவே பிரகாரத்தை சுற்றி வரும்போது எட்டு பேர் வேண்டும், அடுத்து பதினாறு பேர், பின்னர் வெளியே வரும் போது முப்பத்திரெண்டு பேர் வெளியே வந்தவுடன் அறுபத்து நான்கு என்று நான்கின் மடங்கில் அதிகமாகிகொண்டே போகும் அதிசயம் நடைபெறும், அதே பெருமாள் திரும்பி வரும் போது அதே விகிதத்தில் எடை குறைந்து கொண்டே வரும்.

முனையார் சீயமாகி அவுணன் முரண் மார்வம் 
புனை வாளுகிரால் போழ்படஈர்ந்த புனிதனூர் 
சினையார் தேமாஞ் செந்தளிர் கோதிக்குயில் கூவும்
நனையார் சூழ்ந்த அழகான நறையூரே.

இப்பாசுரம் திருநறையூர் நம்பியையே ஆச்சாரியனாக பெற்ற திருமங்கையாழ்வார்  இந்த திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்த 110 பாசுரங்களுள் ஒன்று.

இவ்வாறு ஏன் நடைபெறுகின்றது. ஒரு விளக்கம் பெருமாள் மேதாவி முனிவருக்கு கொடுத்த வரம், தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளுகின்றாள் அன்னமோ நளினமான பறவை, பெருமாளோ கருடனில் எழுந்தருளுகின்றார். கருடன் பலம் மிகுந்த அதே சமயம் வேகமாக செல்லக்கூடிய பறவை. எனவே கருடன் அன்னத்தின் பின்னே செல்ல வேண்டுமல்லாவா? எனவே கல் கருடனின் எடை கூடிக்கொண்டே செல்கின்றது. ஆகவே இப்போதும் தாயாருக்கு முதலிடம் .

 இரண்டாவது விளக்கம். நாம் பெருமாளுடன் ஒன்றியிருக்கும் போது நம் வினைகளின் சுமை குறைவாக இருக்கும், அதுவே நாம் பெருமாளை விட்டு விலகி செல்லும் பொது அதுவே மிகப்பெரிய சுமையாகி விடுகின்றது என்பதை இது குறிப்பால் உணர்த்துகின்றது. அதாவது பூரண சரணாகதி ஒன்று தான் நாம் உய்ய ஒரே வழி என்பதைத்தான் இதுவும் உணர்த்துகின்றது.





அது போலவே பெருமாளை தாங்கி உலா வருவதால் கல் கருடன் முகத்தில் வியர்வை வரும் அதிசயத்தையும் காணலாம். எனவே கருடனுக்கு விசிறி வீசுகின்றர்.

திருநறையூர் நம்பியின் பேரெழிலை திருமங்கை மன்னன் பெரிய திருமடலில் பாடியவாறு

மன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல் பொன்னியலு மாடக் கவாடம் கடந்து புக்கு என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் - நோக்குதலும் மன்னன் திருமார்பும் வாயுமடியிணையும் பன்னுகரதலமும் கண்களும் - பங்கயத்தின் பொன்னியல் காடு ஓர் மணிவரை மேல் பூத்தது போல் மின்னொளி படைப்ப வீழ்நானும் தோள் வளையும் மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும் துன்னுவெயில் விரித்த சூளாமணியிமைப்ப மன்று மரகதக்குன்றின் மருங்கே - ஓர் இன்னிளவஞ்சிக் கொடியொன்று நின்றதுதான் அன்னமாய் மானாய் அணி மயிலாய்......

பெருமாளின் ஓடும் புள்ளேறி ஊர்ந்து வரும் அழகைக் கண் களிப்ப நோக்கி களியுங்கள் அன்பர்களே.

பொங்கேறுநீள்சோதிப் பொன்னாழிததன்னோடும் 
சங்கேறுகோலத் தடக்கைப்பெருமானை
 கொங்கேறுசோலைக் குடந்தைகிடந்தானை
 நங்கோனைநாடி நறையூரில் கண்டேனே.


திருநறையூரில் வஞ்சுளவல்லித்தாயாரையும், திருநறையூர் நம்பியையும், கல் கருடனையும் சேவித்த பின் அருகில் உள்ள திருவிண்ணகர் திவ்ய தேசம் சென்று ஒப்பிலியப்பனையும் பூமிதேவித்தாயாரையும் திவ்யமாக சேவித்தோம்.

 பின்னர் திருகண்ணமங்கை செல்லும் வழியில் திருச்சேறையில் சாரநாயகித்தாயார் சாரநாதப்பெருமாளை சேவித்தோம். அன்று சுதந்திர  தினம் என்பதால் ஒரு அரசியல் பிரமுகர் இவ்வாலயத்திற்கு விஜயம் செய்தார் என்று பெருமாளுக்கு தங்கக்கவசம் சார்த்தியிருந்தனர், நெடியோனாக நின்ற கோலத்தில் பஞ்சாயுதங்கள், பத்மத்துடன் தங்கக்கவசத்தில் பெருமாளை அருமையாக சேவிக்கும் பாக்கியம் பெற்றோம்.  அந்த அற்புத அனுபவத்தை எப்போதும் மறக்க முடியாது. இத்தலம் பஞ்ச சார க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகின்றது.  இக்கோவிலில் மட்டுமே பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் காணப்படுகிறார். இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்தது. இதனாலேயே இக்கோவிலின் மூலவர் சாரநாதப்பெருமாள் எனப்பட்டார். திருச்சாரம் என வழங்கப்பட்ட இத்தலம் "திருச்சேறை" ஆனது. மூலத்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயரும் இடதுபக்கம் காவிரித் தாயும் அமர்ந்துள்ளனர். கோவில் விமானம்: சார விமானம்; புஷ்கரணி: சார புஷ்கரணி. 

பிரளய காலத்தில் பிரம்மா இத்தலத்திலிருந்து மண்ணெடுத்து கடம் செய்து அதனுள் வைத்து வேதங்களைக் காப்பாற்றினார் என்பதும், காவிரித் தாயின் தவத்தின் பலனாக அவரது மடியில் பெருமாள் குழந்தையாகத் திகழ்ந்ததோடல்லாது அவருக்கு ஐந்து தேவியருடன் காட்சியளித்தார் என்பதும், மார்க்கண்டேயர் முக்தியடைந்த தலம் இந்த திவ்ய தேசம் ஆகும். அடுத்து எண்கண் என்னும் தலத்தில் நித்ய கருட சேவையில் ஆதி நராயணப்பெருமாளை சேவித்தோம், அந்த அனுபவத்தை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே. 


No comments: